<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ஆ - முதல் சொற்கள்
ஆக்கம்
ஆகம்
ஆகுலம்
ஆகுளி
ஆசினி
ஆசு
ஆட்டன்அத்தி
ஆடூஉ
ஆண்டலை
ஆணம்
ஆணு
ஆத்தி
ஆதன்
ஆதி
ஆதிமந்தி
ஆதிரை
ஆநியம்
ஆப்பி
ஆம்பல்
ஆம்பி
ஆமா
ஆமான்
ஆமூர்
ஆயம்
ஆயர்
ஆர்
ஆர்க்காடு
ஆர்கலி
ஆர்கை
ஆர்ப்பு
ஆர்பதம்
ஆர்வலர்
ஆரம்
ஆரல்
ஆரி
ஆரிடை
ஆரை
ஆல்
ஆலங்கானம்
ஆலம்
ஆலி
ஆலு
ஆவணம்
ஆவி
ஆவியர்
ஆவிரம்
ஆவிரை
ஆவினன்குடி
ஆவுதி
ஆழ்ச்சி
ஆழல்
ஆழி
ஆள்வினை
ஆளி
ஆற்று
ஆற்றுப்படுத்து
ஆறலை கள்வர்
ஆறு
ஆறெழுத்து
ஆன்
ஆன்பொருநை
ஆன்ற
ஆன்றிகம்
ஆன்றிசின்
ஆன்று
ஆனா

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
 
    ஆக்கம் - (பெ) 1. செல்வம், wealth, prosperity, fortune
                  2. விளைவு, பயன், produce
                  3. விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், progress, development
1.
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் - மது 196
(கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் செல்வம்
2.
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன
தோடு அமை தூவி தடம் தாள் நாரை - நற் 178/1,2
அசைகின்ற மூங்கிலில் விளையும் நெல்லை மெல்லிதாக பிசைந்து கொள்ள நின்ற தோகை போல
தாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால்
- அமை - மூங்கில், அதனிடத்து விளையும் நெல்லை ஆக்கம் என்றார் - ஔவை.சு.து.உரை விளக்கம்

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் - பட் 191
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் விளைபொருள்களும்
3.
நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே - நற் 286/6-9
நினைத்துப்பார்த்தால்
தம் நண்பர்களின் வளர்ச்சிக்காவும், அவரை அண்டியிருக்கும்
உனது தோள்கள் அணிகலன்களால் வனப்பெய்யவும்
அன்றோ தோழி! அவர் சென்றதன் நோக்கம்.

புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ - கலி 8/15-17
தமக்கு உயர்ச்சி மிகும்படியாகத் தாம் பெறும் பயனைப் பாராமல், அரசரின் வளர்ச்சிக்காகவே முயலும் அமைச்சரை
ஒரு வரையின்றிக் கோபிக்கும் பொழுதில் கருணையின்றி அவரின் உயிரைப் பறிக்கும்
அரசனின் வாழ்வு அழிந்துபோவதைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்

 மேல்
 
    ஆகம் - (பெ) மார்பு, breast
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே - குறு 274/8
அழகிய முலைகலைக் கொண்ட மார்பைத் தழுவிச் சென்றால்

 மேல்
 
    ஆகுலம் - (பெ) 1. பேரொலி, clamour, din
                    2. துன்பம், grief
1.
கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப - நற் 354/8-10
கடுமையான வெயிலில் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்பை ஏற்றிக்கொண்டு
நீண்ட வழிகளிலே செல்லும் வரிசையான உப்பு வண்டிகளைச் செலுத்தும் உமணர்
உப்பளத்து வெளிகளில் போகும் பேரொலியைப் போல
2.
நம் ஊர்க்கு எலாஅம்,
ஆகுலம் ஆகி விளைந்ததை - கலி 65/26,27
நமக்கு எல்லாம்
துன்பம்தரும் நிகழ்ச்சியாக முடிந்தது.

 மேல்
 
    ஆகுளி  - (பெ) இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது - a kind of small drum
இதை நுண்ணிதாக இயக்கவேண்டும் என்றும் இதன் ஓசை டும்,டும்; டும்டும் என்று 
இரட்டையாக ஒலிக்கும் என்றும் மதுரைக்காஞ்சி கூறுகிறது

நுண் நீர் ஆகுளி இரட்ட - மது 606
நுண்ணிய இயல்புள்ள ஆகுளி இரண்டிரண்டாக ஒலி எழுப்ப 

இதன் முகத்தில் விரலால் தட்டி ஒலி எழுப்பவர் என்று மலைபடுகடாம் கூறுகிறது

விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்து - மலை 140
விரல் ஊன்றிப் படிகின்ற ஒலியெழுப்பும் கண்ணையுடைய ஆகுளியைப் போன்று
பேராந்தைகள் இரட்டையாக ஒலிக்கும் நீண்டமலையின் சரிவுகளில்

     

 மேல்
 
    ஆசினி - (பெ) ஒரு வகைப் பலா, Bread-fruit tree, Artocarpus incisa
இது ஈரப்பலா என்றும் அழைக்கப்படும். 
இதன் மரம் நீண்டு உயர்ந்தது என்று கூறுகின்றன மலைபடுகடாமும், அகநானூறும்.

அரலை உக்கன நெடும் தாள் ஆசினி - மலை 139
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் - அகம் 91/12

இதனுடைய காய் குடம்போன்று இருக்கும் என்கிறது நற்றிணை.

குடக் காய் ஆசினி படப்பை - நற் 44/9
குடம்போன்ற காயையுடைய ஆசினிப்பலாவையுடைய தோட்டத்தில்

இதனுடைய பழம் மென்மையாக இருக்கும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா - கலி 41/12
ஆசினிப்பலாவின் மெல்லிய பழங்களில் நெகிழ்ந்தவற்றை உதிர்த்து

     

 மேல்
 
    ஆசு  - (பெ) 1. குற்றம், blemish 
                 2. பற்றுக்கோடு, support, hold
1.
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன - சிறு 74
குற்றமில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கத்தைத் தோய்த்ததைப் போல
2.
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ - புறம் 307/1
எமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தலைவன் எவ்விடத்தே உள்ளானோ?

 மேல்
 
    ஆட்டன்அத்தி - (பெ) சங்ககால நீச்சல் நடனக்காரன், an ancient synchronized swimmer

இவனது மனைவியின் பெயர் ஆதிமந்தி. இவர் பெயரில் ஒரு சங்ககாலப் புலவர் உண்டு.
(குறுந்தொகை - 31). 
கழார் என்ற காவிரி ஆற்றுத்துறையில் இந்த ஆட்டனத்தி மன்னன் கரிகாலன் முன்னிலையில்
நீரில் பல சாகசங்கள் செய்துகாண்பித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று வந்த வெள்ளத்தால்
அடித்துக்கொண்டுபோகப்படுகிறான். இவனது மனைவியான ஆதிமந்தி காவிரிக் கரையோரமாகவே
இவனைத் தேடிக்கொண்டு செல்கிறாள். ஆற்றில் அடித்துக்கொண்டுவரப்பட்ட ஆட்டன் அத்தியை
மருதி என்ற மீனவப்பெண் காப்பாற்றி அவனுடன் வாழ்கிறாள். இறுதியில் ஆதிமந்தி அவர்கள் 
இருப்பிடத்தைக் கண்டுபிடித்தபின், ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டு மருதி
கடலுள் மாய்ந்துகொள்கிறாள்.
இவர்களைப் பற்றிய விரிவான செய்திகள் பரணர் என்ற புலவரால் அகநானூறு 45, 76, 135, 222, 236, 376
ஆகிய பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
இவனின் மனைவியான ஆதிமந்தி கரிகாற்சோழனின் மகள் என்று கூறுவாரும் உண்டு.

ஏற்றியல் எழில்நடைப் பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை
ஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
கடல்கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனப்
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல - அகம் 236/14-20

 மேல்
 
    ஆடூஉ - (பெ) ஆண்மகன், ஆடவர். male
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் - பதி 86/4
கடுமை மிகுந்த ஆண்மகன் என்று கருதிக்கொண்டிருந்தேன் நான்

குவி இணர் எருக்கின் தகர் பூம் கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ - அகம் 301/11,12
குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களாலாய கண்ணி
ஆடவர் சென்னியை அழகுறுத்த

 மேல்
 
    ஆண்டலை  - (பெ) ஓர் ஆந்தை வகை, brown hawk-owl (Ninox scutulata), brown boobook

பாழடைந்த இடங்களில் வசிக்கும் ஆந்தையினப் பறவை.
ஓர் ஆணின் தலையைப் போன்ற தலையைக் கொண்டிருப்பதால் ஆண்டலை என்ற
பெயர் பெற்றதென்பர். (ஆண் + தலை = ஆண்டலை)

இது ஒரு விலங்கு என்பாரும் உளர். எனினும் கலித்தொகையில் ஆண்டலைப்புள் என்று குறிப்பாகச் 
சொல்லப்பட்டிருப்பதால் (ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ - கலிங்கத்.4:16)
இது ஒரு பறவையே என்பது பெறப்படும்.

ஒரு வகைக் காட்டுக்கோழி என்பாரும் உளர்.

சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் - மணி.6 : 75-77
என்கிறது மணிமேகலை. இங்கு கூகையும், குராலும் ஆந்தையின் வகைகள். எனவே ஆண்டலையும்
ஆந்தையின் இன்னொரு வகையாக என்பது பெறப்படும்.

கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித்து ஓட - (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-3)
என்ற பாடல்மூலம் இது உறுதியாகிறது.

பறவைநூலாராகிய க.ரத்னம் ஆண்டலையை ‘HAWK - OWL BROWN’ என ஆந்தை இனத்தைச் சேர்ந்த
ஓர் உயிரியாகவே அடையாளப்படுத்துகின்றார். (ரத்னம் க., 1998, தமிழில் பறவைப் பெயர்கள், 
உலகம் வெளியீடு, சூலூர், கோவை)

பெருவிழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச்
சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் - பட் 255-258
திருநாள் இல்லையான அச்சம் முதிர்ந்த மன்றத்தில்
சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடே அறுகம்புல் பரவி
நெருப்புப்போன்ற வாயையுடைய நரிகள் அச்சம்வரும்படி ஊளையிடவும்
அழுகுரல் கூகையோடு ஆண்டலைகள் கூப்பிடவும்

     

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

	பார்க்க : ஊமன் குடிஞை
	        குரால் கூகை	

 மேல்
 
    ஆணம் - (பெ) அன்பு, நேயம், love, affection

ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி - கலி 1/17
அன்பற்ற பொருளாகிய எம்மிடத்து வந்து பொருந்தி நின்றாய்

 மேல்
 
    ஆணு - (பெ) அழகு, beauty, இனிமை, Sweetness, deliciousness, pleasantness, agreeableness

வரி அரி ஆணு முகிழ் விரி சினைய
மா தீம் தளிரொடு வழையிலை மயக்கி - பரி 10/5,6
வரிகளையுடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டு அழகிய மொட்டுக்கள் மலர்ந்த கொம்புகளையுடைய
மாமரத்தினது காண்பதற்கினிய தளிர்களோடு வாழையின் இலைகளையும் மயக்கி

ஆணு - அழகு - புலியூர்க்கேசிகன் உரை
இந்த ‘ஆணு’ என்ற சொல் சில பதிப்புகளில் ‘யாணு’ என்று பிரிக்கப்பட்டுள்ளது.

 மேல்
 
    ஆத்தி - (பெ) கருங்காலி மரம், common mountain ebony, Bauhinia racemosa
அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை - குறி 87

     

 மேல்
 
    ஆதன் - (பெ) சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர், 
		A proper name in general use in ancient times.

வாழி ஆதன் வாழி அவினி - ஐங் 1/1
அடு போர் ஆனா ஆதன் ஓரி - புறம் 153/4
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன - புறம் 338/4
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும் - புறம் 71/13
ஆதனுங்கன் போல நீயும் - புறம் 389/13
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய - அகம் 216/14

 மேல்
 
    ஆதி - (பெ) 1. குதிரையின் நேர் ஓட்டம், Running of a horse in a straight course
                2. தொடக்கம், மூலம், beginning, source
                3. சங்ககால அருமன் என்பனின் தந்தை, father of Aruman of sangam period
                4. மல்லிநாட்டுக் காரி என்பனின் மகன், son of Kari of Malli land
1
அடி படு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் - மது 390,391
தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்
- ஆதி - குதிரை ஓட்டங்களில் ஒருவகை ஓட்டம் - அதாவது நேராக ஓடல் என்ப - பொ.வே.சோ விளக்கம்
2.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
- ஆதி அந்தணன் - பிரமன். அந்தணர் மரபுக்கு இவனே ஆதீயாதலின் இவ்வாறு பெயர் பெற்றான் - புலி.கேசிகன்
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை - கலி 96/36,37
3.
இந்த ஆதி என்பவன் அருமன் என்பவனின் தந்தை. அருமனின் ஊர் மூதூர் என்கிறது இப் பாடல். இந்த அருமன்
நற்றிணை 367-இல் குறிக்கப்பெறும் மூதில் அருமன் என்பர். 
பார்க்க : . அருமன்

ஆதி அருமன் மூதூர் அன்ன - குறு 293/4
ஆதி அருமன் என்பானின் மூதூர் போல,
4.
மல்லிகிழான் காரிஆதி என்பவனைப்பற்றி ஆவூர் மூலங்கிழார் புறம் 177-இல் பாடியுள்ளார்.
காரி என்பவன் ஆதியின் தந்தையாதல் வேண்டும். இவன் ஒரு வள்ளல்.
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு - புறம் 177/12
பெரிய பெயரை உடையனாகிய ஆதியினது பிணங்கிய அரில்பட்ட காட்டையுடைய குடநாட்டின்கண்

 மேல்
 
    ஆதிமந்தி  - (பெ) - பார்க்க - ஆட்டன்அத்தி
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று - அகம் 45/13, 14
காதலனைக் காணாமற்போக்கிய சிறுமையோடு, மிக்க வருத்தமுற்று
ஆதிமந்தியைப் போல கலக்கமுற்று

ஆதிமந்தி பேது உற்று இனைய - அகம் 76/10
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி - அகம் 135/5
ஆதிமந்தி காதலன் காட்டி - அகம் 222/10

 மேல்
 
    ஆதிரை - (பெ) திருவாதிரை - ஒரு நட்சத்திரம், The 6th nakṣatra, part of Orion
இந்திய வானியலில் பேசப்படும் 27 விண்மீன்களுள் ஆறாவது விண்மீன் ஆதிரையாகும். மேற்கத்திய
வழக்கில் இது Betelgeuse எனப்படும். ஓரியன் குழும விண்மீன்களில் தலைப்பக்கத்தில் வலப்பக்கம்
இருக்கும் பெரிய விண்மீன் இது.

மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/77,78
பெரிய களங்கமாகிய மறுவோடு விளங்கும் திங்களின், திருவாதிரைநாளில்
விரிந்த நூலோரான அந்தணர் விழாச் செய்தலைத் தொடங்க

 மேல்
 
    ஆதிரையான்  - (பெ) திருவாதிரை மீனுக்குரிய சிவன், Lord Siva of this star
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த - கலி 150/20

 மேல்
 
    ஆநியம் - (பெ) மழை பெய்வதற்குரிய நல்லநாள்

நிலம் பயம் பொழியச் சுடர் சினம் தணியப்
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்பு மெய்யகலப் பெயல்புரவு எதிர் - பதி 69/13 - 15
நிலம் தன் பயனைக் கொடுக்க, ஞாயிறு வெப்பம் தணிய
நல்ல பயனைச் செய்யும் வெள்ளி எனும் கோள் மழைக்குக்காரணமாகிய ஏனைக் கோள்களுடன் நிற்க,
வானம் மேகங்களால் நிரம்ப, மழை தன் புரக்கும் செயலைச் செய்ய

 மேல்
 
    ஆப்பி - (பெ) பசுவின் சாணம், cow's dung
அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே - புறம் 249/13,14
அழுதல் நிற்காத கண்ணையுடையவளாய்
மெழுகுகிறாள் சாணத்தைத் தன் கண் சிந்தும் கண்ணீரால்

 மேல்
 
    ஆம்பல்  - (பெ) அல்லி, Water-lily, nymphaea lotus 
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் - நற் 6/1
நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டு

      

 மேல்
 
    ஆம்பி  - (பெ) 1. காளான், common mushroom
                       2. நீர் இறைக்கும் சால், பன்றிப்பத்தர், irrigation bucket
1.
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் - பெரும் 157
குடைக்காளானின் வெண்மையான முகைகளைப் போன்று குவிந்த மொட்டுகளையுடைய
2.
நீர்த்தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்
தோடுவழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும் - மது 89-92
நீரினை முகக்கின்ற வரிசையான தொழிலாளிகள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்தோடு
இயங்கும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசையும்
குளம் குறைந்துபோகுமாறு வயலை நிறைக்கும்

         
 மேல்
 
    ஆமா - (பெ) 1. காட்டுப்பசு, wild cow
                  2. காட்டில் மேயும் பசு, cows grazing in forest
1. 
தினைவிளை சாரல் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல் - மது 291-293
தினை விளையும் மலைச்சாரலில் வந்து வீழும் கிளிகளை ஓட்டும் ஓசையும்,
மணி போன்ற பூவினையுடைய அவரையின் நிறம் மிக்க தளிரைத் தின்னும்
காட்டுப்பசுக்களை ஓட்டுகின்ற கானவர் ஓசையும்
2.
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு வரை நன் புல் ஆர - புறம் 117/4,5
மனையிடத்துக் கன்றினை ஈன்ற அமர்த்த கண்களையுடைய
ஆமா நெடிய மலையில் நல்ல புல்லை மேய

 மேல்
 
    ஆமான் - (பெ) காட்டுப்பசு - பார்க்க - ஆமா
பனைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து
மடக் கண் ஆமான் மாதிரத்து அலறத்
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி - அகம் 238/5-8
பனம் துண்டினைப் போன்ற பிடரியினையுடைய பலவரிகளையுடைய பெரிய ஆண்புலி
மடப்பம் பொருந்திய கண்களையுடைய காட்டுப்பசு அலற
வளைந்த கொம்பினையுடைய, காட்டுப்பசுவின் தலமைப்பண்புள்ள காளையை
அகன்ற இடமுள்ள காட்டினில் வலப்பக்கம் வீழக் கொன்று

 மேல்
 
    ஆமூர்  - (பெ) திண்டிவனத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர், a city near Thindivanam
இதே பெயரில் வேறு சில ஊர்களும் இருந்திருக்கின்றன

அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் - சிறு 188
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் - ஐங் 56/2
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் - அகம் 159/19
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் - புறம் 80/1

 மேல்
 
    ஆயம் - (பெ) 1. ஒருவரைச் சேர்ந்த கூட்டத்தார், fraternity
                   2. தோழியர் கூட்டம், female companions
                   3. (விலங்கினங்களின்)தொகுதி
1.
செல்வ, சேறும் எம் தொல்பதிப் பெயர்ந்து என
மெல்லெனக் கிளந்தனமாக, வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு - பொரு 121 - 124
மன்னனே! யாங்கள் எம் பழைய ஊருக்குச் செல்வோம் என்று
மெல்லச் சொன்னபோது, விரைந்து
போகின்றீரோ எம் கூட்டத்தாரைவிட்டு என்று
வெகுண்டவனைப் போன்று எம்மை வருத்தும் பார்வையுடனே
2.
மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் - நற் 115/1,2
விரிந்த பொய்கையிலுள்ள பூக்களைக் கொய்துவந்த சோர்வினால்
வருந்திய தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க
3.
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் - அகம் 54/9
ஒலிக்கின்ற மணிகள் கட்டிய கழுத்தையுடைய பால்தரும் பசுக்களாகிய கூட்டம்

 மேல்
 
    ஆயர் - (பெ) இடையர், cowherds
மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை
அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் - கலி 102/30,31
அறியாமை உடையோரே இந்த நல்ல இடையர் பெருமக்கள், நேற்று
கொல்லுகின்ற காளையை அடக்கி அதன் கழுத்தில் ஏறினவர்களைக் கண்டும்

 மேல்
 
    ஆர் - 1. (வி) 1 நிறை, become full
                   2. நிறைவாக உண், eat gratifyingly 
                   3. கொண்டிரு, be characterized by
                   4. பொருந்து, to combine with , belong to
                   5. நுகர், அனுபவி, experience, enjoy
                   6. மிக்கு ஒலி shout, roar
                   7. பரவு, spread over
         - 2. (பெ.அ) 1. அரிய, difficult
                      2. மிகுந்த, great
         - 3. (வி.பெ) யார், who 
         - 4. (பெ) 1. மலரின் புல்லிவட்டம், Calyx
                   2. அழகு, beauty
                   3. ஆரம், spoke of a wheel
                   4. ஆத்திமரம், common mountain ebony    

1.1
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் - சிறு 65
கண்ணுக்கு நிறைந்த தலைமாலையையுடைய கடிய தேரை உடைய செழியன்
1.2.
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் - பெரும் 175
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையுடைய, கூழை விரும்பி உண்ணும் இடையன்
1.3
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ - குறு 216/3
நானே, தொகுதியைக் கொண்டிருக்கும் ஒளியையுடைய வளையல்கள் நெகிழ 
1.4
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து - ஐங் 71/1
வஞ்சகம் பொருந்திய குறிய வளையலையுடைய, அஞ்சுவதற்குக் காரணமான நடையையுடைய
1.5
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் - பரி 8/40
தெவிட்டாத காம இன்பத்தை நுகர்ந்து இன்புறும் சோலையாகிய படுக்கை
1.6 
வாகை ஒண்பூப் புரையும் உச்சிய
தோகை ஆர் குரல் - பரி 14/7,8
வாகையின் ஒள்ளிய பூப்போன்ற உச்சிக்கொண்டையைக் கொண்ட
மயில்களின் ஆர்ப்பரிக்கும் ஒலி
1.7
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான் - பரி 16/44
வடுப்பட்டாற்போல கத்தூரிச் சாந்து பரவிக்கிடந்த மார்பினன்
2.1
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள - மது 367
வேறுபட்ட பல பெயர்களையுடைய அழித்தற்கு அரிய அரண்களைக் கைக்கொள்ளக்கொள்ள
2.2
ஆர் கலி வானம் தலைஇ - நற் 53/5
மிக்க முழக்கத்துடன் மழைபெய்யத் தொடங்கி
3.
ஆர் தர வந்தனன் ஆயினும் - நற் 119/4
யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்
4.1
புதுமலர், ஆர் கழல்பு உகுவ போல - குறு 282/7
புதிய மலர்கள், தம் காம்பினின்றும் கழன்று உதிர்வதைப் போல
4.2
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி - பரி 18/30
அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்புக்கூடு
4.3
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி - அகம் 14/19
கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆர்க்கால்களையுடைய சக்கரம்
4.4
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் - அகம் 269/10
அம்பினால் அறுத்தெடுத்த ஆத்திமரத்தின் பட்டையாகிய நாரினால்

 மேல்
 
    ஆர்க்காடு - (பெ) பண்டைத் தமிழகத்தில் இருந்த வளப்பமான ஓர் ஊர், a fertile ancient city
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு - நற் 190/5,6
வண்டுகள் மொய்க்க மலரும் நெய்தல் பூக்கள் நெற்பயிர்களுக்கிடையே மலர, அவற்றினின்றும்
தேன்வடியும் அழகிய வயல்களுள்ள ஆர்க்காடு எனும் ஊர்

ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன  - குறு 258/4-7
ஏந்திய மருப்பினையுடைய யானைகளுடைய சேந்தன் என்பானின் தந்தையான,
தேறலாகிய இனிய உணவினைக் கொண்ட, அழகிய கூட்டங்களான விலங்குகளை வேட்டையாடுகின்ற
வரிசையான வாள்களை உடைய வீரர்களுக்குத் தலைவனான,
அழிசியின் ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற

 மேல்
 
    ஆர்கலி - (பெ) 1. வெள்ளம், floods
                    2. கடல், sea
                    3. மிகுந்த ஆரவாரம் (ஆர்+கலி) loud noise
1.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் - நெடு 2,3
பொய்க்காத மேகங்கள் புதிய மழையைப் பெய்ததாக
வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலையுடைய இடையர்கள்
2.
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் - புறம் 400/19
கருமையான கழியின் வழியாக வந்திறங்கும் கடல் ஓடங்கள்
3.
தீம்பெயல், காரும் ஆர்கலி தலையின்று - அகம் 54/3
இனிய மழையை, மேகமும் மிக்க ஒலியுடன் பெய்தது

 மேல்
 
    ஆர்கை - (பெ) உண்ணுதல், eating
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய - நற் 159/7
கொழுவிய மீனை உண்டலை உடைய வளவிய மனைக்கு மெல்லச் சேறற்கு

அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் - புறம் 391/6
கள் உண்போர் உடனுண்டு மிகவும் இன்புறும்

 மேல்
 
    ஆர்ப்பு - (பெ) ஆரவாரம், பேரொலி, loud, tumultuous noise
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு - மது 619
சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே

தலைவன் - தலைவிக்குள்ள மறைவான காதல் ஒழுக்கத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட ஊர்ப்பெண்கள்
பேசுகின்ற பழிச்சொற்கள் முதலில் அம்பல் என்றும் பின்னர் ஊரார் அறிந்து பேசும் பேச்சு அலர் என்றும்
கூறப்படும். இவ்வாறு அம்பலும், அலரும் ஊர் முழுதும் பெரிதும் பேசப்படுகிறது என்பதைத் தலைவனுக்கு
உணர்த்தவந்த தலைவியோ, தோழியோ, இந்தப்பேச்சு ஒரு பெரும்பொரில் வெற்றிகொண்டவர் எழுப்பும்
ஆரவாரத்தினும் பெரிதாக இருந்தது என்று கூறுவது வழக்கம். இத்தகைய செய்திகளின் மூலமாக, அன்றைக்கு
நடந்த பல போர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி
அலவன் சிறு_மனை சிதைய புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவ சிலவே அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே - குறு 328/8
சிறிய மலரையுடைய ஞாழல்மரத்தின் வேரில் அமைக்கப்பட்ட வளையில் படுத்திருக்கும்
நண்டினுடைய சிறிய வீடு சிதையுமாறு, அலைகள்
குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசைப்போல முழங்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
அருள்புரிந்த நாட்கள் மிகச் சிலவே!, இதனால் எழுந்த பழிச்சொல்லோ,
விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்
அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின்
புலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட
ஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது.

ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே - குறு 393/6
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே - அகம் 36/23
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே - அகம் 45/12
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே - அகம் 116/19
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என - அகம் 209/6
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே - அகம் 226/17
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே - அகம் 246/14
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் - அகம் 253/7
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே - அகம் 256/21

என்பன போன்ற அடிகள் அகச்செய்தியைக் காட்டிலும் நிறைய புறச்செய்திகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

 மேல்
 
    ஆர்பதம் - (பெ) உணவு
ஆர்தல் = உண்ணுதல்; பதம் = பக்குவமான உணவு
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக - குறு 83/1
அரிதின் பெறக்கூடிய அமிழ்தம் .உண்ணும் உணவு ஆகுக

நெல்லின், ஆர்பதம் நல்கும் என்ப - பதி 66/9 
நெல்லாகிய உணவை, நிறையக் கொடுப்பன் என்பர்

 மேல்
 
    ஆர்வலர் - (பெ) அன்பு செலுத்துகிறவர்கள், those who love
ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம்கொடுத்தன்றே  - திரு 92-94
ஒரு முகம்
(தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து,
(அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது;

 மேல்
 
    ஆரம் - (பெ) 1. கழுத்தில் அணியும் அணிகலன் - மணிவடம், பூமாலை, வளையம், necklace, garland, neckring
                 2. ஆரக்கால், spoke of a wheel
                 3. சந்தனம் - மரம், குழம்பு sandalwood tree, paste
1. 
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி - பதி 48/2
ஒள்ளிய நெற்றியையுடைய விறலியர்க்கு பொன்னரிமாலைகள் அணிவித்து
2.
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு - சிறு 253
ஆரக்கால்களைச் சூழ்ந்த கூரிய வாயையுடைய சூட்டினையுடைய சக்கரத்தோடே
3.
குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும் - பட் 188
மேற்குமலையில் வளர்ந்த சந்தனமரமும், அகில் மரமும்

ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் - நற் 344/6
சந்தனக்குழம்பு பூசிய அழகு விளங்கும் மார்பு

 மேல்
 
    ஆரல் - (பெ) 1. ஆரால் மீன், Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata
                  2. கார்த்திகை, The third nakṣatra  பார்க்க  ஆல்-2
1.
ஆரல் மீன் ஒரு நன்னீர் வாழ் மீனாகும். இம்மீன் எலும்பு மீன் வகையைச் சார்ந்தது. இதனை எலும்பு மீன்,
முள் விலாங்கு, சிறு விலாங்கு என்றும் அழைப்பர். ஆரல் மீன் எலும்பு மீன்களில் osteiich thyes வகுப்பில்
முழு எலும்பு மீன்களின் - Teleosteli - மேல்வரிசையில் Masta Cembalofirmes வரிசையில் Masta cembrnlidae
குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல் மீன் அதிக நீளத்துக்கு வளராது. சராசரியாக 50-120 செ.மீ
நீளத்துக்கு வளரும். இது பச்சை அல்லது பழுப்பு மேற்புறத்தையும் மஞ்சள் கலந்த வயிற்றுப் பகுதியையும்
கொண்டது. புள்ளிகளைக் கொண்ட பழுப்பு நிற ஆரல் மீனும் உண்டு. ஆரல்மீன்கள்தாவர உணவையே விரும்பி
உண்ணும் தன்மையுடையவை 
- நன்றி - சங்க இலக்கியத்தில் நீர்வாழ் இடம்பெயரும் உயிரினங்கள் - 
- https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/148095/11/11_chapter%205.pdf

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு - குறு 25/4,5
ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
நாரையும் உண்டு

	
2.
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
நீலமணிபோலும் கழுத்தை உடைய தலைவனுக்கு மதிப்புள்ள கார்த்திகைப் பெண்களிடத்தில் பிறந்தவனே

 மேல்
 
    ஆரி - (பெ)  கடினமானது, கடினம், difficulty
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
ஆடுகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் கடினமான இறங்குவழிகள்

 மேல்
 
    ஆரிடை - (பெ) கடினமாதை பாதை, அரிய வழி, Difficult or rugged path
(ஆர் + இடை = ஆரிடை, கடினமான இடைவெளி)

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி - குறு 356/1,2
நிழல் முற்றும் இல்லாமற்போன நீர் இல்லாத அரிய வழியில்
கழலையணிந்தவன் காக்க, விரைந்து சென்று

 மேல்
 
    ஆரை - (பெ) 1. புல்லால் செய்யப்பட்ட பாய், Mat made of rushes
                   2. அச்சு, axle wood
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் - பெரும் 50
பாயால் வேயப்பட்ட தரையை அறைத்துக்கொண்டுசெல்லும் வாயினையுடைய வண்டி

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் - புறம் 60/8
அச்சினையுடைய வண்டியின் அழுந்துதலைப் போக்கும்

 மேல்
 
    ஆல்  - (பெ) 1. மிகுதி, plenty
                   2. கார்த்திகை நட்சத்திரம், The sixth of the 27 stars - பார்க்க  ஆரல்-2
                   3. ஆலமரம், banyan tree
1.
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப - அகம் 365/1
அகலம் வாய்ந்த வானத்தில் மிக்க இருள் பரக்க
2.
வடவயின் விளங்கு ஆல் உறை எழுமகளிருள் - பரி 5/43
வடதிசையில் விளங்கும் கார்த்திகை மகளிர் எழுவருள்ளும்
3.
ஆல் கெழு கடவுள் புதல்வ - திரு 256
ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்கடவுளின் புதல்வனே!

 மேல்
 
    ஆலங்கானம் - (பெ) தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர். An ancient city in Tamilnadu
இவ்வூர் தலையாலங்கானம் என்றும் அழைக்கப்படும். நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன்
சேர, சோழ மன்னர்களையும், அவருடன் வந்த மற்ற ஐந்து சிற்றரசர்களையும் சேர்த்து எழுவரை
இந்த இடத்தில் நடந்த போரில் வென்றான். அதனால அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் என்று அழைக்கப்படுகிறான்.
இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர்.

எழு உறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேர எழுவர் அடைப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என - அகம் 209/4-6
கணையமரத்தை ஒக்கும் திண்ணிய தோளினையும், நன்கு இயன்ற தேரினையுமுடைய செழியன்
பகைத்த எழுவரையும் முற்ற வென்ற
தலையாலங்கானத்து எழுந்த வெற்றியாரவாரத்திலும் பெரிது என்று கூறி

 மேல்
 
    ஆலம் - (பெ) ஆலமரம், Banyan Tree
புது கலத்து அன்ன கனிய ஆலம் - ஐங் 303/1
புதிய மண்கலத்தைப் போன்ற பழங்களையுடைய ஆலமரம்

 மேல்
 
    ஆலி - (பெ) ஆலங்கட்டி, hailstone
யானைப், புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப - அகம் 108/4,5
யானையின் புள்ளியையுடைய முகத்தில் மோதி வீழ்ந்த புதிய ஆலங்கட்டி
பளிங்கினைச் சொரிவதுபோல் பாறையில் விழுந்து கோலமிட

 மேல்
 
    ஆலு  - (வி) 1. ஒலி, make sound
                   2. களிகூர், rejoice  
                   3. ஆடு, dance
1.
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் - நற் 9/10
மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவிவிளையாடும்
2.
வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் - ஐங் 85/2
வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்தெழும் ஓசையையுடைய பெட்டைக்கோழி
குளிர்ந்த நறிய பொய்கையில் தனது இனத்தோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும்
3.
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் - பெரும் 495
மயில்கள் ஆடும் மரங்கள் நிறைந்த குறுங்காட்டில்

 மேல்
 
    ஆவணம் - (பெ) 1. பத்திரம், document, record
                     2. கடைத்தெரு, Market
1.
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் - அகம் 77/8
கயிற்றால் பிணிக்கப்பட்ட குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கொள்வதற்கு
அக் குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் ஓலை ஆயும் மக்களைப் போன்று
2.
மல்லல் ஆவணம் மாலை அயர - நெடு 44
வளப்பத்தையுடைய அங்காடித்தெருவெல்லாம் மாலைக்காலத்தைக் கொண்டாட

 மேல்
 
    ஆவி - 1. (வி) கொட்டாவி விடு, yawn
            2. (பெ) 1. புகை,  smoke 
                   2. கானல்நீர், mirage
                   3. வேளிர்தலைவருள் ஒருவன், An ancient chief of the Vēḷ.tribe;
1.
சிறுவெண் காக்கை ஆவித்து அன்ன - நற் 345/4
சிறிய வெள்ளைக் கடற்காக்கை கொட்டாவி விட்டதைப் போல
2.1.
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ - பரி 10/72
தீயில் எரிந்த அகில்மரக்கட்டைகளின் புகை சோலையில் பரவ
2.2.
கனைகதிர், ஆவி அம் வரி நீர் என நசைஇ - அகம் 327/9
ஞாயிற்றின் மிக்க வெப்பத்தால் தோன்றும் பேய்த்தேரின் அலைகளை நீர் என்று விரும்பி
2.3.
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி - அகம் 61/15
முழவைப் போன்ற திண்ணென்ற தோள்களையுடைய நெடுவேள் ஆவி என்பான்

 மேல்
 
    ஆவியர் - (பெ) 1. வேள் ஆவி என்பானின் மரபினர், A family descended from Avi of Pothini mountains
                   2. நறுமணப்புகை ஊட்டியவர், those who apply fragrant fumes
1.
பேகன் என்ற வள்ளல் இந்த குடியில் வந்தவன்
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெரும் கல் நாடன் பேகனும் - சிறு 85-87
காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த	
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்,
பெரிய மலை நாட்டையுடைய பேகனும்
2.
கை புனை தாரினர் கண்ணியர்
ஐ எனும் ஆவியர் ஆடையர் - பரி 24/11,12
(பெண்கள்)திறம்படக் கையால் புனையப்பட்ட மாலை சூடியவராய், (ஆண்கள்)தலை மாலை சூடியவராய்,
(பெண்கள்)வியத்தகுவகையில் நறுமணப்புகை ஊட்டிக்கொண்டவராய், (ஆண்கள்)வியத்தகு ஆடை அணிந்தவராய்,

 மேல்
 
    ஆவிரம் - (பெ) ஒருவகைச் செடி, அதன் பூ - பார்க்க  ஆவிரை
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி - கலி 140/7
பொன் தகட்டின் பளபளப்பைப் போன்றிருக்கும் ஆவிரம் பூவால் செய்த தலை மாலையைச் சூடி,

 மேல்
 
    ஆவிரை - (பெ) செடிவகை, Tanner's senna, Cassia auriculata;
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த - குறு 173/1
பொன் போன்ற ஆவிரையின் புது மலர் சேர்ந்த

	

 மேல்
 
    ஆவினன்குடி  - (பெ) முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று, பழனி, The city of Pazhani
இது பொதினி என்றும் அழைக்கப்படும். ஆவி என்பானின் தலைநகரம் பொதினி. ஆவி நன் குடி
என்பதுவே ஆவிநன்குடி என்றாகிப் பின்னர் ஆவினன்குடி என்றானது என்பர்.
பார்க்க -  ஆவி 2.3

ஆவினன்குடி அசைதலும் உரியன் - திரு 176
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன்

 மேல்
 
    ஆவுதி - (பெ) யாகத்தீயில் இடப்படும் பொருள், Oblation offered in the consecrated fire.
இது ஆகுதி என்றும் அழைக்கப்படும்.
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் - பட் 200
நீத்தாரை நினைந்தும், அவருக்குப் பலியுணவு செலுத்தியும்

 மேல்
 
    ஆழ்ச்சி - (பெ) (மாட்டுவண்டிச் சக்கரம்) சேற்றில் ஆழப்புதைதல்,
                (bullock cart wheel) getting stuck in mud deeply
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன - புறம் 60/8,9
ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச்செல்லும்
வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒக்கும்

 மேல்
 
    ஆழல் - 1. (வி.வி.மு) 1. அழவேண்டாம், do not cry
                          2. ஆழ்ந்து வருந்தவேண்டாம், do not grieve deeply
                          3. துன்பத்துள் ஆழ்ந்திடாதே / அழுந்திடாதே, do not get immersed into grief
           - 2. (பெ) 1. ஆழ்தல், the state of being deep
                    2.. கறையான், white ant
1.1.
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி - நற் 197/4,5
திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதல்பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தெளிந்துகொண்டோம் என்று
அழாதேகொள், தோழீ
- பின்னத்தூரார் உரை

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே - நற் 391/1
அழாதேகொள், அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொள்ளுமாரு செல்வதனை இன்னேஒழிகுவார்காண்.
- பின்னத்தூரார் உரை
1.2.
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி - நற் 197/4,5
அவர் நம்மை மறந்தார் என்பதைத் தெளிய உணர்ந்துகொண்டோம், தேய்ந்து கெடுக என் உயிர் என்று
வருந்தாதேகொள், வாழி, தோழி
 - ஔ.சு.து.உரை

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே - நற் 391/1
ஆழ்ந்து வருந்தற்க மடந்தையே!, அவர்செலவு மேற்கொள்ளாமல் அழுங்குவராகலான்
- ஆழல் - அல் ஈற்று எதிர்மறை வியங்கோள் - ஔ.சு.து.உரை
1.3.
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி - அகம் 61/4,5
தலைவர் பிரிந்த நாளைக் குறித்து வைத்த நீண்ட சுவரினை நோக்கி, வருந்தித்
துன்பத்து ஆழ்ந்திடாதே , வாழ்க தோழி
- நாட்டார் உரை

அறவர் அல்லர் அவர் என பல புலந்து
ஆழல் வாழி தோழி - அகம் 85/4,5
அவர் அறத்தினர் அல்லர் என்று இவ்வாறு பலவும் கூறி வெறுத்துத்
துயரில் அழுந்தாதே
- நாட்டார் உரை
2.1.
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் - புறம் 152/5
ஆழ்தலையுடைய புற்றின்கண் கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்
2.2.
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் - புறம் 152/5
கறையான் புற்றின்கண் கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்
- ஆழல் - கறையான் - தமிழ்ப்பேரகராதி - Tamil Lexicon
- ஆழல் - கரையான், தாழ்தல் - கதிர்வேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி

 மேல்
 
    ஆழி - (பெ) 1. சக்கரம், wheel
                  2. கடல், sea
                  3. மோதிரம், ring
1.
அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி - நற் 11/7
கடற்கரையில், தேரின் சக்கரத்தில் படாதவாறு நண்டுகளை விலக்கி
2.
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி - குறு 372/4
கடல் மேலே எறிந்த கருமணலாகிய சேறு ஒழுகியோடிவதால் ஏற்பட்ட அருவி
3.
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் - பரி 7/46
கைவளைகள், மோதிரங்கள், தலை அணிகள், அணிந்துள்ள துகில்கள்

 மேல்
 
    ஆள்வினை - (பெ) பொருளீட்டும் முயற்சி, manly effort or enterprise to earn money
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனைய ஆகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே - நற் 69/7-12
பெருமிதம் கொண்ட நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசை
வளைந்த கோலையுடைய கோவலரின் குழலோடு சேர்ந்து
மெல்லிதாக வந்து ஒலிக்க, இவ்வாறான இரக்கமற்ற மாலைப்பொழுது
பொருளீட்டும் முயற்சியால் பிரிந்து சென்றோர் சென்ற நாட்டிலும்
இப்படியே தோன்றுமாயின்
தன் செயலில் உறுதிகொண்டு தங்கியிருக்க அவரால் முடியாது.

ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகல
வருவர் - அகம் 255/7-9
பொருளீட்டும் முயற்சிபற்றி நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், பல நாள்
தாழ்க்காது, நமது மிக்க துன்பம் நீங்க
விரைந்து வந்துறுவர்

 மேல்
 
    ஆளி - (பெ) யாளி, A fabulous animal
அரிமா என்ற சிங்கம் என்று சொல்வோரும் உண்டு.
அனைத்து விலங்குகளிலும் வலிமையுள்ளது என்று கருதப்படும் விலங்கு.

ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்து வெண்கோட்டு வயக்களிறு இழுக்கும் - நற் 205/2-4
ஆளியென்னும் விலங்கு வேட்டைக்காக எழுந்த கொல்லவல்ல நகங்களையும்
அழகிய வரியையுமுடைய புலியை அடித்துக்கொன்ற கூரிய நகத்தையுடைய
ஏந்திய வெள்ளைக் கொம்புகளையுடைய வலிமையுள்ள யானையை இழுத்துச்செல்லும்

     

 மேல்
 
    ஆற்று - (வி) 1. தாங்கு, பொறு, bear
                 2. கொடு, அளி, give, as alms, to help, assist  
                 3. உலர்த்து, புலர்த்து, dry
                 4. போக்கு, நீக்கு, remove, (பசி முதலியவற்றைத் தணி) assuuage, appease, alleviate, mitigate
                 5. செய், do prform
                 6. செய்ய இயலு, be possible to do
                 7. நேர்படு, ஒப்பாகு, be equal to, be comparable
                 8. போதியதாகு, be sufficient
                 9. ஆறவை, வெம்மை தணிய வை, cool
                 10. உதவு, provide help
                 11. நடத்து, lead
                 12. நிகழ்த்து, deliver (speech)  
1.
மை பட்டு அன்ன மா முக முசு கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு நாடன் - குறு 121/2-4
மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு
கிளை தாங்கும்படி தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த
கிளைக்கு ஆகினாற்போன்று,

நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற - ஐங் 227/2-4
உன் நல்ல நெற்றி பசந்துபோகவும், நறிய தோள்கள் மெலிவடையவும்,
பொறுக்கமாட்டேன் நான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு,
நம்மை பிரிந்து வாழ்ந்தவர் அவர் உறுதியாக

கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே - ஐங் 12/1-3
கரையைச் சேர்ந்து வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியானது கரும்பினைப் போல் பூக்கின்ற
துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையினைப் பெரிதும்
பொறுத்துக்கொண்டிருப்போம் நாம்,
2.
வரி வண்டு
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி - கலி 66/2-4
இசைக்கும் வண்டுக்கு,
ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்
அங்கிருக்கும் வண்டுகள் விருந்தளிக்க, அதனை உண்டு பகலில் தங்கி,
3.
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு
ஐது வரல் அசை வளி ஆற்ற - அகம் 102/3,4
பூசிய மயிர்ச்சாந்தினையுடைய பரத்த கரிய கூந்தலை
மெல்லென அசைந்துவரும் காற்றுப் புகுந்து புலர்த்த
4.
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே - நற் 84/10-12
தாம் தமியராய்ச் செல்லுவர் எனக் கூறுவர், தம்பால்
வந்து இரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது நசையை ஒழித்தற்கு
இல்வாழ்க்கையிலே பயின்றறியாத நமது தலைவர்.
- பின்னத்தூரார் உரை

செல்குவர் என்பர் தம்பால் போந்து
இரந்தவரது இன்மையைப் போக்கமாட்டாத
இல்லின்கண் வறுமையுற்று வாழும் வாழ்க்கையை விரும்பாதார்
- ஔவை.சு.து.உரை

ஊணும் ஊணும் முனையின் இனிது என
பாலில் பெய்தவும் பாகில் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தெனம் ஆக - புறம் 381/1-4
இறைச்சியும் சோறுமாகியவற்றைத் தெவிட்டி வெறுத்தால், இனிமையானவை என
பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமாகிய பண்ணியங்களை
நன்கு கலந்து மென்மையுண்டாகக் கரைத்துக் குடித்துண்டு
விருந்தாகி பசியினைப்போக்கி பன்னாள் இருந்தெனமாக
5.
அவரொடு பேணி
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே - குறு 305/2-4
அவரை விரும்பிச்
சென்று நாம் தழுவிக்கொள்ள முடியாமற்போனவளானேன்;
இங்கு வந்து என் துன்பத்தைத் தீர்த்தலை அவர் செய்தாரில்லை

இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாது
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் - பதி 28/5,6
காவல்காட்டைக் காக்கும் தொழிலை இனிதே செய்து, நாட்டினில் விளைச்சல் குறைவின்றி இருக்க,
வீட்டைவிட்டுப் பிரியாத வாழ்க்கையுடன் நீ ஆட்சி செய்வதால் 
6.
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே - நற் 84/10-12
செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில்
இல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்றுவதற்கு இயலாத
இல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.
- புலியூர்க்கேசிகன் உரை
7.
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் - புறம் 358/3,4
உலகியலாகிய இல்லறத்தையும் தவ வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால்
தவத்துக்கு வையம் சிறு கடுகளவும் நேர்படாதாம்
8.
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண் இவர் விசும்பின் மீனும்
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே - புறம் 302/9-11
தன் வேலால் களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்குமிடத்து
முகில்கள் பரந்துலவும் விழும்பிலுள்ள மீனும்
குளிர்ந்த மழை சொரியும் துளிகளும் உறை போடப் போதாது.
- விண்மீன் தொகையும் மழைத்துளியின் தொகையும் உறையிடற்காகா என்பர்
- ஔவை.சு.து.உரை விளக்கம்.
9.
அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி - பெரும் 275,276
குற்றாத அரிசியை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆறவைத்து,
10.
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி - நற் 69/1
பல கதிர்களையுடைய ஞாயிறு பகற்பொழுதைச் செய்து
ஞாயிறு மண்டிலம் பகற்போதினைச் செய்வதாகிய தன் தொழிலைச் செய்ய்மாற்றால் ஏனை மாவும் புள்ளும்
மக்களும் பிறவும் தத்தமக்குரிய தொழிலைச் செய்யுமாறு உதவுதலால் செய்து என்று ஒழியாது
செய்து ஆற்றி என்றார்  - ஔவை.சு.து. உஅரை விளக்கம்

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் - புறம் 58/20
நும்முள் ஒருவீர் ஒருவீர்க்கு உதவுவீராக

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் - கலி 133/6
ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல்
11.
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியா தேஎத்து ஆற்றிய துணையே - அகம் 35/17,18
நெளிந்த கரிய கூந்தலை உடைய என் பேதைமகளுக்கு
அறியாத நாட்டில் அவளைச் செலுத்திப்போம் துணைவன்
11.
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் - கலி 108/18
சொல்லாட்டியே! உன்னோடு மறுமாற்றம் சொல்லுதலை யார் நிகழ்த்துவார்?

 மேல்
 
    ஆற்றுப்படுத்து - (வி) 1. வழியுண்டாக்கு, make a path
                         2. நெறிப்படுத்து, channelize
                         3. போக்கு, get rid of
                         4. கொண்டு போ, நடத்திச்செல்லு, போக்கு, drive
                         5. வரவழை, வரும்படி வழிப்படுத்து, perform rituals to bring the presence of God
1.
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை - பரி 5/8-10
இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள
கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து
அந்த மலையினில் வழிகளை அமைத்த ஆறு மெல்லிய தலைகளை உடையவனே!
2.
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல் - குறு 241/3-5
கன்றுகளை நெறிப்படுத்திச் செல்லும் புல்லிய தலையையுடைய சிறுவர்கள்
ஊர்மன்றத்திலுள்ள வேங்கைமரத்தின் மலர்ந்த நிலை நோக்கி
மரத்தில் ஏறாமல் எழுப்பிய இன்ப ஆரவாரம்

ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி
நின் புகழ் விரித்தனர் -  - பரி 4/1-3
ஐந்து பொறிகளால் உண்டாகும் மயக்கமாகிய இருளை முற்றிலும் நீக்கி, நான்கு குணங்களால் உள்ளத்தைத் தூயதாக்கி
தம்மைத்
தியானமாகிய ஒரே நெறியில் செலுத்திய உன் அன்பர்கள் உன்னைத் தொழுது போற்றி
உன்னுடைய புகழை விரித்துக் கூறினர், 
3.
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை - அகம் 71/9
ஞாயிற்றைப் போக்கிய துன்பத்தினைத்தரும் மாலைக் காலமானது

சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை - கலி 85/14-16
வண்டுகள் மொய்க்கும் தலைமாலைக்குச் சுற்றியமைந்த நூலாக,
அரும்புகள் மலர்ந்த நீல மலரின் அழகிய இதழ்கள் நாணும்படியான
சுரும்புகளைப் போக்கின நீலமணியாற் செய்த கண்டோர் மருளும் மாலை
4.
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல - சிறு 38-40
(புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி,
(தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்,
(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,

துயர் உழந்து
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் - முல் 80-82
வருத்தமுற்று
அவன்பால் தன் நெஞ்சைப் போக்கின (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,	
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்
5.
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி
வள நகர் சிலம்ப பாடி பலிகொடுத்து
உருவ செந்தினை குருதியொடு தூஉய்
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் - அகம் 22/8-11
வெறியாடும் களம் நன்கு அமைத்து, வேலிற்குக் கண்ணி சூட்டி
வளம் பொருந்திய கோயிலில் ஒலியுண்டாகப் பலிகொடுத்து
அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி
முருகனை வரவழைத்த அச்சம் பொருந்திய நடு இரவில்
- நாட்டார் உரை

கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்
புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ - கலி 5/10,11
'கல்'லென்ற பேரொலியுடன் அழகுபெற்ற திருநாளை வழிப்படுத்திவிட்ட பிற்றைநாள்
'புல்'லென்று பொலிவிழந்து போன களம் போல தனிமைத் துயர்கொண்டு வாழ்வாளோ
- நச்.உரை

 மேல்
 
    ஆறலை கள்வர் - (பெ) ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர், robbers on the highway
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை - பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை

 மேல்
 
    ஆறு - 1 (வி) 1. சூடுதணி, get cold
                     2. அமைதியுடன் இரு be calm 
	 - 2. (பெ) 1. வழி, பாதை, way, path
                    2. எண் ஆறு,  number six
                    3. நதி, river
	            4. வழி, உபாயம், means, device
                    5. விதம், manner, mode
1.1
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப - அகம் 71/6
உலையில் காய்ந்து சூடுதணியும் பொன்னின் நிறம்போல செக்கர் வானம் பூத்து நிற்க
1.2
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதற்படலே - அகம் 95/14,15
நமது களவொழுக்கத்தினை உணர்ந்துவைத்து, அமைதியுற்றிருக்கும் கொள்கையினையுடைய
நம் அன்னை முன் யாம் இக் களவொழுக்கத்திற்பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்?

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் - பதி 16/10
சீற்றமடையாது தணிந்தொழுகும் அறக் கற்பும், அடக்கம் பொருந்திய மென்மையும்
2.1
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற - மலை 284
இடையூறு நிரம்பிய வழியில் அவர் முந்திச்செல்ல
2.2
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என - பரி 3/79
ஆறு என்று, ஏழு என்று, எட்டு என்று, ஒன்பது என்று
2.3
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் - நெடு 30
ஆறு கிடந்ததைப் போல அகன்ற நெடிய தெருவில்
2.4
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் - புறம் 183/7
அறிவுள்ளவர் சொல்லும் வழியில் அரசும் செல்லும்
2.5
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ - நற் 244/7
தணியும் விதம் இது எனச் சொல்லுதல் ஒன்றோ?

 மேல்
 
    ஆறெழுத்து - (பெ) தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம், a mantra containing 6 Tamil letters 
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - திரு 186
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
- ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி என்றது ஆறெழுத்து மறைமொழியை. அது சரவணபவ என்பது.
- நமோகுமாராய என்பதுமாம் - பொ.வே.சோ உரை, விளக்கம்.

 மேல்
 
    ஆன் - (பெ) 1. பசு, cow
                  2. எருமை போன்ற மாடுவகை இனங்களில் பெண், female buffalo
                  3 காளை, எருது போன்ற ஆண் இனம். bull
1.
ஆன் கணம், கன்று பயிர் குரல - குறி 217
பசுக்கூட்டம் தம் கன்றுகளை அழைத்து ஒலிக்க
2.
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் - குறு 279/1
முறுக்கிய கொம்புகளையுடைய எருமையின் இருண்ட நிறமுள்ள காரெருமை
3.
வேனில் ஆன் ஏறு போல - குறு 74/4
வேனில்காலத்துக் காளை போல

 மேல்
 
    ஆன்பொருநை  - (பெ) கரூர் அருகிலுள்ள ஓர் ஆறு, A river near Karur
திருமா வியல்நகர்க் கருவூர் முன்றுறைத்
தெள் நீர் உயர்கரைக் கவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே - அகம் 93/21-23

ஆன்பொருநை, ஆன்பொருந்தம் என்றும் அழைக்கப்படும். இவ் ஆறு இப்போது அமராவதி யென வழங்குகிறது.
- புறநானூறு, 36, ஔ.சு.து உரை விளக்கம்

 மேல்
 
   ஆன்ற  - 1. (வி) இல்லாமற்போன, ceased to exist
           - 2. (பெ.அ) 1. சிறந்த, மாட்சிமைப்பட்ட, excellent
                        2. அடங்கிய, subside, abate 
1.
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் - அகம் 91/3
அருவி இல்லாமற்போன பெரிய மலையின் பக்கத்தில்
2.1
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் - அகம் 198/12
சிறந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்றவள்
2.2
அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால் நின் திண் தேர்
மணிக்குரல் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து  - கலி 126/6-9
அழகிய சிறகுகளைக் கொண்ட கூட்டமான நாரைகள் ஒலிக்கும்பொழுது, உன் திண்ணிய தேரின்
மணி ஓசை என இவள் துணிந்தனள்; துணிந்தவுடனே
உள்ளே அடங்கிய ஒலியை உடையவாய் இருக்கக் கண்டு, அவை காட்டினில்
பறவைகள ஒலி என உணர்ந்து

 மேல்
 
    ஆன்றிகம் - (த.ப.வி.மு) பொறுத்திருப்போம், மேற்கொள்ளுவோம், Let us bear, Let us observe
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி - அகம் 301/2,3
துன்பம் மிக பிரிந்த தலைவரைப் பலகாலும் நினைந்து வருந்துதலை
சிறிது அதிகமாகவே பொறுத்திருப்போம் என்று கூறுகின்றாய்

 மேல்
 
    ஆன்றிசின் - (ஒ.வி.மு) மேற்கொள்ளுதலைக் குறிக்கும் சொல், assume, adopt, embrace
எமியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்  
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ - குறி 32-34
நாங்களாக துணிந்து செய்த பாதுகாப்பான இந்த அரிய செயலை
அது நிகழ்ந்த வண்னம் நீ நன்கு உணரும்படி
கூறுவதை மேற்கொண்டேன், கோபப்படாதே

கான்கெழு நாடன் மகளே
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே - ஐங் 430/3,4
காடு பொருந்திய நாட்டையுடையோனின் மகளே
அழுகையை மேற்கொண்டாய் (ஆதலால்) தவிர்த்தேன் பயணத்தை

 மேல்
 
    ஆன்று - (வி.அ) 1. நிறைந்து, having been full
                      2. விரிந்து, having stretched our 
                      3. நீங்கி, having ceased
அகன்று என்ற சொல் மருவி ஆன்று என்று ஆனது என்பர்.
1.
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே - புறம் 191/6,7
நற்குணங்களால் நிறைந்த, புலன் அடக்கம் உள்ள, பணிவும் உள்ள கோட்பாட்டினையுடைய
சான்றோர் பலர் நான் இருக்கின்ற ஊரில் இருக்கின்றனர்.
2.
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்சோறும் - புறம் 113/2
சமைத்து அதனை நீடித்தும் அழிக்கமுடியாத கொழுத்த துவையையும் ஊனுடைய சோறையும்
3.
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை - குறு 356/1
நிழல் நீங்கி அற்றுப்போன நீர் அற்ற அரிய வழி

 மேல்
 
    ஆனா - (பெ.அ) 1. எல்லைகடந்த, அடங்காத, boundless
                      2. நீங்காத, unceasing
		     3. அழிக்கமுடியாத, imperishable
                      4. எண்ணிலடங்காத, innumerable
1.
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி - சிறு 245
எல்லையற்ற விருப்பத்தைனால் தானே முன்னின்று உண்ணச்செய்து
2.
அழித்து ஆனா கொழும் திற்றி - மது 211
செலவழித்தும் நீங்காத கொழுத்த தசைகள்
3.
ஆனா நோயோடு அழி படர் கலங்கி - நற் 185/1
அழிக்கமுடியாத நோயுடன் துன்பம் மிகுதியால் கலக்கமெய்தி
4.
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை - புறம் 337/5
கொடுப்பதில் எண்ணிலடங்காத ஒளிறும் தொடி அணிந்த கைகள்

 மேல்