<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
சே - முதல் சொற்கள்
சே
சேக்கை
சேகா
சேட்சென்னி
சேடல்
சேடு
சேண்
சேணோன்
சேதா
சேதிகை
சேந்தன்
சேப்பு
சேம்பு
சேமஅச்சு
சேமச்செப்பு
சேமம்
சேய்
சேயாறு
சேர்ப்பன்
சேரல்
சேரலர்
சேரலாதன்
சேரி
சேவடி
சேவல்
சேறல்
சேனை


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சே - 1. (வி) 1. தங்கு, dwell, abide
                2. அடை, எய்து, get, obtain
          2. (பெ) சிவப்பு, redness
1.1
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே - நற் 276/5-7
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
காட்டு மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும்
மலைகளுக்கிடையே அமைந்தது எமது ஊர்;
1.2
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் - பரி 8/103-105
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவினிலும் கிட்டும்படி, 'உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக' என்று வரம் கேட்போரும்,
2.
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண் - நற் 13/3,4
தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த
அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்

 மேல்
 
    சேக்கை - (பெ) துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம், cot, bed, couch, dwelling place
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை - நெடு 134,135
கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின்
மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடியினை விரித்த படுக்கையின்கண்

செ வரை சேக்கை வருடை மான் மறி - குறு 187/1
செம்மையான மலையை உறைவிடமாகக்கொண்ட வருடைமானின் குட்டி

 மேல்
 
    சேகா - (விளி) சேவகனே! Oh, servant
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது - கலி 96/22-24
சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?
- சேவகா ‘சேகா’ எனத் திரிந்து நின்ரது; விகாரம் எனினுமாம் - நச்.உரை விளக்கம்

 மேல்
 
    சேட்சென்னி - (வி) ஒரு சோழ மன்னன், a chOzha king
புறம் 27-இல் குறிக்கப்பெறும் இவன் சோழன் நலங்கிள்ளி எனப்படுவான். சோழநாட்டு மன்னன். இவனைச்
சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துபஎன்ப தம் செய்வினை முடித்து என
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி - புறம் 27/7-10
புலவரால் பாடப்பெறும் புகழையுடையோர் ஆகாயத்தின்கண்
பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவார் என்று
சொல்லக் கேட்பேன், என்னுடைய இறைவ, சேட்சென்னி நலங்கிள்ளியே!

 மேல்
 
    சேடல் - (பெ) பவளமல்லிகை, Night-flowering jasmine, Nyctanthes arbor-tristis
சேடல் செம்மல் சிறுசெங்குரலி - குறி 82

	

 மேல்
 
    சேடு - (பெ) பெருமை, சிறப்பு, greatness, excellence
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி - கலி 72/3
சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி

தார் அணி யானை சேட்டு இரும் கோவே - புறம் 201/13
தார் அணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே
- மாடு - மாட்டு(க்கொம்பு) என்பது போல, சேடு - சேட்டு என வந்தது.

 மேல்
 
    சேண் - (பெ) 1. தூரம், சேய்மை, remoteness, distance
                 2. உயரம், height, loftiness
                 3. நெடுங்காலம், long span of time 
1.
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - திரு 3
ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய
2.
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை - சிறு 254
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
3.
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ - புறம் 2/19,20
வேறுபாடில்லாத மந்திரிச் சுற்றத்தோடு ஒழியாது நெடுங்காலம் விளங்கி
துளக்கமின்றி நிற்பாயாக

 மேல்
 
    சேணோன் - (பெ) 1. குறிஞ்சி நிலத்தவன், inhabitant of a hilly tract
                      2. உயரமான பரணில் இருப்பவன், One who is on a platform on a tree
                      3. எட்டமுடியாத இடத்தில் இருப்பவன், one who is unapproachable
1.
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் - மது 294
குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்
2.
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் - நற் 276/5
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
3.
செல்வை ஆயின் சேணோன் அல்லன் - புறம் 103/5
நீ அவன்பால் போவாயாகின் அவன் கிட்டமுடியாதவன் அல்லன்

 மேல்
 
    சேதா - (பெ) சிவப்புப்பசு, Tawny coloured cow
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா - நற் 359/1
மலைச்சரிவில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய சிவந்த பசு

 மேல்
 
    சேதிகை - (பெ) குதிரையின் உடலில் குத்தும் பச்சை, Coloured mark on a horse
வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி - கலி 96/27
மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி

 மேல்
 
    சேந்தன் - (பெ) ஆர்க்காடுப் பகுதியைச் சேர்ந்த அழிசி என்பானின் தந்தை,
                 father of a person called azhici of Arkkaadu
சோழநாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரிலிருந்து ஆண்ட சங்ககால அரசன்.
அழிசி என்பவனின் மகன்

திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வைகறை நெய்தல் நெல்லிடை மலர
வண்டு மூசு கழனி ஆர்க்காடு அன்ன - நற் 190/3-6
புள்ளிகளையுடைய வேர்படையையுடைய சேந்தன் என்பானுக்குத் தந்தையாகிய
தேன் பொருந்திய விரிந்த மலரால் தொடுக்கப்பட்ட மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட
தேரையுமுடைய அழிசியின்
வைகறைப் போதில் நெய்தல்கள் நெற்பயிரிடையே மலர்தலால்
வண்டினம் மொய்க்கும் கழனிகளையுடைய ஆர்க்காடு என்னும் ஊரைப் போல

இந்த ஆர்க்காடு காவிரிக்கரையில் உள்ளது என்று குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

காவிரி
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
--------------- ---------------------- -------------------
அழிசி ஆர்க்காடு அன்ன - குறு 258/2-7
காவிரி நதியினது
பலர் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையின்கண் வலர்ந்த மருதமரத்தில் கட்டிய
மேல் உயர்ந்த கொம்பினையுடைய யானைகளையுடைய சேந்தனுடைய தந்தை
-------------------------- -------------------------
அழிசியினது ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற

 மேல்
 
    சேப்பு - (பெ) சிவப்பு, redness
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர - பரி 7/70
முன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற

 மேல்
 
    சேம்பு - (பெ) ஒரு செடி, indian kales, Colocasia antiquorum
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி - அகம் 178/4,5
நீலமணியைப் போன்ற நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
பிண்டித்து வைத்தாற்போன்ற செழுமையான கிழங்கினை நிறையத் தின்று

	

 மேல்
 
    சேமஅச்சு - (பெ) அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு, stepney axis
கீழ் மரத்து யாத்த சேமஅச்சு அன்ன - புறம் 102/5
அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக்கட்டப்பட்ட கூடுதல் அச்சுப் போன்ற

 மேல்
 
    சேமச்செப்பு - (பெ) சேமித்துவைக்கும் செப்புக்குடம், copper vessel in which water is saved
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சேமச்செப்பில் பெறீஇயரோ நீயே - குறு 277/4,5
முன்பனிக்காலத்துக்காக விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச்
சேமித்துவைக்கும் செப்பில் பெறுவீராக! நீவிர்!

 மேல்
 
    சேமம் - (பெ) பாதுகாவல், protection, security
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து - பரி 10/34-37
பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,
தாம் விரும்புகின்ற காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது,
பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள

 மேல்
 
    சேய் - (பெ) 1. சேய்மை. தூரம், remoteness, distance
                2. குழந்தை, மகன்/மகள், child
                3. சிவப்பு, redness
                4. சிவப்புக்காளை, tawny coloured bull  
1.
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று - சிறு 3
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
2.
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு - மலை 64
நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
3
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை - நற் 31/2
சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை,
4.
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் - கலி 105/18
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்

 மேல்
 
    சேயாறு (1)
மலைபடுகடாம் பாட்டுடைத்தலைவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய்
நன்னன் என்பானின் நவிரமலையுள்ள நாட்டில் ஓடும் ஆறு சேயாறு. இது திருவண்ணாமலைப் பகுதியாகும்.
இப்போது இந்த ஆறு செய்யாறு எனப்படுகிறது. இந்த ஆறு பாலாற்றின் துணை ஆறு ஆகும்

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் - மலை 476,477
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக 

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே - மலை 551,556
அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய்,
“எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய்,
தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர்,
உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்
வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்				555
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே

 மேல்
 
    சேர்ப்பன் - (பெ) நெய்தனிலத்தலைவன், Chief of the maritime tract;
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே - நற் 49/10
தெளிந்த கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு

 மேல்
 
    சேரல் - (பெ) சேர மன்னனுக்குரிய பெயர், a common name for the chEra kings
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் - பதி 38/3,4
பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!

பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல் - பதி 45/1-6
பொன்னால் செய்யப்பட்ட தும்பைப் பூவையும், புள்ளிகள் பொருந்திய அம்பறாத்தூணியில்
புற்றினில் அடங்கி இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும்,
வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்,
களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினையும்,
சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய,
ஏழுஅரசர்களின் மணிமுடியினின்றும் செய்யப்பட்ட பதக்கத்தை மார்பினில் அணிந்த சேரலே!

இது கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியது.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல
கொன்று களம் வேட்ட ஞான்றை - அகம் 36/13-22
கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய -
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக, ஒரு பகலிலே
முரசுகளுடன் வெண்கொற்றக்குடைகளையும் கைப்பற்றி, தன் புகழ் எங்கும் பரவ,
அவரைக் கொன்று களவேள்வி செய்த பொழுது

 மேல்
 
    சேரலர் - (பெ) 1. சேரநாட்டு வீரர், soldiers of chEra country
                  2. சேரர்குடி, the chEra desent, chEra lineage
                  3. சேர அரசர், the chEra kings
1.
செ உளை கலிமா ஈகை வான் கழல்
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே - பதி 38/7.8
சிவந்த பிடிரியினையுடைய குதிரைப்படையும், பொன்னாற்செய்த உயர்ந்த கழலையும்
வேலைப்பாடு அமையத் தொடுத்த கண்ணியையும் அணிந்த சேரநாட்டுக்காலாட்படையும் உடைய வேந்தே
- சேரநாட்டுக் காலாட்படை வீரரை, சேரலர் என்றார் - ஔ.சு.து.உரை, விளக்கம்.
2.
செல்வக்கோவே சேரலர் மருக - பதி 63/16
செல்வக்கடுங்கோவே, சேரர்குடித் தோன்றலே
3.
சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம் - அகம் 149/7-9
சேர அரசரது சுள்ளியாகிய பேரியாற்றினது வெள்ளிய நுரை கலங்க
யவனர்கள் கொண்டுவந்த தொழில்மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்

 மேல்
 
    சேரலாதன் - (பெ) சேரமன்னர்களின் பெயர், the name of chEra kings
சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் மூவர். அவர்கள்,
1. இமையவரம்பன் நெடுஞ் சேரலாதன் 
- இவன் இரண்டாம் பதிற்றுப்பத்து பாடல் தலைவன். இவனைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார்
2. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - 
- ஆறாம் பதிற்றுப்பத்து பாடல் தலைவன். இவனைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்
3. பெருஞ் சேரலாதன் - 
- இவன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டுப் புறப்புண் நாணி வடக்கிருந்தான் 

மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே - பதி 18/9-12
மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்,
மாரிக்காலத்தில் பொய்த்துவிட்டாலும்
சேரலாதன் பொய்க்கமாட்டான் உமது விருப்பத்தை

இவன் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வனங்கு வில் பொறித்து - அகம் 127/3-5
வெற்றிதங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
கடல் நாப்பணுள்ள பகைவர்களைப் புறக்கிடச் செய்து அவர் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி இமையமலையில்
தமது முன்னோரை ஒப்ப வளைந்த வில் இலச்சினையைப் பொறித்து

சால் பெரும் தானை சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன - அகம் 347/3-5
நிறைந்த பெரிய சேனையினையுடைய நெடுஞ்சேரலாதன் என்பான்
பெரிய கடலின்கண் பகைவர்களை ஓட்டி அவரின் காவல் மரமான கடம்பினை அறுத்துச் செய்த
பண்ணுதல் அமைந்த முரசினது கண் முழங்கினாற் போன்று

இங்குக் குறிப்பிடப்படுபவனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே.

கரிகால் வளவனொடு வெண்ணிப்பறந்தலை
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என - அகம் 55/10-12
கரிகால்வளவனோடு வெண்ணிப் போர்க்களத்தே
போர்செய்து புறப்புண் பட்டமைக்கு நாணின பெருஞ் சேரலாதன்
பொருதழிந்த களத்தின் புறத்தேவாளோடு வடக்கிருந்தானான

இவன் சேரமான் பெருஞ்சேரலாதன். இவனைக் கழாத்தலையார் பாடியுள்ளார் (புறம் 65)

கடந்து அடு தானை சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் - புறம் 8/5,6
எதிர்நின்று கொல்லும் படையையுடைய சேரலாதனை
எவ்வாறு ஒப்பை, மிக்க செலவையுடைய மண்டிலமே!

இங்குக் குறிப்பிடப்படுபவன் சேரமான் கடுங்கோ வாழியாதன். இவனைக் கபிலர் பாடியுள்ளார்.

 மேல்
 
    சேரி - (பெ) 1. ஊர்ப்புறம், புறநகர்ப்பகுதி, suburban area
1.
சேரிகள் ஊருக்கு வெளியே இருந்தன.
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ - அகம் 220/1
ஊரின்கண்ணும் சேரியின்கண்ணும் ஒருங்கே சேர்ந்து அலர் எழ
2.
சேரிமக்கள் துணங்கை, குறவை ஆகிய கூத்துக்களை ஆடுவர்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி - மது 329
துணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும்
3.
சேரியின் ஆண்கள் தமக்குள் மற்போர் புரிவர்.
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் - மது 594
வீரத்தைத் (தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில்
4.
சேரி மக்கள் பலவிதமாக ஆடல் பாடல்களுடன் நன்னன் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடுவர்.
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு - மது 614-619
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - சேரிகள்தோறும் (நின்ற)
புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,
வேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து,
பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,
சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே
5.
சேரிகளில் கிணற்றுகளில் உறைகள் இறக்கியிருப்பர்
உறை_கிணற்று புற_சேரி - பட் 76
6.
முத்துக்குளிப்போர், சங்கு குளிப்போர் ஆகியோர் சேரிகளில் தங்கியிருந்தனர்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இரும் சேரி - மது 135,136
(நன்றாக)விளைந்து முதிர்ந்த சீரிய முத்தினையும்,
பளிச்சிடும் சங்கினையுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும்,
7.
கடலையொட்டி மீனவர் சேரிகள் இருந்தன.
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் - நற் 63/1-4
வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர்
மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்
8.
சங்கினை அறுத்து வளையல் செய்யும் திறமைசாலிகள் சேரிகளில் இருந்தனர்.
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை - நற் 77/8,9
பெரிய ஊர் அல்லாத அழகிய சேரியாகிய சிற்றூரில், வளைசெய்வதில் வல்லவன்
தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்த நன்றாகப் பொருந்திய நேரிய ஒளிமிகுந்த வளையலையும்
9.
சேரிகள் ஊரை ஒட்டியும் இருந்துள்ளன.
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் - குறு 231/1
ஒரே ஊரில் இருந்தாலும் நம் சேரிப்பக்கம் வாரார்
10.
சேரி மக்கள் புலால் உணவை மிகுதியாக உண்பர். புல் வேய்ந்த குடிசைகளில் இருப்பர்.
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை - அகம் 200/21
11.
பாணர்கள் தமக்கென உருவாகிய சேரிகளில் இருப்பர். அது பாணர் சேரி எனப்படும்.
மீன் சீவும் பாண்_சேரியொடு - மது 269
மீன் சீவும் பாண் சேரி - புறம் 348/4
12.
ஒருவரையொருவர் அறிந்துகொள்ளா அளவிற்குச் சேரிகள் பெரிதாகவும் இருந்திருக்கின்றன.
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே - நற் 331/12

 மேல்
 
    சேவடி - (பெ) சிவந்த பாதம், red foot
தாமரை புரையும் காமர் சேவடி - குறு 0/1
தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்

 மேல்
 
    சேவல் - (பெ) பல பறவைகளின் ஆண், the male of many birds
வண்டு - கொங்கு கவர் நீல செம் கண் சேவல் - சிறு 184
புறா - இறை உறை புறவின் செம் கால் சேவல் - பெரும் 439
கம்புள் - கம்புள் சேவல் இன் துயில் இரிய - மது 254
அன்னம் - செம் கால் அன்னத்து சேவல் அன்ன - மது 386
காட்டுக்கோழி - கான கோழி கவர் குரல் சேவல் - மலை 510
குருவி - உள் இறை குரீஇ கார் அணல் சேவல் - நற் 181/1
கடல்காக்கை - கடல் அம் காக்கை செ வாய் சேவல் - நற் 272/1
பருந்து - எருவை சேவல் கிளை_வயின் பெயரும் - நற் 298/4
கூகை - கூகை சேவல் குராலோடு ஏறி - நற் 319/4
காடை - பொறி புற பூழின் போர் வல் சேவல் - புறம் 321/1
கழுகு - அழல் போல் செவிய சேவல் ஆட்டி - நற் 352/4
வீட்டுக்கோழி - தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல் - குறு 107/2
நீர்க்கோழி - நீர் உறை கோழி நீல சேவல் - ஐங் 51/1
யானையங்குருகு - யானையங்குருகின் சேவலொடு காமர் - மது 674
குயில் - சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் - நற் 118/3
அன்றில் - சேவலொடு புணரா சிறு கரும் பேடை - அகம் 270/13

 மேல்
 
    சேறல் - (பெ) செல்லுதல், passing, going, reaching
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே - அகம் 221/14
அரிய சுரநெறியில் செல்லுதலை யான் விரும்பி ஏற்றுக்கொண்டேன்

 மேல்
 
    சேனை - (பெ) அரசனின் படை, army of a king
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி - கலி 108/1-3
"வலிமை கொண்ட வேந்தர்களின் சேனை பெருத்தும், சிறுத்தும் தங்குகிற இடத்தைப் போல,
அகன்ற அல்குல், தோள், கண் ஆகிய மூன்றும் பெருத்து,
நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து,

 மேல்