பெரும்பாணாற்றுப்படை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில்
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன்	5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய்	10
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்		15
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து
பழு மரம் தேரும் பறவை போல			20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கை புலவு வாய் பாண
பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு		25
வழங்க தவாஅ பெரு வளன் எய்தி
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர்		30
திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்		35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின்
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்
அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை		40
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழி தங்கி
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம்		45
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்		50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த		55
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்		60
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்பதஉணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி		65
எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்	70
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள்
கடம்பு அமர் நெடு வேள் அன்ன மீளி		75
உடம்பிடி தட கை ஓடா வம்பலர்
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும்		80
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின்
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது		85
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ்		90
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல்
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறை தாள் விளவின்		95
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல்			100
வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர்		105
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்		110
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ	115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் இறந்த அம்பர் பருந்து பட
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்		120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர்
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர்		125
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன		130
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்		135
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு			140
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ	145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை மறிய
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின்
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின்		150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி		155
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி		160
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம்		165
மடி வாய் கோவலர் குடி வயின் சேப்பின்
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை		170
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்		175
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின்		180
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில்		185
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர்
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்
பருவ வானத்து பா மழை கடுப்ப			190
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று		195
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி		200
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்		205
வன்புலம் இறந்த பின்றை மென் தோல்
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்		210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில்
களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி		215
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்		220
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்		225
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல
கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி
கடுப்பு உடை பறவை சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்		230
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல்	235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குட காற்று எறிந்த குப்பை வட பால்		240
செம்பொன்மலையின் சிறப்ப தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின்			245
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல்
தச்ச சிறாஅர் நச்ச புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை		250
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்
தொல் பசி அறியா துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி		255
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை		260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில்		265
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும்		270
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்
அவையா அரிசி அம் களி துழவை		275
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த		280
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ	285
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி			290
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர்		295
பெருநாள் அமையத்து பிணையினிர் கழிமின்
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்		300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம்		305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர்		310
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த		315
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும்
நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ்
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉ		320
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா		325
மேழக தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்		330
பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்		335
பட்டின மருங்கின் அசையின் முட்டு இல்
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்		340
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர்		345
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்		350
துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின்		355
தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம்
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம்
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும்		360
தீம் பல் தாரம் முனையின் சேம்பின்
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல்
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர			365
சோறு அடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து
பல் மரம் நீள் இடை போகி நல் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்		370
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி		375
பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப
புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால்	380
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்	385
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின்		390
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும்
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ
நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில்			395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்
திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ
கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த		400
அடையா வாயில் மிளை சூழ் படப்பை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்		405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅ போல
புலவு கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ		410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய		415
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்
ஆரா செருவின் ஐவர் போல
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கை வண் தோன்றல்			420
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்		425
துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும்
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமைய செ வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு	430
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து		435
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர்	440
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி		445
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி
பொறி வரி புகர்முகம் தாக்கிய வயமான்
கொடுவரி குருளை கொள வேட்டு ஆங்கு
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர்		450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை
கொண்டி உண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ			455
செல்வர் செல்வ செரு மேம்படுந
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி		460
வந்தேன் பெரும வாழிய நெடிது என
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி
நின் நிலை தெரியா அளவை அ நிலை
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க	465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ	470
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின்
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும்		475
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும்		480
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி
உரவு கடல் முகந்த பருவ வானத்து
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு
புனை இரும் கதுப்பகம் பொலிய பொன்னின்		485
தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து	490
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்		495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே		500

அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய 		5
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
(விரியாமல்)கருவாய் இருந்ததைப் போன்ற (இரண்டு)கண்ணும் கூடின செறிந்த துளையினையும்;
உருக்கி (ஒன்றாக வார்த்ததைப்)போன்ற (தோல் வேறுபாடு தெரியாமல்)பொருத்தப்பட்ட உறையினையும்;
சுனை வற்றியதைப் போன்ற இருள் செறிந்த உள்நாக்கில்லாத வாயினையும்;			10
பிறை பிறந்ததைப் போன்று பின்புறம் ஏந்தியிருக்கின்ற பிளவுபட்ட கடையினையும்;
நீண்ட மூங்கில் (போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள)
குறிய தொடியைப் போன்ற, நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
நீலமணி (நீரைப்போல்)ஒழுகினாற் போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும்;
பொன் (உருக்கப்பட்டுக் கம்பியாக)வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்பினையும் உடைய	15
கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து,
வெம்மையான சினம் கொண்ட ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும்
குளிர்ந்த கடல் (சூழ்ந்த)உலகில் (உன்னை)ஆதரிப்போரைப் பெறாமல்,
பொழியும் மழை புறக்கணித்த (நிலத்தில் எழுந்த)ஆவி சூழ்ந்த மலையிலுள்ள
பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப் போல,						20
அழுகின்ற சுற்றத்துடன் கால் போனவழியே செல்லும்
பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே -
பெரிய வறட்சி மிக்க கானம்(முழுதும்) கல்லென்ற ஆரவாரத்தால் நிறையும்படியாக
கூட்டமான மேகங்கள் மழையைச் சொரிந்தாற் போன்று,
நீண்டநாட் பசி மிக்க (எம்முடைய)கரிய பெரிய சுற்றத்தோடு					25
(பிறருக்குக்)கொடுக்கவும் மாளாத பெரிய செல்வத்தைப் பெற்று,
வெண்மையான தலையாட்டுச்சிறகுகளையுடைய குதிரையுடன் வலிமையான யானைகளையும் வாரிக்கொண்டு
யாம் அவன் ஊரினின்று வருகின்றோம் - நீங்களும்,
பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருவாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய் (அமைய), அக் கடலின்			30
திரை கொணர்ந்து ஏறவிட்ட பாரம்பரியம் கொண்ட சோழன் குடிபிறந்தோனாகிய,
அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும்
முரசு முழங்குகின்ற படைகளையுடைய மூவேந்தர்க்குள்ளும்,
விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும்
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்,					35
(நல்லது)அல்லாததை விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும்,
பல வேற்படையினையும் உடைய திரையனிடம் செல்ல எண்ணுவீராயின் -
கேட்பாயாக, அவனின் தன்மையை, கெடுக நின் துயரம் -
(வேறு ஊர்களுக்கான)வழியில் போவாரை (அவர்)கதறும்படி வெட்டி,
(அவர்)உடைமைகளைக் கைப்பற்றும் களவே உழவு (போலத் தொழிலாகவுடைய)வாழ்வாகக்கொண்ட	40
கொடியவர் இல்லாதது, அவ் வள்லலின் காவலை உடைய அகன்ற நாடு;
இடியேறும் இடியாது; பாம்புகளும் கொல்லமாட்டா;
காட்டு விலங்குகளும் தீங்கு செய்யமாட்டா; (நீ)விரும்பியபடியே,
இளைத்தவிடத்தே இளைப்பாறி, விரும்பியவிடத்தே தங்கி,
செல்வாயாக, இரவலனே, சிறப்புறுவதாக நின் நெஞ்சம் -						45
கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய,
மத்தளம் போன்று முழுமர(த்தால் கடைந்த) உருளியினையும்,
(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும்,
மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று,
(தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி- 	50
யானை(புனத்தில் தின்னாமல்) காக்கின்றோர் (இதண் மேல் கட்டின)குடிலைப் போன்ற,
கோழிகள் தங்கும் கூட்டை உடைய (குடிலின்)வாயிலில்,
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்,
துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலைத் தொங்கும்படி தூக்கி,
நாடக மகளிர் (தாம்)ஆடும் களத்தில் கொண்டுவந்த							55
வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால் (சுற்றிக்)கட்டி,
காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து,
குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப -
கொம்பிடத்தே பூங்கொத்தையுடைய வேம்பின் மேன்மையையுடைய இலையை இடையிடையே கட்டிய
தழை விரவின மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்	60
முறுக்குண்ட உடம்பினையும், நிரம்பிய மெய்வலியினையும் உடைய மாக்கள்
சிறிய துளையினையுடைய வளைந்த நுகத்தின்கண் (எருதுகள்)ஒருவழிப்படுமாறு நிரலே கட்டின
பெரிய கயிற்றையுடையனவாகிய (சகட)ஒழுங்கினை பக்கத்தே காத்துச்செல்ல,
உப்பாகிய உணவின் விலையைக் கூறி,
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி			65
பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,
மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்;
பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து,
(ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்;	70
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
உடைவாள் செருகப்பட்ட கட்டு இறுகிய உடையினையும்;
கரிய வில்லின் வலிமையை விரட்டிய, இடமகன்ற வலிமையுடைய தோளினையும்;
கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்;				75
வேலினைக் கொண்ட பெரிய கையினையும் உடைய புறங்கொடாத புதியவராகிய வழிப்போவார் -
வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே - செல்கின்ற			80
சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் கவர்த்த வழியைப் பாதுகாக்கின்ற
விற்படையிருக்கின்ற ஊர்களையுடைய அகன்ற காட்டுவழிகளில் -
நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற
வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,					85
ஆற்றின் அறலை ஒக்கும் முதுகினை உடையதும், கொழுவிய மடலினையுடையதும் ஆகிய,
வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,
மான் தோலாகிய படுக்கையில் பிள்ளையோடு முடங்கிக்கிடக்கும்
மகப்பேறடைந்த பெண்ணைத் தவிர (ஏனையோர்)போய், வலிய வயிரம் பாய்ந்த 			90
பூண் தலையில் கட்டப்பட்ட திருந்திய திரட்சியையுடைய சீரிய கோலின்
(மறுபக்கம் உள்ள)உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி,
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர் -
பார்வை மான் கட்டிய தேய்ந்த தாளினையுடைய விளாமரத்தின்					95
நிழலையுடைய முற்றத்தில் நில(த்தில் குழிக்கப்பட்ட) உரலில் இட்டு,
குறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி, ஆழமான கிணற்றில்
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு, பழைய
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை -	100
‘வாடாத தும்பை சூடின போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய
புறமுதுகிடாத படையினையுடைய சிறந்த தொழில்நுணுக்கம் கொண்ட வீரக்கழல் அணிந்த
செவ்விய மலைநாட்டை உடையவனுடைய பாணர் யாம்' எனின்,
- தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலிபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய
பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்;				105
மானின் அடிச்சுவடுகள் பதிந்த குழம்பிப்போவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்,
மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,
புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை - வெற்றி வாகை - வாகைத் திணை)
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்				110
நடுயாமத்து வேட்டையைச் செய்யாதுவிட்டால், பகற்பொழுதில்
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து),	115
கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்
அரிய வழியைக் கடந்த பின்னர் - (அதற்கு அப்பால்)பருந்துகள் வந்து படியுமாறு
(தம்மைப்)பொருந்தாத பகைவர் அஞ்ச, (அவரைக்)குத்தி,
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய	120
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்;
ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,
மலையின் தேன்கூட்டை ஒக்கும், கவைத்த அடிப்பக்கத்தையுடைய அம்புக்கட்டுக்களுடன்,
(ஓசை)கடிதான உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும்,
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்;	125
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்,
உருண்ட கணையமரம் குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்(கொண்ட),
நெடிய முனையினையுடைய வலிமையான கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய,
கொடிய வில்லையுடைய எயினரின் அரணில் சென்று தங்கின்,
களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று,					130
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்
பொரியலால் மறைக்கப்படுமளவு மனைகள்தோறும் பெறுவீர்கள் -
யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,							135
சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும்,
(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,
புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்,
வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,				140
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்ற
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க,
வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைத்து,		145
பகலில் மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற தூங்காத குடியிருப்பினையுடைய
பொரு களங்களைக் கழிந்த பின்னர் - ஆட்டுமறிகளுக்குத்
தழைகள்(தம்மிடத்தே) கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின்,
இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட கழிகளையுடைய கதவினையும்,
(வரகுக்)கற்றை வேய்ந்த கழிகளைத் தலையிலேயும் கொண்ட சேக்கையின்கண்,			150
தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும், ஆட்டுக்கிடாயின்
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில் -
செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,		155
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,			160
சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்,
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
நெய்யின் விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னையும் வாங்காதவளாய்,
எருமையையும், நல்ல ஆன்களையும், (அவற்றின்)கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற	165
மடித்த வாயையுடைய இடையர் குடியிருப்பிலே தங்குவீராயின்,
பெரிய சுற்றமாகிய நண்டின் (கருவிலுள்ள)சிறிய பார்ப்பை ஒத்த
பசிய தினையரிசியிலான சிலுத்த சோற்றைப் பாலோடும் பெறுவீர் –
செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்,
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,			170
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்,
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன் -		175
கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடே காட்டில் தங்கி,
அழகிய நுண்ணிதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்து,
தீக்கடையப்படும் கோலால் உண்டாக்கிக்கொண்ட பெரிய திறலுடைய கொள்ளிக்கட்டையின்
சிவந்த நெருப்புத் துளைத்த கரிய துளையினையுடைய குழலில் எழுப்பின,
இனிய பாலைப் பண்ணை(த் தான்) - வெறுக்கின், குமிழினது					180
உள்ளீடற்ற கொம்பிடத்தே வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய
வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை,
பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிக் கேட்கும்,
புல் நிறைந்த அகன்ற நிலத்தைக் கடந்து போய் - முள்ளை உடுத்திக்கொண்டு
எழுகின்ற காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தின்கண்,				185
பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்,
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய,
மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப						190
கரிய (வரகு)வைக்கோலால் வேய்ந்த அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களில்,
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
புள்ளிபுள்ளியாகத் தெரியும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்		195
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர் - அந்நிலத்திற்கு மேல்,
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி,					200
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
(கதிர்களை)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி,
(வெண்மையான)நிறத்தையுடைய கடம்பின் நறிய பூவை ஒத்த
வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்					205
வன்புலமான முல்லைநிலத்தைக் கடந்த பின்பு - மெத்தென்ற தோலாலான
மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த
கவர்த்த காலையுடைய நண்டின் சேற்று வளை கெடும்படி,
பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,						210
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்
களைபறிப்போர் பறித்துத் தந்த திரண்ட தாளினையுடைய நெய்தலின்
தேன் நாறுகின்ற புதிய பூவை வெறுத்தாராயின், முள்ளையுடைய கொம்புகளையுடைய
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்			215
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
ஈரையுடைய கரிய தலை நிறையும்படி சூடி,
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்			220
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,
இரும்பைத் தகடாக்கினாற் போல் சுருக்கமில்லாத மெல்லிய தோலினையும் உடைய,
கரிய கையுடைய தொழிலாளரின் காதல் இளையோர்கள்
பழைய சோற்றின் கட்டியை வெறுத்து, வரம்பிடத்தே
புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முற்றத்தில்					225
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால், (அதற்கு)அருகிலுள்ள
வளைந்த வாயையுடைய கிளிகள் (தமக்கு)உண்டாகின்ற பகையாகக் கருதி அஞ்சும்
இடையறாத புதுவருவாயினையுடைய வளைந்த கதிர்களையுடைய கழனியிடத்து,
(கொட்டினால் ஏற்படும்)கடுப்பு உடைய (பறவை இனமான)குளவித் திரளை ஒத்த
பசுமை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்							230
உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர்,
பாம்பு கிடக்கின்ற மருதமரத்தின் உயர்ந்த கிளையால் உண்டாகிய நிழலில்(உள்ள)
பிச்சை பெறும் அகன்ற களங்களில் நிறைய ஏற்றி,
கூட்டம் கொண்ட (தம்)சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற
துணங்கைக் கூத்தில் அழகிய பூதங்கள் (வெண்மையான)ஆடையை உடுத்தி நின்றவை போல	235
சிலந்தியின் வெண்மையான நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய
(பலவாகத்)திரண்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து,
கடா விட்டுப்போன பின்பு, தூசு போக,
வைக்கோலையும் கூளத்தையும் நீக்கி, ஈரம் உலர,
மேற்காற்றில் (தூவித்)தூற்றின நெற்பொலி, வட திசைக்கண்(உள்ள)					240
சிவந்த பொன்(போன்ற மேரு) மலையினும் மாண்புடையதாகத் தோன்றும்
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்புகளில் -
எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக்
கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
ஏணிக்கும் எட்டாத மிக நெடிய வடிவினையும்,							245
தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்;
தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி அழகிதாய்ப் பண்ணின
(ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்
(தமது)தளர் நடை(யால் உண்டான) வருத்தம் நீங்கும்படி, பரந்த முலையினையுடைய		250
செவிலித் தாயாராகிய அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு,
(தமது)படுக்கையில் துயிலும் அழகையுடைய நல்ல இல்லினையும் (உடைய)
நீடித்திருக்கும் பசியை அறியாத நிலைகெடாத குடியிருப்புகள்(நிறைந்த)
வளன் மிக்க பெரிய ஊரின்கண் தங்குவீராயின், தொழில் ஒழிந்திராத
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை							255
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர் –
முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில்,
(தம்மை)வருத்துதலையுடைய யாளி தாக்குகையால், பலவும் கூடிக்
கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய								260
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர் –
மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்			265
வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் நிறைந்திருந்து,
புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச்
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற,				270
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத,
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிகளையுடைய வலைஞருடைய குடியிருப்பில் தங்குவீராயின் -
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை	275
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி,
பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (இடித்து அதில்)கலந்து, இனிமை மிக
பகலும் இரவும் இருமுறை போக்கி,
கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்),	280
வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை,
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் -
(வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட		285
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,
நீந்திக்கடக்க வேண்டிய ஆழத்தையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின் தன்மையுண்டாகப் பூத்த
கடவுள் (விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல் தவிர்த்து,		290
துளி சொரிதலை ஒழிந்த, ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய,
அகன்ற பெரிய வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
(ஒன்றற்கொன்று நிறம்)மாறுபடும் (ஏனைப்)பூக்களும் மிக்க, நீண்டநாள் நீர்(இருக்கும்) பொய்கைகளில்,
பூப்பறிப்பார் உங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும்,					295
விழாக்கோலம் (கொண்டாற் போல)சூடியவராய்ப் போவீராக -
கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தலினையும்,
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
மனைகளில் தங்கும் கோழிகளுடன் நாயும் அருகே வராமல்(இருக்கும்),
வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்				300
வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின் -
பெரிய நல்ல விசும்பில் வடதிசைக்கண் நின்று விளங்கும்
சிறிய விண்மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறிய நுதலினையும்,
வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி இடமறிந்து ஆக்கிய
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,	305
சிவலைப் பசுவின் நறிய மோரில், வெண்ணெயில் (வெந்த)மாதுளையின்
வெம்மையுற்ற பசிய காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து,
கறிவேப்பிலை மரத்தின் நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு, பசிய கொத்துக்களையுடைய
நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர் -				310
(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த 			315
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில் இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும்
நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று - பாலின் நிறமான
வெண்மையான தலைச்சிறகுகளையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொணரும்	320
மரக்கலங்கள் சூழ்ந்த பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,
மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் மிக்க தெருக்களையும்,
பரதவர் மிக்கு வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,
தொழில் செய்வோர் காக்கும் மிகவும் உயரமான பண்டசாலைகளையும்,
நெல்லிற்கு உழுகின்ற எருதுகளுடன் (பால் தரும்)பசுக்கள் நெருங்காவாய்,			325
ஆட்டுக்கிடாயோடே நாயும் சுழன்று திரியும்,
உணவுடைய நல்ல வீடுகளையும், வளைந்த அணிகலன்களையுடைய மகளிர்,
கொன்றையின் அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் தவழ்பவை போல
பசிய மணிகளைக் கோத்த வடங்களையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய,
பெருமையையுடைய பக்கமலையில் மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும்				330
தோகையையுடைய மயில் போல் உலாவி, கால்களிடத்தனவாகிய
செம்பொன்னால் செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப, மேல்நிலையாகிய
வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,
கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி, மெல்ல மெல்ல
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,		335
பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின் - முட்டுப்பாடில்லாத
பசிய கொடிகள் அசைகின்ற பலரும் நுழையும் வாயிலிடத்து,
சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து,							340
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர் -			345
வானம் (வீழாதபடி முட்டுக்காலாக) ஊன்றிவைத்த பற்றுக்கோல் போல
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய தலையினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்					350
துறை பின்னே கிடக்க (கடந்து) போய் - உரல் போன்ற அடியினையுடைய
மலையோடு மாறுபடுகின்ற யானையின் உடம்பை ஒக்கும்
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால் -		355
தாழ்ந்த குலைகளையுடைய பலாவின், சூழ்ந்து அமைந்துள்ள சுளைகளையுடைய பெரிய பழத்தையும்,
விழுதில்லாத தாழையாகிய தென்னையின் இளநீரின் இனிய நீரையும்,
கவைத்த முலையையுடைய குறிய பெண்யானையின் கடைவாயின் கொம்புகளை ஒக்கும்,
குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,
திரண்ட அடியினையுடைய பனையின் நுங்கோடே, வேறும்						360
இனிய பல பண்டங்களையும் வெறுப்பின், சேம்பின்
முளையைப் புறத்தேயுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர் - பகல் மழையின்
மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி,						365
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படி விழுகின்ற
கெடாத புதுவருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்து,
பல மரங்கள் வளர்ந்த நீண்ட வழியில் போய், நல்ல நகரங்கள்தோறும்,
விண்ணைத் தீண்டும் மாடங்களில் விளங்கிநின்ற மதில் சூழ்ந்த,
வாடாத வள்ளியாகிய வள்ளிக் கூத்தினைக் கொண்ட, வளங்கள் பலவற்றையும் தருகின்ற	370
நாடுகள் பலவற்றையும் கடந்த பின்பு - நீண்ட பூங்கொத்துகளையுடைய
காந்தளையுடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று
பாம்பணையாகிய படுக்கையில் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து,
வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்,
குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும்,			375
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த 
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,
நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி,
மழைநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய			380
சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த
நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளையுண்டு - நாள்தோறும்
பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோட்டையுடைய
இளைய திங்களைச் செம்பாம்பு தீண்டினாற் போன்று
மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின சுரும்புகள் சூழும் ஒளியையுடைய நுதலினையும்,		385
தேனை உருப்பெயர்த்துக் அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்ணையும் கொண்ட
மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடு பகற்பொழுது விளையாடி;
பெறுதற்கரிய பழைமையான புகழினையுடைய துறக்கத்தை ஒக்கும்
பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே,
(இளவேனில்)இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில்				390
அரிய திறலினையுடைய கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய
கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய் (அங்கிருந்து)போமின் -
பரிக்கோலையுடையோர் கவனம் சிதைந்த நேரம் பார்த்து, கீழேயுள்ள
நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை,
முதற் சூலையுடைய மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்;				395
(அக்)களிற்று யானைகளின் சினத்தை அடக்கிய முதிராத தன்மை இல்லாத தறிகளையும்;
திண்ணிய தேர்கள் (ஓடிக்)குழித்த பள்ளங்களுள்ள நெடிய தெருக்களையும்;
(பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து,
விற்பதும் வாங்குவதும் (நிறைந்து) நடந்துசெல்வோரைத் தடுத்து நிறுத்துவதும்,			400
(பரிசிலர்க்கு)அடையாததும் ஆன வாயிலினையும்; காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்;
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய
நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,
செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்;			405
இழுமென்னும் ஓசையையுடைய திரண்ட பறவையினங்களின் திரளையுடைய,
கொழுவிய மெல்லிய கொம்புகளையுடைனவாகிய, (பூவாமல் காய்க்கும்)கோளியாகிய மரங்களினுள்ளும்,
பழத்தால் மேலாகச் சொல்லும் பலாமரத்தைப் போன்று,
புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த வானம் கவிந்த
அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரங்களினுள்ளும், பலரும் தொழும்படி,			410
விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய காஞ்சிநகர் -
அழகிய வாயைக்கொண்ட வளர்பிறையைச் சூடிச், சிவந்த இடத்தையுடைய
அந்தி(ப்பொழுதின் செக்கர்)வானத்தே அசைகின்ற முகில்களை ஒப்ப,
வெண்மையான கொம்பினையுடைய கரிய (யானையின்)பிணத்தைக் குருதி(யாறு) இழுத்துச்செல்லும்படி,
நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி,						415
பெரிய போரினை வென்று கடந்த, கொடுஞ்சியுள்ள, நெடிய தேரினையுடைய,
தோற்காத போரினையுடைய பாண்டவரைப் போன்று,
(எண்ணில்)அடங்காத படையுடன் சினந்து (தன்)மேல் வந்த
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து,
காஞ்சிபுரத்துள்ளான், கை(யால் வழங்கும்)வண்மையில் சிறந்தவன்(தொண்டைமானிளந்திரையன்),		420
(அவன்)தன்னை விரும்பித் (தன்பால்)எய்தினோர்க்குப் பாதுகாவல் ஆகிய
அருள்செய்தலும், (தன்னைப் பகைத்தோரை)அழித்தலும் (தனக்கு)எளிய (செயல்களே)ஆகலான்,
(தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும்,
(தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும்,
நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும்,						425
(அவன்)வலியை(த் துணையாக)க்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர்களும் (ஆகிய),
மலையினின்றும் விழுகின்ற அருவி கடலில் படர்ந்ததைப் போல்
பலவேறு வகைகளாலும் கீழ்ப்படிந்த அரசர்கள் -
தேவர்கள் இருக்கும் உச்சியையுடைய செவ்விய மலையின்கண்
வெண்மையான (நீருள்ள)ஓடைகள் கிழித்தோடுதலால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய கரத்தினின்றும்	430
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல -
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;					435
பெரிய கையையுடைய யானைக்கு வளைந்து கிடக்கும் பூணைச் சேர்க்கும்
வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும் பொன் துஞ்சுகின்ற; அகன்ற அரண்மனையிடத்தே -		440
கீழ்கடலை எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல,
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து,
(கூறாமலே)குறிப்பால் தெரிந்து உணரும் மயக்கமற்ற காட்சியையுடையனாய்,			445
கொடை எனும் கடமையைச் செய்துமுடித்த கூம்பாத உள்ளத்துடன்,
கொடுமையில்லாத அமைச்சுச் சுற்றத்தோடே இருந்தோனை அணுகி,
‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
(பின்னர்)புலியின் குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பினாற் போன்று,
புலவர்க்குப் பேரணிகலன்களையும் பிற கடமைகளையும் வழங்கி, பகைவருடைய		450
காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும்
வெற்றியையே அல்லது (அவ்வரசர் உன்)வினைக்கு உடன்படினும்
மனம் பொருந்துதல் செல்லாத, வலிய வாளினையுடைய பெரிய கையினையும்,
(பகைப்புலத்துக்)கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே,
மள்ளர்க்கு மள்ளனே, மறவர்க்கு மறவனே,								455
செல்வர்க்குச் செல்வனே, போர்த்தொழில் மிக்கவனே,
வெண்மையான அலைகளையுடைய கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற
பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற பெருமையுடைய வயிற்றினையும்,
துணங்கைக்கூத்துடைய அழகிய இறைவிக்குப் பேய்மகள் (சில)நொடிசொன்னாற் போன்று,
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,			460
வந்தேன் பெருமானே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக' என்று சொல்லி,
இடப்பக்கத்தே உடைய பேரியாழை இயக்குமுறையில் இயக்கி,
(மன்னவர்க்கான)முறைமையை அறிந்த நியதிப்படியே கையால் தொழுது நாவால் புகழ்ந்து,
உனது நிலையினைத் தெரிதற்கு முன்னரே, அந்த நிலையின்கண்ணே
நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி,		465
நிலையற்ற (இவ்)உலகத்தே நிலையுள்ளது (புகழ் ஒன்றே என்று)ஆராய்ந்து,
அந்தப் புகழ்நிலையைச் சேரும்பொருட்டு, நின் இடுப்பில் கிடந்த
பாசியின் வேரை ஒத்த சிதர்த்தழிந்த கந்தையை அகற்றி,
(பால்)ஆவியை ஒத்த ஒளிரும் நூலால் செய்த துகில்களை
(உன்)கரிய பெரிய சுற்றத்தோடு சேர உடல் முழுதும் உடுக்கச் செய்து,				470
வளைந்த அரிவாளைக் கொண்ட வடு அழுந்தின வலிவுள்ள கையினையுடைய
சமையற்காரன் ஆக்கின பல இறைச்சியில் கொழுவிய தசைகளும்,
அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய
ஆராய்ந்து பொறுக்கிக்கொண்ட அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோற்றையும்,
அரிய காவலில் வைத்த இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளையும், பிறவும் ஆகிய		475
(கண்டோர்)விரும்பும் முறைமைத்தாகிய மூடிவைத்தலை உடைய அடிசில்களை,
விண்மீன்கள் (இரவில்)மலர்ந்தாற் போன்று வெள்ளிக் கலங்களைப் பரக்க இட்டு,
தாய் பிள்ளையைப் பார்க்குமாறு திரும்பத்திரும்பப் பார்த்து, முகம் இனிது காட்டி,
குன்றாத விருப்பத்துடன் தான் எதிர்நின்று உண்ணச்செய்து -
இருண்ட வானத்தின்கண் திங்களைப் போன்று							480
உலாவும் வண்டுகள் ஒலியாத, தீயில் மலர்ந்த வெண்பொற்றாமரையை
நீண்ட கரிய மயிரில் அழகுபெறச் சூட்டி;
தொடர்ந்து இயங்கும் கடலின்கண் நீரை முகந்துகொண்ட பருவ கால வானத்தில்
பகலில் பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று,
அலங்கரித்த கரிய மயிரிடம் அழகு பெறும்படி, பொன்னால் செய்து				485
சேரக்கட்டின மாலையை ஆடும் மகளிர் சூடி நிற்ப;
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்,
தன்னுடன் சேர்ந்தவையோடு ஒத்துத் தொழில்செய்வனவான, நான்கினை ஒருசேரப் பூட்டி,
பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி		490
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் புறமுதுகிட்டவிடத்தே விட்டுப்போன				
விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,
(நீ சென்ற)அன்றே நினக்கு  ஏனைய பரிசிலும் தந்து விடுவான் - இனிய தாளத்தில்,
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே
மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இளமரக்காட்டினையும்;						495
முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய,
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்,
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்.	500