குறிஞ்சிப்பாட்டு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை

அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்	5
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்	10
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்	15
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி	20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று	25
ஆனா சிறுமையள் இவளும் தேம்பும்
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன்
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்	30
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை	35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல்
நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி
எல் பட வருதியர் என நீ விடுத்தலின்
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த		40
புலி அஞ்சு இதணம் ஏறி அவண
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து	45
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர
நிறை இரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி		50
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்தென
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர்
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி		55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி
நளி படு சிலம்பில் பாயம் பாடி
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி		60
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செம் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடுவேரி தேமா மணிச்சிகை
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்		65
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான் பூ குடசம்
எருவை செருவிளை மணி பூ கருவிளை
பயினி வானி பல் இணர் குரவம்
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா	70
விரி மலர் ஆவிரை வேரல் சூரல்		
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி
குருகிலை மருதம் விரி பூ கோங்கம்
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம்	75
கரந்தை குளவி கடி கமழ் கலி மா
தில்லை பாலை கல் இவர் முல்லை
குல்லை பிடவம் சிறுமாரோடம்
வாழை வள்ளி நீள் நறு நெய்தல்
தாழை தளவம் முள் தாள் தாமரை	80
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங்குரலி
கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம்		85
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை
அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம்
தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி	90
நந்தி நறவம் நறும் புன்னாகம்
பாரம் பீரம் பைம் குருக்கத்தி
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
நரந்தம் நாகம் நல்லிருள்நாறி
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்	95
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின்
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி	100
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா
பை விரி அல்குல் கொய் தழை தைஇ
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல் இரு முச்சி கவின் பெற கட்டி
எரி அவிர் உருவின் அம் குழை செயலை	105
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்
தண் நறும் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை	110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி	115
நலம் பெறு சென்னி நாமுற மிலைச்சி
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ
ஒண் பூ பிண்டி ஒரு காது செரீஇ
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி	120
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறும் தார் பூணொடு பொலிய
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின்
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி		125
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின்
பகை புறம்கண்ட பல் வேல் இளைஞரின்
உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்	130
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து	135
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி
மெல்லிய இனிய மேவர கிளந்து எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி		140
மட மதர் மழை கண் இளையீர் இறந்த
கெடுதியும் உடையேன் என்றனன் அதன் எதிர்
சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர் என		145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரி தா சினை பிளந்து
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி		150
கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து எம்
சொல்லல் பாணி நின்றனனாக
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து		155
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு
உரவு சின முன்பால் உடல் சினம் செருக்கி
கணை விடு புடையூ கானம் கல்லென		160
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர		165
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி
சூருறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை		170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப		175
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம்
நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை
அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை
அஞ்சிலோதி அசையல் யாவதும்			180
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை
நாணும் உட்கும் நண்ணு வழி அடைதர
ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ		185
ஆகம் அடைய முயங்கலின் அ வழி
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை
முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்		190
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரை அரமகளிரின் சாஅய் விழைதக		195
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல்
உள்ள தன்மை உள்ளினன் கொண்டு		200
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப
மலர திறந்த வாயில் பலர் உண
பைம் நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு	205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி		210
அம் தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அ பகல் கழிப்பி
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி		215
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ		220
பாம்பு மணி உமிழ பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட வள மனை
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்			225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள் இனம் ஒலிப்ப
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ		230
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் என
ஈர நன் மொழி தீர கூறி
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து		235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு
அன்றை அன்ன விருப்போடு என்றும்
இர வரல் மாலையனே வருதோறும்
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும்		240
நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும்
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்
பெறாஅன் பெயரினும் முனியலுறாஅன்
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர்		245
மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண்
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய்		250
நினைதொறும் கலுழுமால் இவளே கங்குல்
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்
வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து
உருமும் சூரும் இரை தேர் அரவமும்		255
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்			260
குழு மலை விடரகம் உடையவால் எனவே

‘தாயே வாழ்க, (நான் கூறுவதை)விரும்பிக்கேள், அன்னையே, பளிச்சிடும் நெற்றியையும்
செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும்,			5
வேறுபட்ட பல வடிவங்களையுடைய தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப்புகையும் சந்தனமும் படைத்தும், மனம்கலங்கி,
குறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;
(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும்,	10
(தன்)மனத்துள்ளே மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை,
(என்னுடைய)பேச்சுச் சாதுரியத்தால் (அவளை)நெருக்கி விசாரிக்கையில் -
“முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த)
நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்;
(ஆனால் தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால்,		15
கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,
குற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை
எளிய காரியம் என்னார் தொன்மையான நூலை அறிந்தோர்;
(என் பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக,
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,					20
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
(நாம் என் தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை)
(பெற்றோர் நம்)வழிக்கு வரவில்லை என்றாலும் (இறக்குவரை)பொறுத்திருக்க,
மறு பிறப்பிலாவது (எங்கள் மணம்)பொருந்திவரட்டும் நமக்கு” என்று கூறி,
மான் போல் அமர்ந்த பார்வை(கொண்ட கண்கள்)கண்ணீர் மல்கி,	ஒன்றும் செய்ய இயலாமல்,	25
அளவற்ற சிறுமையுணர்வால் இவளும் மெலிந்துபோனாள் -
பகைமை மேற்கொண்டு (ஒருவரோடொருவர்)மோத விரையும் இரு பெரிய அரசர்களின்
செயல்களுக்கு நடுவே நின்ற அறிவுடையோரைப் போல,
(உனக்கும் இவள் வருத்தத்திற்கும் அஞ்சும்)இரண்டு பெரிய அச்சத்தாலே நானும் வருந்துகின்றேன்;
(நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும்,30
(தலைவன்)இனத்தாரையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல்,
நாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல்
(முன்பு)நடந்தவிதத்தை நீ முழுதும் நன்றாகப் புரிந்துகொள்ளும்படியாக
சொல்லுதல் மேற்கொண்டேன், (அது கேட்டுக்)கோபிக்கவேண்டாம் -
“நெல்லைக் கொண்ட நீண்ட மூங்கிலுக்காக (துதிக்கையை நீட்டி)அண்ணாந்து பார்த்த யானை,	35
(தளர்வுற்று)முத்து நிறைந்த (தன்)தந்தத்தின்மேல் இறக்கிப் போட்ட துதிக்கையைப் போன்ற,
மெல்லிய பஞ்சை நுனியில் உடைய வளைந்த பிஞ்சுத்தன்மை நீங்கிய(முற்றிய) பெரிய கதிர்களை
நன்றாக(த் தன்னிடத்தில்) கொள்ளுதலையுடைய சிறுதினை(ப்பயிர்களின்மேல்) வீழ்கின்ற கிளிகளை ஓட்டி(விட்டு)
பொழுது சாய (நீர்)வருவீராக” என்று கூறி நீ (போக)விடுகையினால்,
(நெற்றுக்களின்)ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியில் உயரத்திலிருப்பவன் செய்த		40
புலிகள் அஞ்சும் பரணில் ஏறி, அவ்விடத்திலிருக்கும்,
மலைச்சரிவில்(விளைந்த) பிரம்பினால் அழகுபெறப் பின்னிய,
கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை அடுத்தடுத்து கையில் எடுத்து,
(சூரியனின்)கடுமையான ஒளிக்கற்றைகள் சுட்டுப்பொசுக்கும் வெம்மை அனல்விடும் நேரத்தில் -	45
வானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக,
நிறைந்த கரிய கடல் குறைவுறும்படி முகந்துகொண்டு,
அகன்ற கரிய ஆகாயத்திடத்தில் வீசுகின்ற காற்று ஒன்றுசேர்வதினால்,
முரசு முழங்கினாற் போன்ற இனிய குரலையுடைய இடியோடு,
வரிசையாகச் செல்லுதலையுடைய உயர்ச்சியைக்கொண்ட மேகம் கலங்கி,			50
இனிய ஓசை (உடைய)முரசினையும், ஒளிவிடும் அணிகலன்(களையும் உடைய) முருகன்
(தன்)பகைவர்க்காகத் தூக்கிய ஒளிர்கின்ற இலை (போன்ற அமைப்புகொண்ட)வேல் போல,
மின்னல்கள் நெருக்கமாய் மின்னும் தொகுதிகளையுடையவாய் மலை மேல் பெய்தவாக,
தலைவனின் உயரமான மலைச் சிகரத்திலிருந்து கீழிறங்கும் தெளிந்த நீரையுடைய --
ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும் -- அழகிய வெண்ணிற அருவியில்,	55
தணிதல் இல்லாத விருப்பமுடையவராய் இடைவிடாமல் விளையாடி,
பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,
அடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி,
தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,						60
உட்புறமெல்லாம் சிவந்த கண்ணையுடையோமாய் - பெரிய இதழையுடைய
ஒளிரும் சிவந்த கோடற்பூ, ஆம்பல், அனிச்சம்
குளிர்ந்த குளத்து(ப்பூத்த) செங்கழுநீர்ப்பூ, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, செம்மணிப்பூ,
(தனக்கே)உரித்தாக மணக்கும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, வில்லப்பூ,		65
நெருப்பை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரப்பூ,
வடவனம், வாகை, வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ,
பஞ்சாய்க்கோரை, வெண்காக்கணம்பூ, (நீல)மணி(போலும்) பூக்களையுடைய கருவிளம்பூ,
பயினி, வானி, பல இதழ்களையுடைய குரவம்பூ,
பச்சிலைப்பூ, மகிழம்பூ, பல கொத்துக்களையுடைய காயாம்பூ,					70
விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ,
சிறுபூளை, குன்றிப்பூ,
முருக்கிலை, மருதம், விரித்த பூக்களையுடைய கோங்கம்பூ,
கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ,
செருந்திப்பூ, புனலிப்பூ, பெரிய குளிர்ந்த சண்பகப்பூ,							75
நாறுகரந்தை, காட்டுமல்லிகைப்பூ, விரை கமழும் தழைத்த மாம்பூ,
தில்லப்பூ, பாலை, கல்லிலே படர்ந்த முல்லைப்பூ,
கஞ்சங்குல்லைப்பூ, பிடவம், செங்கருங்காலிப்பூ,
வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்ட நறிய நெய்தற்பூ,
தெங்கின் பாளை, செம்முல்லைப்பூ, முட்களைக்கொண்ட தண்டையுடைய தாமரைப்பூ,		80
ஞாழல், மௌவல், நறிய குளிர்ந்த கொகுடிப்பூ,
பவழக்கான் மல்லிகைப்பூ, சாதிப்பூ, கருந்தாமக்கொடிப்பூ,
வெண்கோடற்பூ, தாழம்பூ, தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ,
காஞ்சிப்பூ, நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேன் மணக்கும் கருங்குவளை,
ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ,							85
இண்டம்பூ, இலவம்பூ, தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ,
அடும்பம்பூ, பொருந்தின ஆத்திப்பூ, நீண்ட கொடியையுடைய அவரைப்பூ,
பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய அசோகப்பூ,
வஞ்சி, பிச்சிப்பூ, கருநொச்சிப்பூ,
தும்பை, திருத்துழாய்ப்பூ, விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப்பூ,				90
நந்தியாவட்டை, நறைக்கொடி, நறிய புன்னாகம்,
பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பச்சையான குருக்கத்திப்பூ
சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ,
நாரத்தம்பூ, நாகப்பூ, இருவாட்சிப்பூ,
கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,			95
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து),
மழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து,
பறவைகளின் மிகுந்த ஓசைகளையுடைய, (ஒன்றற்கொன்று)குறுக்கிட்டுக்கிடக்கின்ற மலைச்சரிவில்,
பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி,					100
கிளியை ஓட்டியும், புற இதழ்களைக் களைந்து,
பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி,
பற்பல வேறுபட்ட நிறத்தையுடைய அழகமைந்த மாலைகளை, எம்முடைய
மெல்லிய கரிய கொண்டைமுடியில் அழகுபெறச் சுற்றி,
நெருப்பு ஒளிர்வது (போன்ற)தோற்றமுள்ள அழகிய தளிரையுடைய அசோக மரத்தின்		105
மகரந்தம் உதிர்ந்து கிடக்கும் குளிர்ந்த நிழலில் இருந்தேமாக -				
எண்ணெய் தேய்த்து நீவிவிட்ட, சுருள்மயிர் வளர்ந்த -- நல்ல கருநிறம் அமைந்த,
குளிர்ந்த மணமுள்ள மயிர்ச்சாந்தை(நறுமணத்தைலம்) மணக்குமாறு பூசிமெழுகி,
அந்த ஈரம் உலருமாறு விரலால் கோதிவிட்டு சிக்கு எடுத்து,
வயிரம்பாய்ந்த அகிலின் அழகிய புகையை ஊட்டுதலால், யாழ் ஓசையைப் போன்று		110
அழகு மிகுகின்ற இசைப்பாட்டினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, அகிலின் நெய்ப்புக் கலக்கப்பெற்று
(நீல)மணியின் நிறத்தைக் கொண்டுள்ள -- கரிய பெரிய குடுமியின்கண்,
மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், மரக்கிளைகளிற் பூத்தனவும், சுனைகளிற் பூத்தனவும் ஆகிய
பல நிறங்களையுடைய மலர்களை ஆராய்ந்து தொடுத்த
தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,	115
அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி,					
பசிய காம்பையுடைய பிச்சியின் அழகிய இதழ்களையுடைய பூவைத் தொடுத்த
அழகிய தொடையாகிய ஒரு வடத்தைச் சுற்றி, சிவந்த நெருப்பைப் போன்று
ஒளிரும் பூக்களையுடைய அசோகின் அழகிய தளிரை ஒரு காதில் செருகி,
(அந்த)அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி,	120
வலிமை தங்கியிருக்கும் அகன்று உயர்ந்த மார்பினில்,					
தொன்றுபட்டு வருகின்ற பேரணிகலன்களோடே நறிய மாலை பொலிவு பெற,
செவ்விய இலக்கணமுடைய கோடுகளுடன் பொருந்திய பூண் இறுகின முன்கையையுடைய பெரிய கையில்
வண்ணத்தையுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லை எடுத்து, அம்புகளைத் தெரிந்து பிடித்து	
நுண்ணிய வேலைப்பாடு கொண்ட கச்சை(க் கட்டின சேலை) தளர்வு இன்றிக் கட்டி,		125
இயற்கையான அழகால் பொலிவு பெற்ற பொன்னாலாகிய உயர்ந்த (வீரக்)கழல்
(அடி எடுத்துவைத்து)இயங்கும்போதெல்லாம் திருத்தமான கணுக்காலில் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய 
-பகைவர் நாட்டைப் பாழாக்கும் நெருங்குவதற்கு முடியாத வலிமையையுடைய,
பகைவரின் புறமுதுகு கண்ட பல வேல்களையுடைய வீரரைப்போல					
மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் வெகுண்டுவரும்,		130
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட, யாங்கள்
வருத்தம் மிக்க மனத்தையுடையவராய் மிரண்டு (வேறு)இடத்திற்குச் செல்ல -
(தன்னுடன்)மாறுபட்ட காளைகளைப் பொருது விரட்டியடிக்கும் செருக்குடைய -- (தானறியாத)வேறு நிலத்தில்135
(புதிய)பசுவைக் காணும் -- காளையைப் போல அழகுபெற வந்து, எமது
கலக்கத்தினால் அப்போது (நாங்கள்)மிரண்டுபோனதற்காகத் (தான்)அஞ்சி,
மென்மையும் இனிமையுமுடைய சொற்களை (எமக்குப்)பொருத்தமாக இயம்பி, எம்
ஐந்து பிரிப்புள்ள பின்னலின் நுண்ணிய அழகைப் புகழ்ந்து, “ஒளிரும் வளையினையும்,
தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்,		140
கபடமற்ற மதர்த்த குளிர்ந்த கண்களையும், உடைய இளம்பெண்களே, (இங்கு)தப்பி வந்த	
இழப்பினையும் உடையேன்” என்று கூறினான், அதற்கு மறுமொழியாக
(ஒன்றும்)சொல்லாதவராக (நாங்கள்)இருந்ததினால், ஏமாற்றமடைந்து, “(மனம்)கலங்கி
(நான்)காணாமற்போக்கியதைக் காட்டித்தாரீராயின், எம்முடன்
(ஒரு வார்த்தை)சொல்லுதலும் (உமக்குப்)பழியாமோ, மெல்லிய இயல்புடையீரே”, எனச் சொல்லி145
நட்டராகம் முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிப்பதில் வல்லவன்					
(தன்)கையால் வாசித்த நரம்பு போல, இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும்
காதலையுடைய வண்டினத்தோடு, ஆண் வண்டு (புணர்ச்சியை)விரும்பித் தங்கிய,
தாது விரித்த பூக்களையுடைய கெட்டியான கிளையை முறித்து,
(பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி,		150
கல்லென்னும் ஓசைபடக் கத்தும் நாய்களின் கடுமையான குரல்களை அடக்கி, எம்முடைய
பதில் சொல்லின் காலத்தை எதிர்பார்த்து நின்றனனாக -
தினையின் அரிதாளால் வேய்ந்த குட்டையான கால்களையுடைய குடிசையில் இருக்கும்,
(மான்)பிணையைப் போன்ற பார்வையினையுடைய மனைவி எடுத்துக்கொடுப்ப,
தேனால் சமைந்த கள் தெளிவை உண்டு, மகிழ்ச்சி மிக்கு,						155
காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் செலுத்தி(உண்டு)
பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,
பாம்பை ஒத்த அழகிய வில்லினை நாணேற்றி, வருத்த மிகுதியால்,
மிகுகின்ற சினத்தின் வலியோடே உடல் சினத்தால் நடுங்க,
அம்பை எய்து, தட்டையை அடித்து ஒலிஎழுப்பி, காடு(முழுவதும்) கல்லெனும் ஓசை பிறக்கும்படி,		160
(வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க,
கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக
கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து,
கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து,
மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்,			165
உயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக,
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க - நெடிய கோலையுடைய,
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,					170
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,
(அப்)புண் உமிழ்ந்த செந்நீர் (அதன்)முகத்தில் பரவி வழிந்துநிற்க,
புள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல்,
(அக் களிறு)தளர்ந்து திரும்பி ஓடிய பின்னர் - முருகக்கடவுளான
தெய்வம்தீண்டிய(சாமியாடும்) மகளிர் வெறியாட்டயரும் களத்தைப்போன்று(அவ்விடம் தோன்றிநிற்க),	175
உறுதியாக நிற்கும் கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து
இறுக்கக் கட்டிச் சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய்,
நுரையையுடைய (ஆற்றுப்)பெருக்கில் குதிப்பதினால், உயர்ந்தெழும் அலைகள்
மோதும் கரையின் (நின்ற)வாழைபோலே நடுங்க, உயர்குணமுள்ள தலைவன்
“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட		180
அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன்” என்று சொல்லி,
களங்கமில்லாமல் ஒளிரும் (தலைவியின்)நெற்றியைத் துடைத்து, நீண்டநேரம் சிந்தித்து,
என் முகத்தைப் பார்த்து முறுவல்பூத்தான் - அந்த நிலையில்,
நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்,
சட்டென்று (அவள்)விட்டுவிலகவும் விடாதானாய், (தன் கைகளால்)அணைத்து,			185
(இவள்)மார்பு (தன் மார்பில்)ஒடுங்குமாறு தழுவுதலினால், அப்பொழுது,
பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறை(சூழ்ந்த) நீண்ட சுனையில்,
பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை		190
நீரென்று கருதிப் பருகிய மயில் -- அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் -- தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்
மலைவாழ் தெய்வப்பெண்டிர் ஆடுதலால் தம் நலம் சிறிது கெட்டு, கண்டோர் விரும்பும்படி	195
விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின்
குளிர்ந்த மணம் கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி, நன்றாகிய பற்பல
அரைக்கச்சை விரிந்த களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற
மலைபொருந்தியதுமான நாட்டையுடையவன், எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியையுடையவன் -
(இவள்)உள்ளத்தின் தன்மையை ஆய்ந்தவனாய் (அதனை)உட்கொண்டு, 				200
“விழா கொண்டாடினால் போன்று, பெரிய பானையில் (வைக்கப்பட்ட)சோற்றை
வருவார்க்கெல்லாம் வரைவின்றிப் படைக்கும், செல்வத்தையுடைய இல்லம் பொலிவுபெற,
அகலத் திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி,
இளம் (மாமிசத்தைச் சேர்ந்த)கொழுப்பு ஒழுகுகின்ற நெய் மிக்க சோற்றை
குற்றமில்லாத உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு					205
விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி, அப்பொழுது
(சிறந்த)இல்லறமே (நல்ல)வாழ்க்கைப் படகாகும் என்று தெளிவித்து, நெருக்கமான மலைகளில்
மிக உயர்ந்த உச்சியின் (உறைகின்ற)இறையை வாழ்த்தி, கைகளைக் குவித்துத் தொழுது,
(இவள்)இன்பமுறும்படி உறுதிமொழிகளை உண்மையெனத் தெளிவித்து,				210
அழகிய இனிய தெளிந்த அருவி நீரைக் குடித்ததினால், மனம் அமைதியடைந்து,
பயங்கரமான பிளவுகள் நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு,
விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும்
பூக்கள் நிறைந்த சோலையில் அன்றைய பகற்பொழுதைக் கழித்து
மாலைப் பொழுது கழியும்படி, ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரைச் செலுத்தி (மேற்றிசையில்)கீழிறக்கி	215
பல கதிர்களையுடைய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய -
மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,
ஊதுகின்ற கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை
உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க		220,
பாம்பு தம் மணிகளை உமிழ, பற்பல இடங்களிலுள்ள இடையர்கள்
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப,
ஆம்பல் மலரின் அழகிய இதழ்கள் தளையவிழவும், செல்வம் நிறைந்த இல்லங்களில்
பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி
அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற, காட்டில் வாழ்வோர்					225
வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட,
மேகங்கள் பெரிய மலையிடத்துச் சூழ்ந்து கறுப்ப, கானகம்
கல்லென்னுமாறு மாறிமாறி ஒலியெழுப்ப, பறவையினங்கள் ஆரவாரிக்க,
சினங்கொண்ட மன்னன் படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று
விரைந்துவரும் மாலை நெருங்கிவருதலைக் கண்டு -						230
“நேர்த்தியாக (தோளின்)இருபக்கங்களிலும் அமைந்த கைகளின் முன்பக்கத்தைப் பிடித்து உன்வீட்டார் (எனக்குத்)தர
நாட்டில் உள்ளார் (எல்லாம்)அறியும் நன்மையுடைய திருமணத்தை நிகழ்த்துவேன், சில நாட்களில்,
கலங்குவதை விலக்குவாயாக, ஒளிவிடும் நகையுடையீர்”, என்று
கனிவான நல்ல மொழிகளை நிச்சயித்துக் கூறி,
துணையைச் சேர்ந்த காளையைப் போல், எம்முடனே வந்து,					235
செயலற்று இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில்,
(பலரும்)நீருண்ணும் துறையில் (எம்மை)நிறுத்தி மீண்டு சென்றான் - அன்று தொடங்கி,
அன்றைக்கு இருந்ததைப் போன்ற காதலோடு, எந்நாளும்
இரவு வருதலைத் தனக்கு இயல்பாகவுடையவன், வரும்போதெல்லாம்,
ஊர்க்காப்பாளர் கடுமையாகக் காவல்செய்தாலும், சினமிக்க நாய்கள் குரைத்தாலும்,		240
நீ துயில் நீங்கினாலும், திங்கள் வெளிவந்து ஒளிபரப்பினும்,
மூங்கிலைப் போன்ற மென்மையான தோளிடத்துப் பெறும் இனிய துயிலை என்றும்
பெறாதவனாய் (வறிதே) திரும்பிச் சென்றாலும், (அதனால்) வெறுப்படையான்,
(தன்)இளமைப்பருவத்தால் வரம்பு மீறியதும் இலன், (தன்)செல்வச்செருக்கால்
தன் நிலையினின்றும் நீங்கியதும் இலன், அச்சம்தரும் இவ்வூருக்கு				245
ஒளித்து வருகின்ற தன் வரவின் தன்மையை எண்ணி, (அது நல்லதற்கே என்று தன்னைத்)தேற்றி,
பெரிய மழைத் துளிகள் ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,
ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன - (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்),
மார்பினில் (கண்களிலிருந்து)அரித்துவிழும் நீர் சொட்ட, நாள்தோறும்,
வலையினில் அகப்பட்ட மயில் போல (தன்)நலம் போகும்படி மெலிந்து,				250
(அவனை)எண்ணுந்தோறும் கலங்குகின்றாள் இவள் - இரவில்,
குகைகளில் தங்கும் புலிகளும், யாளிகளும், கரடிகளும்,
உள்ளீடற்ற கொம்பையுடைய ஆமான் ஏறும், யானையும்,
வலிமையோடு ஓங்கித்தாக்கும் இரக்கமற்ற,கடும் சினத்தையுடைய
இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்,							255
வாய்குறுகிய கரிய ஆழமான நீர்நிலையில் போதற்கரிய சுழிகளில் திரியும்
வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,
(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்
பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,						
(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை -- (அவரின்	260
கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) -- உடையன' என்றாள் தோழி.