முல்லைப்பாட்டு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி		5
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது		10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர	15
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்		20
பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி	25
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற			30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டென
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி	35
கல்லா இளைஞர் கவளம் கைப்ப
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை		40
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து
வாங்கு வில் அரணம் அரணம் ஆக
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு
குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறு புறத்து	45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்		50
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெரு மூதாளர் ஏமம் சூழ
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்	55
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து		60
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல்
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்		65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய		70
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை			75
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல்
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து	80
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து
பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல		85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அம் செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு	90
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர
செறி இலை காயா அஞ்சனம் மலர
முறி இணர் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ		95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செம் நில பெரு வழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில்	100
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடும் தேர் பூண்ட மாவே

அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலைக் குடித்து வலமாக எழுந்து,
மலைகளை(இருப்பிடமாக)க் கொண்டு எழுந்த விரைவான போக்கினையுடைய மேகம்		5
பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி,						10
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க -
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள்
(குளிரால்)நடுங்குகின்ற தோளின் மேல் கட்டின கையளாய் (நின்று), ‘கையிலுள்ள
கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய			15
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால்
நல்லதே, நல்லவர் நற்சொல், பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின்							20
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே', என்று
காட்டியும் காட்டியும் உணராளாய், கலக்கம் மிக்கு,
பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப -
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,		25
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள
இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் -
தழைகளால் வேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,
நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற								30
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
உயர்ந்து நிற்றலையுடைய கரும்புகளுடன் (நெற்)கதிரைச் செறிந்து கட்டிப்போட்ட
வயலில் விளைந்த இனிய (அதிமதுரத்)தழையைத் உண்ணாது, (அவற்றால் தம்)நெற்றியைத் துடைத்து,
கூர்மையான முனையுடைய கொம்புகளில் (வைத்த)தம் துதிக்கையில் கொண்டு நின்றனவாக,
கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி,	35
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட -
(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
(தன்)முக்கோலில் (அந்த உடையினை)இட்டுவைத்த தன்மையை ஒக்க, (அறத்தால் பொருகின்ற)நல்ல போரில்
நழுவி விழாத வலிய (ஊன்றப்பட்ட)வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி
கூடமாக(க் கால்களை) நட்டுக் கயிற்றை வலித்துக்கட்டின (கூடாரங்களான)இருப்பின்கண்	40
பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறியீட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து,
(இங்ஙனம்)நாணேற்றப்படும் விற்களைக்கொண்ட அரணே (தங்களுக்கு)அரணாக -
விதம்விதமான, பலவாகிய பெரிய படைக்கு நடுவே, வேறோரிடத்தே,
நெடிய குத்துக்கோலுடன் பண்ணின கண்டத்திரையை வளைத்து, (அரசனுக்குரிய)இடமாகக் கொண்டு,
குறிய தொடியையுடைய முன்கையினையும் கூந்தல் (அசைந்துகிடக்கின்ற)அழகிய சிறிய முதுகினையும்	45
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட -
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்,	50
காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள்
துவலை தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல,
(தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டையிட்ட, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய
மிக்க அனுபவமுடையோர் (மெய்க்காப்பாளராகக்)காவலாகச் சூழ்ந்து திரிய -
பொழுதை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள்					55
(அரசனை)வணங்கியபடி காணும் கையையுடையவராய், விளங்க வாழ்த்தி,
‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே, உனது
சிறிதளவு நீரைக்கொண்ட கடிகைப் பாத்திரம் (காட்டும் நேரம்)இத்துணை' என்று சொல்ல -
கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,							60
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில்,
அழகினையுடைய மாணிக்க மணி விளக்கை எரியவைத்துத், திண்ணிய கயிற்றில்
திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று
உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்)				65
சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக -
உக்கிரமாய்ச் செல்லும் போர்(மீது கொண்ட) விருப்பத்தோடு கண்ணுறக்கம் பெறாமல்,
ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப்
பிடித் திரளை மறந்த வேழத்தையும்; வேழத்தின் -
பாம்பு பதைப்பது போல் (பதைப்பினையுடையவாக) - பரிய கைகள் அற்று விழ			70
தேன் பரக்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி,
செஞ்சோற்றுக் கடனிறுத்து, இறந்துபோன வீரரையும், நினைத்தும்; சேணங்களை அறுத்துக்
கூரிய முனைகளையுடைய அம்புகள் (வந்து)அழுத்துகையினால் செவி சாய்த்துப்
புல் உண்ணாமல் வருந்தும் குதிரைகளை நினைத்தும்;
ஒரு கையைப் படுக்கையின் மேலே வைத்து, ஒரு கையில்					75
முடியுடன் (மணிக்கட்டிலுள்ள)கங்கணத்தைச் சேரவைத்து, நீண்ட நேரம் சிந்தித்து -
(மறுநாட்போரில்)பகைவரை நோக்கி வாளைப் பிடித்த வலியினையுடைய கையால்,
பொலிவு தங்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை நிலைபெறுத்தி,
பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்
இனிய துயில்கொண்டு தங்குயிருப்பவனைக் காணாளாய், வருத்தமுற்று				80
நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,	
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,
பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய,						85
(எல்லா)இடங்களும் சிறந்து உயர்ந்து நிற்கும் ஏழு நிலையினையுடைய மாடத்தில்,
(சாய்ப்புகள் கூடும்)மூட்டுவாய்களினின்றும் சொரிதலைச் செய்யும் பெரிதாய்த் திரண்ட அருவிகளின்
இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசையைக் கேட்டவளாய்க் கிடந்தோளுடைய
அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன - வென்று, பகையரசரின்
(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,			90
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க - நுண்மணலிடத்திலுள்ள
நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்(போல்) மலர,
தளிரினையும் கொத்தினையுமுடைய கொன்றை நல்ல பொன்னைச் சொரிய,
கோடலின் குவிந்த முகைகள் அகங்கை(போல) விரிய,						95
திரட்சி நிறைந்த தோன்றி உதிரம்(போலப்) பூக்க,
காடு தழைத்த செம்மண் பெருவழியில்,
மழை வேண்டுமளவு பெய்த வளைகின்ற கதிரையுடைய வரகுக்காட்டில்
முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,
(மேலே கருமேகங்கள் நகர, கீழே)எதிராகச் செல்லும் வெண்மேகங்கள் (துவலை)பொழியும் (ஆணித்)திங்கள்(முதல் நாளில்)100
- முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய,
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
(தான் எடுத்துக்கொண்ட)வினை (எக்காலமும்)விளங்கும் நெடிதாகிய தேரைப்பூண்ட குதிரை(ஆலின).