கலித்தொகை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

            4. முல்லை ( 101 - 117)
             101     102     103     104     105     106     107     108     109     110    
             111     112     113     114     115     116     117    
    கடவுள் வாழ்த்து - 1
    
1. பாலை ( 2 - 36)
    2. குறிஞ்சி (37 - 65)
    3. மருதம் ( 66 - 100)
    5. நெய்தல் ( 118 - 150)
  தேவையான
  பாடல் எண்ணைத்
  தட்டுக

# நான்காவது முல்லைக்கலி
பாடியவர் : நல்லுருத்திரனார்
# 101 
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்
மணி புரை உருவின காயாவும் பிறவும்			5
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார்
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப		10
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண்		15
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி
கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்				20
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி
குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு			25
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி
நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன்		30
தாளின் கடந்து அட்டு தந்தையை_கொன்றானை
தோளின் திருகுவான் போன்ம்
என ஆங்கு
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர்
மணி மாலை ஊதும் குழல்				35
கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை
ஈன்றன ஆய_மகள் தோள்
பகலிட கண்ணியன் பைதல் குழலன்
சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது		40
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு			45
வேளாண்மை செய்தன கண்
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார்
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்
முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு
எல்லாம் புணர் குறி கொண்டு				50
 
மேல்


# 102
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும்
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும்
அன்னவை பிறவும் பன் மலர் துதைய
தழையும் கோதையும் இழையும் என்று இவை		5
தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு
என் உயிர் புக்கவள் இன்று
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா			10
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார்
மாண்_இழை ஆறு ஆக சாறு
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம்	15
மிடை பெறின் நேரா தகைத்து
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன்
எதிரெதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து
உருத்து எழுந்து ஓடின்று மேல்				20
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ  25
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி
வருத்தினான் மன்ற அ ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ
ஏறு உடை நல்லார் பகை
மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை			30
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்
ஆங்கு இனி
தண்ணுமை பாணி தளராது எழூஉக
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி		35
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி
மன்றம் பரந்தது உரை
 
மேல்



# 103
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும்
புல் இலை வெட்சியும் பிடவும் தளவும்
குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார்		5
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த
சொல்லர் சுடரும் கனம் குழை காதினர்
நல்லவர் கொண்டார் மிடை
அவர் மிடை கொள					10
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும்
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்
கொலைவன் சூடிய குழவி திங்கள் போல்			15
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும் பரி_மாவும் களிறும் கராமும்
பெரு மலை விடர்_அகத்து ஒருங்கு உடன் குழீஇ
படு மழை ஆடும் வரை_அகம் போலும்			20
கொடி நறை சூழ்ந்த தொழூஉ
தொழுவினுள் புரிபு_புரிபு புக்க பொதுவரை
தெரிபு தெரிபு குத்தின ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண்			25
உருவ மாலை போல
குருதி கோட்டொடு குடர் வலந்தன
கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன்
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண்
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை			30
முந்நூலா கொள்வானும் போன்ம்
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு
தார் போல் தழீஇயவன்				35
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றும் அவன்
தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை		40
ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு				45
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
புல்_இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள்
மறு போல் பொருந்தியவன்
ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற			50
சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும்
காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு			55
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும்
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும்
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ
பயில் இதழ் மலர் உண்கண்				60
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ
கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய_மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை			65
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய_மகள் தோள்
வளியர் அறியா உயிர் காவல்கொண்டு
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ ஆய_மகள் தோள்				70
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர்
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின்
முலை இடை போல புகின்
ஆங்கு
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி				75
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே
 
மேல்



# 104
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய			5
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி
திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும்		10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
மா கடல் கலக்கு_உற மா கொன்ற மடங்கா போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும்			15
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல
புரிபு_புரிபு புகுத்தனர் தொழூஉ
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்
ஒள் இழை வார்_உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின்	20
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ
குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு		25
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால்
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை
பேணி நிறுத்தார் அணி
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த			30
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அ ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை			35
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும்
நீல்நிறவண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன்		40
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று	45
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும்
மீளி மறவனும் போன்ம்				50
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப
மறுத்து மறுத்து மைந்தர் சார
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர்		55
கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு_களம் போலும் தொழூஉ
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர்	60
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர் தழூஉ
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று
கோடு குறி செய்த மார்பு
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்		65
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன்
பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது
உற்றீயாள் ஆயர்_மகள்
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல்		70
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்_மகன்
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
ஆர்வு_உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த		75
ஊராரை உச்சி மிதித்து
ஆங்கு
தொல் கதிர் திகிரியான் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே			80
 
மேல்



# 105
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த
முரைசு கெழு முதுகுடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி			5
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார்
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும்
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன்
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும்			10
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக
பொரு அற பொருந்திய செம் மறு வெள்ளையும்
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்		15
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும்
வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும்
கால முன்பின் பிறவும் சால
மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்			20
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ
அ வழி
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க		25
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த
ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்			30
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும்
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி
கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு
கொள்வாரை கொள்வாரை கோட்டு வாய் சா குத்தி		35
கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்
பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா			40
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி
மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு		45
போதரும் பால் மதியும் போன்ம்
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு_உற்று மாறா
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொரு_களம் போலும் தொழூஉ
வெல் புகழ் உயர் நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில்	50
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி
பாடு இல ஆய_மகள் கண்
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட		55
கொல் ஏறு போலும் கதம்
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல்
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
தம் கண் பொடிவது எவன்				60
ஒண்_நுதால்
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி
அலர் செய்துவிட்டது இ ஊர்				65
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய்
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன்
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை
புக்க_கால் புக்கது என் நெஞ்சு என
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய		70
ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு
இன் இசை முரசின் பொருப்பன் மன்னி
அமைவரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பரும் விளங்குக எனவே
 
மேல்



# 106
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்		5
அ வழி
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன				10
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும்
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை
கொண்டல் நிரை ஒத்தன
அ ஏற்றை						15
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர்
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி			20
அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை
மரத்தை போல் தொட்டன ஏறு
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு			25
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை
ஆங்கு						30
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ
முயங்கி பொதிவேம் முயங்கி பொதிவேம்
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம்			35
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு_உற
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்		40
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும்
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே			45
ஆங்க
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்
ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு
மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே			50
 
மேல்



# 107
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்_இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம்
கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ
தொழுவத்து					5
சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று-மன்
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது	10
கேட்டனள் என்பவோ யாய்
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா
அவன் கண்ணி அன்றோ அது
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான்
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்		15
செய்வது இல ஆகுமோ மற்று
எல்லா தவறும் அறும்
ஓஒ அஃது அறும் ஆறு
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின்
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்		20
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம்
அன்னை நெஞ்சு ஆக பெறின்
அன்னையோ
ஆயர்_மகனையும் காதலை கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ			25
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்		30
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு
 
மேல்



# 108
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்_கால்		5
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான்
அஃது அவலம் அன்று மன
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக
காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை			10
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர்
ஆயனை அல்லை பிறவோ அமரருள்
ஞாயிற்று புத்தேள்_மகன்
அதனால் வாய்வாளேன்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன		15
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும்
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்
சொல்லாதி
நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன்			20
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே
கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா யான்
கொண்டது						25
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று
தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல்
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம்
களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்   30
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ
இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வதோ
தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ
அனைத்து ஆக
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி	35
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்			40
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு
இனி செல்வேம் யாம்					45
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர்
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை
நீ எவன் செய்தி பிறர்க்கு				50
யாம் எவன் செய்தும் நினக்கு
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை		55
தலையினால் தொட்டு உற்றேன் சூள்
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை
காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து		60
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை
காஞ்சி கீழ் செய்தேம் குறி
 
மேல்



# 109
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து
பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும்
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள்			5
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல்		10
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும்
கண்ணளோ ஆயர்_மகள்
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி
வரி கூழ வட்டி தழீஇ அரி குழை
ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது			15
நுண்ணிதா தோன்றும் நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும்
பாலொடு கோட்டம் புகின்				20
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள்
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம்
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்			25
வாயில் அடைப்ப வரும்
 
மேல்



# 110
கடி கொள் இரும் காப்பில் புல்_இனத்து ஆயர்
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா
இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை
திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள்		5
வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால்
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்			10
சுற்றி சுழலும் என் நெஞ்சு
விடிந்த பொழுதினும் இல்_வயின் போகாது
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்கு சூழும்
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு			15
எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும்
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி
அறியாது அளித்து என் உயிர்
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை	20
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும்
கன்றொடு சேறும் புலத்து
 
மேல்



# 111
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும்
முல்லையும் தாய பாட்டம்_கால் தோழி நம்
புல்_இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம்			5
ஒருங்கு விளையாட அ வழி வந்த
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய்		10
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய்
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய்			15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய்
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப		20
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற
நோயும் களைகுவை-மன்
 
மேல்



# 112
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர்
பூ தாமரை போது தந்த விரவு தார்
கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார் எமர்
எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும்		5
நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின்
விடாஅல் ஓம்பு என்றார் எமர்
கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட
நல்லது கற்பித்தார் மன்ற நுமர் பெரிதும்			10
வல்லர் எமர்_கண் செயல்
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை
இகழ்ந்தாரே அன்றோ எமர்
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு			15
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால்
நின்னை என் முன் நின்று
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல
முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ		20
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின்
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள்
சாயினும் ஏஎர் உடைத்து				25
 
மேல்



# 113
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள்
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல்
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய்
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்_வழி			5
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான்
ஒக்கும்-மன்
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு
நல்_இனத்து ஆயர் எமர்				10
எல்லா
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு
விடேன்
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு			15
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால்
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்கு_உற ஏதிலார்			20
பொய்ம்மொழி தேறுவது என்
தெளிந்தேன் தெரி_இழாய் யான்
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில்
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை		25
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே
 
மேல்



# 114
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ			5
தோழி அவன் உழை சென்று
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக			10
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த			15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு				20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
 
மேல்



# 115
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம்
புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்		5
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ
அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்		10
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என்
சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா		15
ஈங்கு எவன் அஞ்சுவது
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும்
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண்
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப அதுவே யாம்			20
அல்கலும் சூழ்ந்த வினை
 
மேல்



# 116
பாங்கு அரும் பாட்டம்_கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு
விடேஎன் தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும்		5
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
நீங்கி சினவுவாய் மற்று
நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின்			10
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின்
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய்			15
கலத்தொடு யாம் செல்வு_உழி நாடி புலத்தும்
வருவையால் நாண் இலி நீ
 
மேல்



# 117
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின்
கையது எவன் மற்று உரை				5
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர்
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள
காண்_தக்காய் என் காட்டி காண்
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு		10
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால்
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு
மெல்லியது ஓராது அறிவு				15

மேல்
		





# நான்காவது முல்லைக்கலி 
 அடிநேர் உரை
# 101 
மழை பெற்றுக் குளிர்ந்த காட்டில், முதல் மழைக்கு அரும்பு விட்டு,
உலர்ந்துபோன அடிப்பகுதியில் செழித்து வளர்ந்த முள்ளைப் புறத்திலே கொண்ட பிடவமும்,
கள்ளுண்டு செருக்குற்றவனின் கால்தடுமாறும் நிலையைப் போல வளைந்து, துடுப்புப்போன்ற மொட்டினை ஈன்று
தீயைக் கடைந்த நெருப்பைச் சேர்த்து வரிசையாக வைத்ததைப் போன்ற மலர்ந்த இதழ்களையுடைய செங்காந்தளும்
நீலமணியைப் போன்ற நிறத்தைக் கொண்ட காயாம்பூக்களும், பிற மலர்களும்
அழகுடன் விளங்கும்படியாகச் சூடிய தலைமாலையையுடையவர் ஒன்று சேர்ந்து,
ஏறுதழுவுபவரோடு மாறுபட்டு நிற்கும் தம் ஆற்றலை வெளிப்படுத்த
பிறரால் சீறுவதற்கு முடியாத வலிமையுடையோனாகிய இறைவனின் குந்தாலியைப் போல் கொம்புகள் சீவப்பட்ட
ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர் 
அவ்விடத்தில், முரசின் முழக்கத்தைப் போலவும், இடியினைப் போலவும் ஏறுதழுவும் களத்தின் முன்னே ஆரவாரம் உண்டாக,
ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து வந்து திரண்டு
நறும்புகையுடன் புழுதியும் கிளம்ப, நல்ல மகளிர் திரண்டு நிற்க,
நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், பழைய வலிமையினையுடைய மராமரத்தின் கீழும் உறையும்
தெய்வங்களை அவற்றுக்குரிய முறையுடனே வணங்கி வாடிவாசலை நோக்கிப் பாய்ந்தனர்;
கொம்பின் உச்சியில் சுற்றிய பட்டுநூலின் நிறத்தைப் போன்ற புன்மையான நிறத்தைக் கொண்ட காளையின்
சீற்றமுள்ள பார்வைக்கு அஞ்சாதவனாய் அதன் மீது பாய்ந்த இடையனைச் சாகும்படி குத்தித்
தன் கொம்புகளுக்கு இடையிலே வைத்துக்கொண்டு அவன் உடலைக் குலைக்கின்ற காட்சியைப் பார்!
அழகிய சிறப்புக்கொண்ட அசைகின்ற இயல்பினையுடையவளாகிய திரௌபதியின் கூந்தலைப் பற்றியவனின்
நெஞ்சத்தைப் பிளந்து போட்டு பகைவர் நடுவே தன்
வஞ்சினத்தைத் தீர்த்துக்கொண்ட வீமனைப் போன்றிருக்கிறது;
சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை,
மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டிக்
குடல் சரியும்படி குத்தி, அவன் உடலைக் குலைக்கின்ற காட்சியைப் பார்!
துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி உமையின் பச்சைநிறத்தைக் காட்டும் இறைவன்
வருத்தத்தைச் செய்யும் எருமை ஏற்றை ஏறுகின்ற கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்திட்டு
அவன் குடலைக் கூளிப்பேய்க்கு வயிறாரக் கொடுக்கின்றவனைப் போன்றிருக்கிறது;
காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளையின்
சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்த இடையனைத் துவட்டி
மிகவும் கூர்மையான தன் கொம்பால் அவன் உடலைக் குலைக்கின்ற காட்சியைப் பார்!
மிகுந்த இருள் என்றும் கருதாமல், கடுமையான இரவில் வந்து தன்
முயற்சியால் வென்று அழித்துத் தன் தந்தையான துரோணாச்சாரியாரைக் கொன்ற சிகண்டியை
அவனது தலையைத் திருகும் அசுவத்தாமனைப் போன்றிருக்கிறது;
இப்படியாக,
அழகிய மாலையணிந்த கணவனைத் தரும்படியான நல்ல சகுனமாக இருக்கிறது, இடையர்கள்
நேர்த்தியான இந்த மாலைப் பொழுதில் ஊதுகின்ற குழல்;
மதம்பிடித்த யானையைக் காட்டிலும் அஞ்சாத காளையைப்
பிடித்தபிடி விடாமல் நீ தழுவிக்கொண்டால், வெற்றிக்கொடியை
ஏந்தும் இந்த இடைமகளின் தோள்கள்;
பகலில் மலரும் பூக்களைக் கொண்ட தலைமாலை சூடியவன், வருத்த இசையைக் குழலில் ஊதுபவன்,
தோளின்மீது கம்பினை வைத்துப் பிடித்துக்கொண்டிருப்பவன் ஆகிய இவர்களில் இங்குள்ள
கொல்லுகின்ற தன்மையுள்ள காளையை அடக்குபவர்களுக்கு, எமது நிறைந்த கரிய
கூந்தலுடையாளை மணமுடித்துக்கொடுப்போம் நாம்;
காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை என்று நம் மாடுகளுக்குள்
தன் முயற்சியை எடுத்துக்கூறும் தலைவன் நமக்கு என்றேனும் ஒருநாள்
உறவினன் ஆவான். அவனைக் கண்டு
இடப்புறமாகத் துடித்தன நமது கண்கள்;
இப்பொழுது காளைகளும் சோர்ந்தன, இடையர்களும் மிகவும் காயம்பட்டிருக்கின்றனர்,
மணக்கின்ற கரிய கூந்தலையுடைய ஆயமகளிர் எல்லாரும்
முல்லைப்பூக்கள் பூத்துக்கிடக்கும் அழகிய குளிர்ந்த சோலைக்குள் புகுந்தனர், இடையரோடு
தாம் சேர்வதற்குரிய இடங்களைத் தேடிக்கொண்டு.
 
மேல்


# 102
"பரந்து விரிந்த பெரிய விசும்பில் வேகமாகப் பொழிகின்ற மழைநீரில் கலந்து அதனை ஏற்றுக்கொண்ட
குளிர்ந்த மணங்கமழும் பிடவமும், படர்கின்ற கொடியையுடைய செம்முல்லையும்,
நல்ல நிறமுள்ள செழுமையான காந்தளும், ஒளிர்கின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும்
இவற்றைப் போன்ற பிறவும், பல மலர்கள் செறிந்திருக்கும்படியாக,
தழையும், மாலையும், அணிகலன்களும் என்று இவற்றைக்
கட்டியவராய் மகிழ்ந்து திளைத்து விளையாடும்
கபடமற்ற பேச்சினையுடைய இந்தத் தோழியர் கூட்டத்தில் இவள் யார் தன் உடம்போடு
என் உயிர்க்குள்ளே புகுந்தவள் இன்றைக்கு";
"ஓ! இவளா? இவள் சண்டையிடுவதில் பெரு விருப்பமுள்ள அந்த நல்ல காளையை அணைபவரை அன்றி
வேறு யாரும் இவளின் அழகுள்ள, மாந்தளிர் போன்ற மேனியைத் தீண்டமுடியாது என்று மிக்க கவனத்துடன்
எல்லாரும் கேட்கும்படி மீண்டும் மீண்டும் பறையறிவித்து எப்பொழுதும் எழுந்த
பேச்சால் இங்கு கொண்டுவரப்பட்டவள்";
"அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்"; "இனி காலம் தாழ்த்தமாட்டோம்" என்றனர்; "பறையை முழக்குங்கள்" என்றனர்; பரப்பினர்
சிறந்த அணிகலன்களையணிந்தவளின் சார்பாக ஏறுகோள் விழா நடக்கும் செய்தியை;
இந்த விழாவில் பெடை அன்னத்தைப் போன்றவர்கள் தங்கள் கண்கள் பொலிவுபெற்று விழாநிகழும் இடம் அனைத்தையும் பார்க்கும்
உயர்ந்த பரணைப் பெறுவார்களென்றால் அது மிகவும் நல்லது;
விடப்படும் காளையைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேலும் மேலும் அதன் மேல் பாய்வதற்காக, ஆரவாரித்துச் சேர்ந்து
நேருக்கு நேர் சென்றார் பலர்;
கொன்று குவிக்கும் வில்லைப்போல மிகவும் வெகுண்டு அதிக அளவு சினத்துடன்
கடுமையாகப் பாய்ந்து அந்தக் காளையருக்குள் ஓடியது;
புழுதி பறந்தது;
மார்புகளைக் கொடுத்து பாயும் காளையைத் தாங்கினர்;
காளையின் கொம்புகள் தரையைப் பார்த்துக் கவிழ்ந்தன;
கலங்கினர் பலர்;
அவர்களுள், ஊறிடும் மிகுந்த காதலுணர்வு பெருக, பூக்கள் நிறைந்த நீலமணியைப் போன்ற நெடிய தோளால் வளைத்து
காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான், தோன்றி
அந்தக் காளையை அடக்கிச் சோர்வடையச் செய்தான்;
காளையின் துன்பத்தைக் கண்டு எழுந்தனர், எதற்காகவோ
அந்த காளையின் உரிமையாளரின் பகை?
அறியாமை உடையவர் இந்த ஆயர் பெருமக்கள்! இதற்கு முன்பும்
கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்துக்கொண்டவர்களைக் கண்டிருக்கின்றனர்! இன்றும்
சீற்றங்கொண்ட காளையைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று பறை சாற்றுகின்றனரே!
அங்கே இப்பொழுது
மணம்செய்வதற்குத் தண்ணுமையில் தாளம் தவறாமல் எழுப்புவார்களாக,
பண் அமைந்த இனிய தாளத்தையுடைய குரவைக் கூத்தினுள், சிறந்த தலைமாலையையும்
திண்ணிய தோள்களையும், வெற்றிப்புகழையும், வியப்புக்குரிய போர்த் திறத்தையும், கரிய மேனியையும்,
அழகிய சிவப்புநிற ஆடையையும் உடைய அந்த இளைஞனுடன், அழகிய
முறுவலையுடையவளின் மென்மையான தோள்களைச் சேர்த்துப் பாராட்டி, அந்தச் சிறுகுடியின்
மன்றத்திலெல்லாம் பரவியது பேச்சு.
 
மேல்



# 103
மெல்லிய பூங்கொத்துக்களையுடைய கொன்றையும், மென்மையான மலரையுடைய காயாவும்,
புன்மையான் இலையைக் கொண்ட வெட்சிப்பூவும், பிடவமும், செம்முல்லையும்,
கஞ்சங்குல்லைப் பூவும், குருந்தம்பூவும், செங்காந்தளும், பாங்கர்ப்பூவும் ஆகிய
மலையிலுள்ளவையும், காட்டிலுள்ளவையும் உள்ள மலர்கள் கொண்டு கட்டிய பூச்சரங்களைச் சூடியவராய்,
பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக,
முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாக வைத்தது போன்ற
பற்களையுடைய, பெரிய குளிர்ச்சியான கண்களையுடைய, கபடமற்ற
பேச்சினையுடைய, ஒளிவிடும் பொன்னாலான குழையைக் காதில் அணிந்த
ஆய மகளிர் பரணில் ஏறிக்கொண்டார்;
இந்த மகளிர் பரண்மீது இருக்க,
பச்சை மணி போர்த்ததைப் போன்ற மலையின் பக்கத்தில் விழும் அருவியைப் போன்ற
அழகின் எல்லையைக் கடந்த வெண்மையான கால்களைக் கொண்ட கரிய காளையும்,
விண்மீன்கள் தோன்றி ஒளிசிந்தும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம் போன்று
அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்,
கொலைத்தொழிலையுடைய இறைவன் சூடிய பிறை நிலவு போன்ற
மிகுதியாக வளைந்த கொம்பினைக் கொண்ட சிவலைக்காளையும்,
போரிடும் முரட்டுத்தனத்தைகொண்ட வலிமையையுடைய பலரும் விரும்பும் காளைகள் பலவும் ஒன்றுகூட,
சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும்
பெரிய மலையின் பெரும் பள்ளத்தில் ஒன்றுசேரத் திரண்ட,
தொங்கிக்கொண்டிருக்கும் மேகங்கள் அசைந்து திரியும் மலையிடத்தைப் போன்று
கொடிக்கொடியாய் நறுமணப்புகை சூழ்ந்திருக்கிறது அந்தத் தொழுவம்;
அந்தத் தொழுவினுள் மிக்க ஆர்வத்துடன் புகுந்த இடையர்குல இளைஞரைப்
பார்த்துப் பார்த்து முட்டின அந்தக் காளைகள்;
காளைகள் தமக்குப் பகையான காளைகளை விரும்பித் தாக்கின; சுற்றிலும்
நெருப்பினைக் கக்கும் குந்தாலியைக் கொண்ட இறைவன் சூடிய பிறையில் கிடக்கும்
சிவந்த மாலையைப் போல
குருதி படிந்த கொம்புகளில் குடல்கள் பின்னிக்கிடந்தன;
"கொம்புகளைச் சுற்றிக் குடல்கள் பின்னிக்கிடந்த காளையின் முன்
அதற்கு ஆட்டம் காண்பித்து அந்தக் குடலை எடுத்துக்கொள்பவனின் வலிமையைப் பாரேன்!
இது சிவந்த நூல் சுற்றியிருக்கும் கழியை ஒருவன் இருகையாலும் பிடித்துக்கொள்ள, அந்த நூலை வாங்கி
மூன்று நூலாகப் பிரித்து ஆக்குகின்றவனைப் போலிருக்கிறது!"
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
எருமைக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! காளையை அடக்காமல் வரமாட்டான்,
போரிடுவதில் மிகவும் விருப்பமுள்ள காளையின் சொரசொரப்பான கழுத்தில் பாய்ந்து
அதற்கு இட்ட மாலையைப் போல அதனைத் தழுவிக்கொண்டவன்";
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
பசுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இதை முடிக்காமல் போகமாட்டான்,
மச்சத்தையுடைய காளையின் மேலேயிருந்து ஆட்டம்காண்பித்துக்கொண்டு, நீர்த்துறையில் தோணியில்
செல்பவன் போலத் தோன்றுகின்றான்";
"தோழியே! காற்றைப் போல வந்த கடும் வேகங்கொண்ட காளையான காரியைப்
பலரும் கூடும் களத்தில் அதன் வலிமை அடங்க அணைத்து, அதனை வருத்தி, அதன்
மேலே ஏறிக் காட்சியளிக்கின்ற இடையனது அழகைப் பாராய்!
எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் நெஞ்சத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு
சினத்தோடே அவனது அரிய உயிரை வாங்கின சமயத்தில் இறைவன் இப்படிப்பட்டவனாயிருந்தானோ என்று
கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு";
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
ஆட்டுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! புள்ளிகள்
மிகுந்த வலிமையான வெள்ளைக் காளையின் அழகிய பக்கத்தில், திங்களில் இருக்கும்
மறுவைப் போல் ஒட்டிக்கிடக்கிறவன்";
"குறையாத வேகத்தோடு, சினந்து தன்னைத் தாக்கிய
சிவப்புக் காளையை அதன் செவியின் அடிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு, அதன் வலிமைமை அடக்கித் தழுவும்
காயாம்பூவாலான கண்ணியைச் சூடிய இடையனது அழகைப் பாராய்!
தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை
அதன் வாயைப் பிளந்திட்டு அதனைக் கையால் அடித்த சமயத்தில் இப்படிப்பட்டவனாயிருந்தானோ அந்தக்
கண்ணன் என்று கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு";
அங்கே, பெரிய புலிக்கூட்டமும், பெரும் யானைக் கூட்டமும்
ஒன்றற்கொன்று தாக்கிக்கொண்டு போரிட்டதைப் போலப் போரிட்டு, இடையரும்
தம் காளைகளைப் பிடித்துக்கொண்டு ஒன்றாக அந்தத் தொழுவை விட்டகன்றனர்; அவ்விடத்தில்
மயில் கழுத்தைப் போன்ற நிறத்தையுடைய அணிகலன்கள், பவழம் போன்ற சிவந்த நிலத்தில் மாறுபட்டுக் கிடக்க,
நிறைந்த இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மைதீட்டிய கண்களையுடைய
காதல் மகளிரும் அவரின் கணவர்களும் விருப்பத்துடன்
சாணம் மெழுகிய மன்றத்தில் குரவைக்கூத்து ஆடுவதற்காகத் தழுவிக்கொண்டு,
"கொல்லுகின்ற வலிமையுள்ள காளையின் கொம்புகளுக்கு அஞ்சுபவனை, மறுபிறப்பிலும்
தழுவிக்கொள்ளமாட்டாள் ஆயர்மகள்" என்றும்
"அஞ்சாதவராய்க் கொலைத்தொழிலையுடைய காளையை அடக்குபவரை அன்றி
உள்ளத்தில் உரம் இல்லாதவர்கள் அணைத்துக்கொள்வதற்கு அரியது, உயிரைத் துறந்து
நைந்துபோகும் நிலையிலிருந்தாலும், ஆயர் மகளிரின் தோள்கள்" என்றும்,
"உயிர் என்பது ஒரு காற்று என்பதை உணராது, அதனைக் காத்துக்கொள்வதற்கு
விரிந்த வாயையுடைய கொம்புகளுக்கு அஞ்சுகின்ற மனத்தினர் வந்து அணைத்துக்கொள்வதற்கு
அவ்வளவு எளிதாகப்போய்விட்டதோ ஆயர் மகளிரின் தோள்கள்?" என்றும்
"பரிசமாகப் பொருள் ஏதும் கேட்கமாட்டார் எம் குலத்து ஆயர் மகளிர்,
கொலைத்தொழிலையுடைய காளையின் கொம்புகளுக்கு இடையே, தாம் விரும்புகின்ற மகளிரின் மார்பின்
முலைகளுக்கு இடையே தலைவைப்பதைப் போல புகுந்து பாய்ந்தால்" என்றும்
இவ்வாறாக
குரவைக் கூத்தில் தழுவிக்கொண்டு நாம் எமது மரபுப்படி பாடி,
குன்றாத சிறப்பின் புகழையுடைய தெய்வத்தைப் போற்றுவோம்,
குற்றமற்ற அழகிய கடலில் பரந்துகிடக்கின்ற இந்தத் தொன்மையான நிலத்தை
ஆளுகின்ற உரிமையோடே சேர்ந்த
எம் அரசன் பாண்டியன் வாழ்வானாக, இந்த அகன்ற இடத்தையுடைய உலகத்தில்.
 
மேல்



# 104
மிகுந்த அலைகள் மேலேறியதால் தன் நிலத்தைக் கடல் கவர்ந்துகொள்ள,
மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,
சோழனின் புலிச் சின்னத்தோடு, சேரனின் வில் சின்னத்தையும் நீக்கி, புகழ்மிக்க கயல் சின்னத்தை அங்குப் பொறித்து,
தன் வலிமையினால் பகைவரை வணங்கச் செய்த வாட்டமுறாத தலைமைப் பண்பையுடைய பாண்டியனின்
பழைமையான புகழை நிலைநிறுத்தின குலத்தோடு தோன்றின
நல்ல பசுவினத்தின் ஆயர்கள் ஒன்றாகக் கூடி எல்லாரும்,
விண்ணைத் தோயும்படி ஓங்கிய பிரகாசமாய் ஒளிவிடும் பனைக்கொடியினையுடைய
பால் நிற வண்ணனாகிய பலராமன் போல் குற்றமற்ற வெள்ளைநிறக் காளையும்,
பகைவரை மாய்ப்பதில் சிறந்து விளங்கிய, பொன்னால் புனைந்த புகழ்பெற்ற சக்கரப்படையையுடைய
திருமகள் உறையும் மார்பையுடைய திருமாலைப் போல் திறம் கொண்ட கருமையான காளையும்,
மிகுதியாய் ஒளிரும் தாழ்ந்த சடையினையும், ஒருபக்கத்தில் வீற்றிருக்கும் பிறை போன்ற நெற்றியையுடையவளையும் உடைய
முக்கண்ணனின் நிறம் போல பகைமையுணர்ச்சி மிகுந்த கபிலை நிறக் காளையும்,
பெரிய கடலைக் கலக்கி மாமரத்தை வெட்டின மீளாத போரையுடைய
வேலில் வல்லவனான முருகனின் நிறத்தைப் போல அச்சந்தரும் சிவப்புக் காளையும், இவை போன்ற
போரிடும் குணமுள்ளவைகளும், பிற காளைகளும்
பல்வேறு நிறங்கள் கொண்ட பலவகை மேகங்கள் ஒன்றுகூடியதைப் போல
மிகவும் விருப்பத்துடன் ஒவ்வொன்றாக நுழையும்படி விட்டனர் தொழுவிற்குள்;
அவ்விடத்தில், "முள் போன்ற கூரிய பற்களைக்கொண்ட அழகியான இவளைப் பெறுவான், இந்த ஒப்பில்லாத
வெள்ளைக் காளையின் கழுத்தை அணைபவன்;
ஒளிரும் அணிகலன்களைக்கொண்ட, வாரப்பட்ட இவளின் கூந்தலில் தூக்கத்தைப் பெறுவான், கூர்மையான கொம்புடைய
கரிய நிறக் காளையின் சினத்துக்கு அஞ்சாமல் அதனை அடக்குபவன்; ஈரம்படிந்த சிவந்த கண்வரிகளையுடைய,
மருளுகின்ற பெண்மானின் பார்வையைக் கொண்ட இந்த மங்கையைப் பெறுவான் இந்த
சிவந்த கண்களைக் கொண்ட கொலைவெறிபிடித்த காளையை அடக்குபவன்; அலங்காரமான குழையணிந்தவளின்
மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களில் தூக்கத்தைப் பெறுவான், கொடுமையான வலிமையினையுடைய
சிவந்த காளையின் சினத்துக்கு அஞ்சாதவனாய் அதனைத் தழுவுபவன்" என்றவாறு
ஆயர்கள் தம் முறைப்படி அந்த நல்ல மகளிரைப் பறையறைந்து தெரிவித்தனர்;
அன்றைக்குரிய விண்மீன்கள் அருகே சூழ்ந்திருக்கும் திங்களைப் போல, பரண் மீது
விரும்பி நிறுத்தினர் அழகாக;
அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,
வலிமையில் குறையாத இளைஞர்களின் ஏறுதழுவதலை எதிர்கொண்டு பாய்ந்தன,
நறும்புகை வலமாக எழ, விடுவதற்காக நிறுத்தப்பட்ட காளைகள்;
அந்தக் காளைகளை
அணைப்பதற்கான மிகுந்த வெறியுடன், பார்வைப் பரணை விட்டு இறங்கி, முன்னேறிச் சென்று
வேலின் முனையைப் போன்ற வெற்றித்திறம் கொண்ட கூர்மையான கொம்புகளின் குரோதத்துக்கு அஞ்சாதவனாய்ப்
பால் நிற வெள்ளைக் காளையின் கழுத்தைப் பாய்ந்து பிடித்தவனைப்
பொறுத்துக்கொள்ளாமல் குத்தும் இளமையான கரிய காளையின் தோற்றத்தைப் பார்!
பால் போன்ற திங்களைக் கவ்விய பாம்பினை, அதன் பிடியிலிருந்து விடுவிக்கும்
நீல நிறத்தவனான திருமாலைப் போன்றிருக்கிறது;
விழுந்து எழுந்து, அதிர்ந்து நடுங்கி, தாண்டிக்குதித்து பலரும் சேர்ந்து ஓட,
எலும்புகள் முறியவும், கைகால்கள் ஒடிந்துபோகவும், குடல் சரியக் குத்தி, தன்னுடைய
கொம்பின் வலிமை அழியும்படி தழுவியவனை நாலாபுறமும் ஆட்டி, அங்குமிங்கும் சுற்றித் துவைத்தெடுக்கும்
குன்றாத சினங்கொண்ட அழகையுடைய காளையைப் பார்! இது ஒன்று!
அச்சம்தரும் மருந்துப்புகை எழுப்ப, வெகுண்டு
சுற்றித்திரியும் கொலைவெறியுள்ள களிற்றினைப் போல் இருக்கிறது;
தன் மனவூக்கத்தால் எழுந்த துணிச்சலான ஏறுதழுவலைத் தவிர்க்கமாட்டாமல் முன்னே சென்று
தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல் தளர்ந்து
தான் பிடித்த பிடி வழுக்கித் தன் முன்னே வீழ்ந்தவனை முட்டித்தள்ளாமல்,
திரும்பிச் செல்லும் புள்ளிகளையுடைய காளையின் தோற்றத்தைப் பார்! உக்கிரமான போரில்
தன் வாளுக்குத் தோற்று விழுந்தவனை, நமக்குப் பொருத்தமற்றவன் என்று வெட்டாமல் சென்றுவிடும்
வீரமிக்க மறவனைப் போல இருக்கிறது;
இவ்வாறாக, சினம் மிகுந்து, உடம்புகளைக் கிழித்து, மிதித்து நாசமாக்கும் வகையில் ஏறுகள் எதிர்நிற்க,
மீண்டும் மீண்டும் இளைஞர்கள் வந்து தாக்க,
தசைத் துண்டங்கள் தெறித்துத்தெறித்துச் சிதறிக் கிடக்க,
இடியின் முழக்கத்தைப் போன்று இன்னிசைக்கருவிகள் ஓங்கி முழங்க,
ஏறுகளின் குத்துக்களைத் தாங்கிக்கொள்பவரும், அவற்றின் மேல் பாய்ந்து ஏறிக்கொள்பவரும்,
அவற்றின் கொம்புகளிடையே தம்மை நுழைத்துக்கொள்பவரும், வீராப்பாய்ப் பேசித்திரிவோரும் ஆகியவற்றவரோடு
போரினை விரும்பி அதனை மேற்கொண்ட நூற்றுவர்கள் தோல்வியடையும்படி
வரிந்து கட்டப்பட்ட வலிமை பொருந்திய வில்லினையுடைய ஐவர் போரிட்ட
போர்க்களம் போன்று இருந்தது தொழுவம்;
தொழுவுக்குள் விட்ட காளைகள் எல்லாம் மேய்புலத்திற்குச் செல்ல, குன்றாச் சிறப்பையும்
கண்கவரும் அழகையும் கொண்ட மகளிரும் இளைஞரும் வளம் நிறைந்த ஊர்
நடுவே குரவை ஆடுவர் தழுவிக்கொண்டு;
"பாடுவோம் வாருங்கள்! இடையனின், கொலைத்தன்மை கொண்ட காளையின்
கொம்புகள் உண்டாக்கிய தழும்புகளையுடைய மார்பினை";
"நெற்றியில் சிவந்த சுழியினைப் பெற்ற காளையின் ஆற்றலை அழித்தவனின் மார்பினை,
இதுவரை என்னைப் பழித்துரைத்தவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படியாக நான் தழுவாமல் ஓயமாட்டேன்,
இனி இந்த ஆயர்மகளிர் தாழ்வாகப் பேசினால், அதனைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளமாட்டாள் இந்த ஆயர்மகள்;
தோழி! ஒன்றாக நாம் சேர்ந்து ஆடும் குரவைக் கூத்தில், நம்மை
இளக்காரமாகப் பார்த்து, வருத்தமுறும் நோயைச் செய்தது,
சிவந்த கண்களைக் கொண்ட கொலைக்குணமுள்ள காளையை அடக்கிவிட்டேன் நான் என்னும்
செருக்கினால் அன்றோ அந்த ஆயர்மகன்?"
"அழகிய அணிகளை அணிந்தவளே! யாராலும் அணைக்கமுடியாது என்று நிறுத்தப்பட்ட கொலைகாரக் காளையான
காரியின் சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்து அதை அடக்கிய அந்த இளைஞனுக்கே
மகிழ்ச்சியுடன் எம் வீட்டார் உன்னைக் கொடுப்பது என்று முடிவுசெய்தார், வெட்டிப் பேச்சுப் பேசிய
ஊராரின் தலையிலே மிதித்து;
இனி,
தொன்மைமிக்க கதிர்விடுகின்ற சக்கரப்படையை உடையவனை வாழ்த்துவோம், ஓங்கியடிக்கின்ற
இடியோசை போன்ற முரசினையுடைய பாண்டியனின்
ஆணையே எங்கும் பரவுக இந்த உலகம் முழுவதும் என்று".
 
மேல்



# 105
பகையரசர்கள் தோல்வியுறும்படி அவர்களை வென்று, கொன்று, அந்த வழியில் கொணர்ந்த
மும்முரசுகளுக்கு உரிமைபூண்ட முதுமையான குடியில் வந்த பகைமையுணர்வு மிக்க பாண்டியர்க்கும்,
மேன்மை மிகுந்த சிறப்பினையுடைய அந்தப் பாண்டியரின் தொன்மையான குடியில் வந்தவனுக்கும் உரிமையானது என்று
உலகம் பாராட்டும் முத்துக்களோடு, ஒலிக்கும் கடல் கொடுக்கும் பொருள்களையும் பெற்ற
மிகுந்த பெருமிதத்தினையுடைய உவகையராய் ஒன்று சேர்ந்து கூடி,
அப் பாண்டியர்க்குத் தீது இன்றிப் பொலிவன ஆகுக என்று தெய்வத்திற்குச் சிறப்புக்களைச் செய்வதற்கு,
அவருடைய கேடில்லாத குடியின் பின்னர்த் தோன்றிய பெரிய குடியில் பிறந்த ஆயரும்,
மாசற்ற உள்ளத்தோடு ஒன்றுகூடிக் காளைகளை ஆராய்ந்து,
வளம்செறிந்த உருண்டையான சக்கரப்படையையுடையவன் வாய் வைத்து ஊதிய வெண்சங்கு போன்ற
தெளிவாக விளங்கும் வெள்ளைச் சுழியை நெற்றியில் கொண்ட கரிய காளையும்,
சிறப்பான குழையணிந்த பலராமனின் மார்பில் ஒளிவிடும் மாலை போல ஒளி மிகும்படி
ஒப்பற்றதாய் அமைந்த சிவந்த மச்சத்தைக் கொண்ட வெள்ளைக் காளையும்,
பெரும்புகழையுடைய குந்தாலிப் படையினைக் கொண்ட சிவபெருமானின் நீலமணி போன்ற கழுத்தின் அழகு போன்ற
கரிய சொரசொரப்பான கழுத்தினைக் கொண்ட உயர்ந்த திமிலையுடைய கபிலநிறக் காளையும்,
வருத்தத்தை உண்டாக்கும் வச்சிரப்படையையுடைய இந்திரனின் ஆயிரம் கண்களைப் போன்றிருக்கும்
பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்,
வேலில் வல்ல முருகனின் உடையாகத் தாழ்ந்து விளங்குகின்ற வெண்மையான துகிலைப் போன்று
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்,
காலனின் வலிமை போன்ற வலிமைகொண்ட பிற காளைகளும், மிகுதியாக,
ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,
உயிர்களை விடாமல் துரத்திச் செல்கின்ற சமயத்தில், நிறைந்திருக்கும் உயிர்களை உண்பதற்காக,
ஒன்று சேர்ந்து சுற்றித்திரிவது போல், சுற்றித்திரியும்படி நுழையச்செய்தனர் தொழுவுக்குள்;
அந்நேரத்தில்
கார்காலத்தில் தோன்றிய மிகுந்த ஒலியினையுடைய கடுமையான பேரிடியைப் போன்று இசைக்கருவிகள் முழங்க,
பரந்து உயர்ந்து எழுந்து அசைவாடும் மேகமூட்டத்தைப் போல நறுமணப்புகை மேலெழ,
ஒன்று போல இருக்கும் பூவிதழ்களை நேர்நேராக வைத்துத் தொடுத்த மணமிக்க மாலை அணிந்த மங்கையர் வரிசையாக நிற்க,
ஒரேவிதமான ஓலிப்புகொண்ட மிகுந்த ஆரவாரம் உள்ள நிலையில் காளைகளை வருத்துகின்ற முனைப்பு மிகுந்திருக்கும் சீற்றமுள்ள ஆயர்
செறிவாக, அடைத்துக்கொண்டு எழுகின்ற, கண்களை மறைக்கும் புழுதி, விண்ணையும் தோய,
ஆரவாரத்துடன் பாய்ந்தனர் தொழுவிற்குள்;
கொம்புகளைப் பிடித்துக்கொண்டும், மார்பில் ஏந்தித்தாங்கிக்கொண்டும்,
கழுத்தைக் கட்டிக்கொண்டும், திமில் இற்றுப்போய்விடுமோ என்னும்படி தழுவிக்கொண்டும்,
தோள்களுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டுப் பிடித்துக்கொண்டும், நெருங்கி நின்று குத்துக்களைத் தாங்கியும்,
வரிசையாகத் தம்மேல் வந்து விழுவாரை தம் நீண்ட கொம்பினால் தாக்கி,
பிடிப்பதற்கு இடம்கொடாமல் தடுத்துநிறுத்தின காளைகள்,
மீண்டும் மீண்டும் அணைக்க வருவோரையெல்லாம், கொம்பு நுனியினால் சாகும்படி குத்தி,
பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!
வாழ்நாள் குறைந்தது என்ற குறைபாட்டின் காரணமாக, ஒருவரின் பின் சென்று, அவரை வருத்தி
அவரின் உயிரைக் குடிக்கின்ற கூற்றுவனைப் போல் இருக்கிறது;
குத்துக்களை மார்பினில் ஏற்றுக்கொண்டவரை, அவர் சாகும்படி குத்திய சிவப்பும் கருமையும் கலந்த காளையின்
கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார்!
மிக்க பொலிவிடன் மலர்கின்ற தருணத்தை எதிர்நோக்கி, நறாம்பூவின்
மொட்டுக்களைச் சூழ்ந்து திரியும் தும்பியைப் போன்றிருக்கிறது!
குறுக்கே பாய்ந்து தன் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டவனையும் சேர்த்துக்கொண்டு
மேடைமீது பாய்கின்ற வெள்ளைக் காளையைப் பார்!
ஒளி வீசும் வானத்தில், பாம்பின் வாயில் சிறிதளவு அகப்பட்டபடியே
உலாவரும் வெண்மதியைப் போன்றிருக்கிறது;
இவ்வாறாக, காளைகளும் இடையரும் போட்டிபோட்டுக்கொண்டு பகைமைகொண்டு நிற்பதால், பின்வாங்காமல்
இரண்டு பெரிய வேந்தர்கள் பகைமைகொண்டு எதிர்ப்பட்ட
போர்க்களத்தைப் போன்றிருக்கிறது தொழுவம்;
வென்று உயர்ந்த புகழும், பழங்குடிப் பெருமையும் கொண்ட, கழுத்து முழுவதையும் மறைக்கின்ற அசையும் திமிலைக்கொண்ட
நல்ல காளையை வெற்றிகொண்ட, ஆயனின் முகத்தைப் பார்த்து
இமைக்கவும் மறந்தன ஆயமகளின் கண்கள்;
நறிய நெற்றியையுடையவளே! என்ன ஆயிற்று இப்போது? நாம் நம் கூந்தலை அவிழ்த்து ஆற்றிவிட,
அது முல்லைமணம் கமழக் கண்டதற்கு, உள்ளம் மாறுபட்டு,
பொறுக்காமல் சண்டைபோட்டு என் சுற்றத்தார் கொண்டாரே, இந்த இளைஞன் வெற்றிகொண்ட
கொலைத்தன்மையுள்ள காளையைப் போன்ற கோபம்? (அது என்ன ஆயிற்று இப்போது?)
நீண்ட கரும் கூந்தலையுடையவளே! இதோ பார்! இன்னொன்று சொல்கிறேன்!
அந்த எருமைக் கூட்டத்து ஆயர் மகனோடு நாம் காதல்கொண்டதனுக்கு
எம்மிடம் எம் சுற்றத்தார் பொறுத்துக்கொண்டனர்; அது பொறுக்காத இவ்வூரார்
கண்கள் தீய்ந்துபோவது ஏன்?
ஒளிவிடும் நெற்றியையுடையவளே!
இதைக்காட்டிலும் மகிழ்ச்சிதரக்கூடியது வேறு எது? எமது தாய் என்னைக்
கண்பார்வையாலேயே அதட்டி வருத்தியதைக் கண்டு, என்னை
மலர்மாலையைத் தலையில் அணிந்திருக்கும் அந்த இடையனோடு சேர்த்துவைத்து எண்ணி
கிசுகிசுக்கச் செய்துவிட்டது இந்த ஊர்;
மனமொன்றி, புகர்நிற பசுக்கூட்டத்தையுடைய ஆயர் மகனுக்கு, ஒளிரும் அணிகலன் அணிந்தவளே!
இன்று என்ன என்னை எம் சுற்றத்தார் கொடுப்பது? அன்றைக்கு அவன்
கோபம் மிகுந்து தன் மேல் பாய்ந்த செங்காரிக் காளையின் கொம்புகளிடையே
தன்னைப் புகுத்திக்கொண்டு போரிட்டபோதே அவனிடம் புகுந்துவிட்டது என் நெஞ்சு என்று கூற,
ஒலி முழங்குகின்ற கடற்பரப்பில் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ள
வெற்றி கொண்ட சக்கரத்தையுடையவனை வாழ்த்துவோம், பிறநாடுகளைக் கைப்பற்றி
இனிய ஓசையையுடைய முரசினையுடைய பாண்டியனின் ஆட்சி நிலைகொண்டு
சிறப்புற்றிருப்பது, அருவிகள் ஆரவாரிக்கும்
இமையத்திற்கும் வடக்கேயும் பொலிவுடன் இருக்கட்டும் என்று.
 
மேல்



# 106
பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;
அவ்விடத்தில்,
புழுதியைக் கிளப்புபவை, மண்ணைக் கொம்பினால் குத்துபவை,
மாறி மாறி முழக்கத்தை எழுப்புபவை, உக்கிரமாய்ப் பாய்பவை என
அசைகின்ற திமிலைக் கொண்ட நல்ல பல கூட்டமான காளைகள், போர்க்களத்தில் புகுகின்ற
வீரரின் அழகைப் போன்று விளங்கின;
தமக்குள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு, காலினால் மண்ணைப் பறித்துத் தள்ளி, எல்லா இடங்களிலும்
கூர்மையான நுனியைக் கொண்ட தம் கொம்புகளால் விடாமல் குத்துவதால்,
உடம்பிலிருந்தும் ஒழுகுகின்ற செங்குருதியைக் கொண்ட காளைகள் எல்லாம், காலைப் பொழுதில் பெய்கின்ற
செம்மேகக் கூட்டத்தைப் போன்றிருந்தன;
அவ்வாறு சண்டையிடும் காளைகளைப்
பிரிப்பதற்காக, அவற்றினூடே பிற காளைகளை ஓட்டி, மாடுகளனைத்தையும் மேய்ச்சல் நிலத்தில் கொண்டு சேர்த்து,
அவற்றை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கின்ற இடையர் செய்கை,
வடிவழகு நிரம்பிய இந்தப் பெரிய உலகைப் படைப்பதற்காக, இறைவன்
விரிந்த கடலை அகற்றிய பெரும் செயலைப் போன்றிருந்தது
அவ்வாறு பிரிக்கின்றவர்களை ஓடஓட விரட்டி மிதித்து, எதிர்த்து நிற்பவர்களை முட்டித்தாக்கி,
நெருப்புப்போன்ற முனையினைக் கொண்ட கொம்புகளால் குத்தி, உழலை கோக்கும்
மரத்தைப் போல துளைத்தன காளைகள்;
துளைபட்ட தம் புண்ணிலிருந்து ஒழுகுகின்ற குருதியைக் கையால்  துடைத்து, உடம்பிலும் தடவிக்கொண்டு,
சற்றும் தாமதிக்காமல் அந்த இடையர், கடலுக்குள் போகும் மீனவர்கள்
ஓடிச் சென்று தோணிக்குள் தாவி ஏறி அமர்ந்துகொள்வதைப் போலக் காளைகளின் மீது தாவி ஏறி அமர்ந்தனர்;
காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத்
தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை
ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காகப் போடப்பட்ட
மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில்;
அந்நிலையில்,
தம்முடைய மேய்ச்சல் புலத்தில் காளைகளை மேய்வதற்காக ஓட்டிவிட்ட தம்
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர் தழுவிக்கொண்டு ஆடும் குரவைக்கூத்து;
கட்டியணைத்துச் சேர்த்துக்கொள்வோம், கட்டியணைத்துச் சேர்த்துக்கொள்வோம்,
எம்முடைய முலையால் வேதுகொடுத்து ஒற்றியெடுத்துக் கட்டியணைத்துச் சேர்த்துக்கொள்வோம், 
கொலைகாரக் காளை குத்திய புண்ணை, என் தோழியே!
பலமுறை தயிர்கடையும்போது என் தோளில் சிதறிவிழுந்த தயிர்ப்புள்ளிகள் மேல்
கொலைகாரக் காளையை அடக்கியவனின் குருதி கலந்து தோயத்
தழுவிக்கொள்ளுதல் என்னுடைய தோளுக்கு அழகல்லவோ! என் தோழியே!
இங்கு, முட்டவரும் காளையை எதிர்கொண்டு அதன் கொம்புகளைப் பிடிக்க அஞ்சுவதும், ஆய்ச்சியரின்
பெண்தன்மை மிக்க தோள்களை விரும்புதலும் ஆகிய இந்த இரண்டும்
ஒன்றாக நடப்பது இயலாத காரியம் அல்லவா! என் தோழியே!
கொலைகாரக் காளையை அடக்கியவன் இவள் கணவன் என்று ஊரார்
சொல்லுகின்ற சொல்லைக் கேட்டுக்கொண்டே, மோர் விற்று நான் வரும்
மகிழ்ச்சிச் செல்வத்தை என் கணவன் எனக்குத் தரமாட்டானோ? என் தோழியே!
எனவாக,
அடக்குவற்கரிய கொம்புகளையுடைய காளைகளுடன், காதலரையும் பாராட்டிச்
சுரும்புகள் ஆரவாரிக்கும் முல்லைநிலத்தில் நாம் பாடிக்கொண்டு போற்றுவோம்,
எதிர்த்தவர் நாடு பாழாக, அவரிடம் திறை பெற்று,
மாற்றாரை என்றும் வெல்க எம் மறம் சிறந்த வேந்தன் என்று.
 
மேல்



# 107
"ஏடி! இதற்கு ஒருவழி கூறு! வேலிகளில் காலைத்தூக்கிப்போட்டு மேயும்
ஆடுகளை மேய்ப்பவர்க்கும், இந்தப் பசு எத்தனை குடம் பால் தரும் என்று சுட்டிச்சொல்லும் ஆயர்க்கும், எமது
கொல்லுகின்ற காளையைத் தழுவுதலே செய்யவேண்டிய செயல் என்று மாடு மேய்க்கும் ஆயர்கள்
பல காளைகளைத் தொழுவுக்குள் அடைத்துவைத்தார்;
தொழுவத்தில்,
முரட்டுக்குணத்துடன், செவியில் மச்சத்தைக் கொண்ட காளையை அடக்கியவன் தலையில் இருந்த முல்லை அரும்பாலான
வளைவான தலைமாலையைத் தன் கொம்பினால் எடுத்துக்கொண்டு தலையை ஆட்டிய
பாவம், அந்தக் கரும் புள்ளிகளையுடைய காளை துள்ளிக்குதிக்க, அந்தப் பூ வந்து என்
சிலிர்த்த தலைமுடிக்குள் விழுந்தது;
அந்தப் பூவை, தொலைந்துபோன ஒன்றை மீண்டும் பெற்றவரைப் போல எடுத்து நான் முடித்துக்கொண்டதைத்
தாய் கேட்கட்டும் என்று ஊரார் சொல்வார்களோ?"
"கேட்டால், நாம் என்னவாவது செய்யவேண்டுமோ? ஒன்றும் வேண்டாம், பெண்ணே!
நம் தலைவனின் தலைமாலையன்றோ அது!"
"மலர்சூடி அறியாத இவளின் கூந்தலுக்குள், யாரோ ஒருவன்
கையால் செய்த மாலையை முடிந்துகொண்டாள் என்று தாய் கேட்டால்
நாம் ஏதாவது செய்யவேண்டாமோ?"
"எல்லாத் தவறுகளும் மறைந்துபோகும்";
"ஓ! அப்படி மறைவதற்கு வழி என்ன?"
"அவன் ஓர் ஆயர்மகன், நீ ஒரு ஆயர்மகள், 
உன்னை அவன் விரும்புகிறான், அவனை விரும்புகிறாய் நீ, இப்படியிருக்க,
அன்னையைப்பற்றி நொந்துகொள்ளத் தேவையில்லை!" "உன் மனம் போலவே
தாயின் மனமும் இருந்தால்தானே!"
"இன்னும் அப்படியே இருக்கிறாய்!
ஆயர் மகனிடத்திலும் காதல்கொண்டுள்ளாய்! அளவுக்குமீறி
தாயிடத்திலும் பயப்படுகின்றாய்! இப்படியிருந்தால் மிகவும் கடினம்
நீ கொண்ட காதல்நோய்க்கு மருந்து கிடைப்பது!"
"நான் கொண்டுள்ள துயரநோய்க்கு மருந்து இல்லையென்றால், தோழியே!
நான் வருந்தி அழியவேண்டியதுதானோ?"
"வருந்தாதே!
நன்றாகக் கழுவப்பெற்று, களங்கமற்றிருக்கும் உன் கூந்தலுக்குள், காளை அவனின்
பூச்சரம் வந்து வீழ்ந்தது என்று கேட்டு, உறுதியாக,
தெய்வமாகிய திருமாலே அவனை உனக்குக் காட்டியது என்று உன்னை அந்த
பொய்யறியா ஆயனுக்கே கொடுத்துவிட முடிவுசெய்திருக்கிறார்கள் தந்தையுடன்
தமையன்மாரும் எல்லாம் ஒன்றுகூடி".
 
மேல்



# 108
"வலிமை கொண்ட வேந்தர்களின் சேனை பெருத்தும், சிறுத்தும் தங்குகிற இடத்தைப் போல,
அகன்ற அல்குல், தோள், கண் ஆகிய மூன்றும் பெருத்து,
நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து,
தனக்கு வேலை இல்லை என்ற கவலையால் காமனும் காமக்கணை வீசுவதை விட்டுவிட்ட வனப்பினோடு,
அகன்ற மன்றங்கள் உள்ள ஊர்களிலே மோரை விற்றுக் களைத்துப்போய் திரும்பும்போது,
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளை வீசிச்செல்லும்
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?"
"நான் ஆயர்மகள் என்பது ஒன்றும் இழிவுடையதல்லவே!
என்னைப் பெற்றவர் ஆயர் என்றால் நானும் ஆய்ச்சிதானே! 
காயாம்பூவைத் தலையிலே சூடிக்கொண்டு, கருஞ்சிவப்பு ஆடையை உடுத்திக்கொண்டுள்ளாய்!
மேய்கின்ற மாடுகளின் முன்னர் உன் கோலினை ஊன்றிக்கொண்டு நிற்கின்றாய்! ஒரு
ஆயர்மகனைப் போல் நீ இல்லை! வேறாகத் தேவர்களுக்குள்
ஞாயிறாகிய தெய்வத்தின் மகனோ நீ?"
"இவ்வாறு இகழ்ந்து பேசுகிற உன்னோடு வாய்கொடுக்கமுடியாது!
முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாய் அடுக்கிவைத்தது போன்ற
பல்லும், மூங்கில் போன்ற தோள்களும், பெரிதாய்ச் செழுமையாக இருக்கும் மைதீட்டிய கண்களும், ஆகிய இவற்றால்
நான் அழகி என்று தற்பெருமை பாராட்டிக்கொள்ளும்
சொல்லாட்டியே! உன்னோடு சொல்லாடக்கூடியவர் யார்?"
"அப்படியென்றால் ஒன்றும் சொல்லாதே!"
"உன்னைத் தடுத்துநிறுத்துவேன்! இந்தத் தொல்லையைப் பார்!
பொருந்தாதவற்றைக் கூறிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றாய்!
கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர்
தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்குவது போல நீ கேட்கும்படியாக உன்னிடம்
நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!"
"நீ என்ன கடன் வாங்கினாய் என்பதைச் சொல்கிறேன்;
மோரினை விற்றுவிட்டு நீ திரும்புவாய், உனக்குத்தெரியும் இல்லையா! அப்பொழுது
செம்முல்லை மலர்கள் செறிவாகக் கிடக்கும் ஒரு காட்டாற்றுக்குச் சற்றுத்தள்ளி
மாம்பிஞ்சைப் பிளந்தது போன்ற உன் கண்களினால் என் நெஞ்சத்தைக் கவர்ந்து
அதனை ஆட்சிபீடமாகக் கொண்டு ஆள்கின்ற ஒரு களவாணிப் பெண் நீ அல்லவோ!"
"உன் நெஞ்சினை ஆட்சிபீடமாகக் கொண்டு நான் ஆள்வது எனக்கு எப்படி எளிதாகும்?
அந்த நெஞ்சு, தினைப்புனத்தில் இருக்கும் என் தமையனுக்குச் சோறு கொண்டு தருமோ?
மந்தையை மேய்க்கும் என் தந்தைக்குக் கறவைச் செம்பு கொண்டு தருமோ?
தினை அரிந்த தாளில் என் தாய் மேயவிட்ட கன்றுகளை மேய்த்து வருமோ?"
"அனைத்தையும் என் நெஞ்சு செய்யும்!
கடைந்த மோரில் வெண்ணெயைக் கையால் உருட்டும் ஓசை கேட்கும் அளவுக்கு வெகு தூரம் இல்லாமல்
மிகவும் அருகிலிருக்கிறது ஊர்; பொழுதோ உச்சிவேளை;
கண்களைக் கூசவைக்கும் பேரழகு பெற்ற பெண்ணியல்பையும்,
மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய கருப்பழகியே! இந்த
வெயிலில் எங்கே விரைந்து செல்கிறாய்? இங்கே அருகில் பார்!
பெண்யானை தூங்குவது போன்ற பாறையின் மேலே, நுங்கின்
வெட்டின கண்களைப் போன்ற சிறிய சுனைகளில் நீராடி,
குளிர்ச்சியான பூக்களான செம்முல்லை, முல்லை ஆகியவற்றைப் பறித்து,
தனியாகக் காயாம்பூ மலர்ந்த குளிர்ந்த சோலையில் என்னுடன் தங்கியிருந்து
பொழுது குளிர்ந்து சாயப் புறப்படுவாய் உன் ஊருக்கு";
"இப்போதே புறப்படுகிறேன் நான்!
மானின் மருண்ட பார்வையைப் போன்ற, குளிர்ச்சியான கண்களைக்கொண்ட சிறிய ஆய்ச்சியரான,
உன்னுடைய மயக்கும் சொற்களுக்கு மயங்குவார்க்கு இதைச் சொல்! 
பசுவை வெறுக்காத காளையைப் போல், நாள் ஒன்றுக்குப் பத்துப்பேரைக்
காமுற்று அவர் பின் செல்பவனான நீ, விழித்திருக்கும்போதே கண்ணைக் குத்தும் கள்வன்!
நீ பிறர்க்கு என்ன நன்மை செய்வாய்?
நானும் உனக்கு என்ன நன்மை செய்ய முடியும்?"
"கொலைபுரியும் மைதீட்டிய கண்கள்! கூர்மையான பற்கள்! அப்போதுதான் கொய்யப்பட்ட தளிரைப் போன்ற மேனி!
இத்தகைய வனப்புகளைக் கொண்ட கருப்பழகியே! உன்னிலும் சிறந்தவர்கள் இந்த
உலகத்தில் இல்லை! தெரிந்துகொள்! கிட்டே வா!
மலையைப் போல் அமைந்த மார்புடைய செல்வனான திருமாலின் அடியைத்
தலையினால் தொட்டு உறுதியாகச் சொல்கிறேன்";
"ஒன்றும் தெரியாத மகளிரே அதற்கு உடன்படுவர்; உன் சத்தியத்தை நீ மீறுவாய்! இருப்பினும்,
தேன் நிரம்பிய பொதிகை மலைக்குரிய பாண்டியனின் சிறுகுடியில் வாழும் எம் ஆயர்
அரசனின் நன்மைக்காகப் பலிசெலுத்தும் ஆரவார நிகழ்ச்சியின்போது, உன் காதலியர் கண்ணில் படாமல்
காஞ்சிப் பூவின் பூந்தாதுக்கள் உதிர்ந்தது போன்ற சாண எருவையுடைய ஊர் மன்றத்தில்
ஆடுகின்ற குரவைக் கூத்தில், உன் காதலியர் செவியிற்படாமல்
ஆம்பல் குழலால் மெல்ல மெல்ல ஊதுக, எமது புழக்கடையில்
காஞ்சி மரத்தடியே நான் குறிப்பிடுமிடம்".
 
மேல்



# 109
கார்காலத்து மழை நிறையப் பெய்த பச்சை மணக்கும் அகன்ற நிலத்தில்
அங்கேயே இருந்து நிறைய அறுகம்புல்லை வயிராறத் தின்று,
நீர் நிறைந்த நிழலிடத்தில் தங்கி, குடம் பால் சுரக்கும் பசு மந்தையினுள்ளும்,
போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த இளம் எருது
வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்
பெரிய ஊர்களிலும், சிறிய ஊர்களிலும் தன்னைப் பற்றிய பேச்சு பெரிதாக எழச் செய்பவளைப் போல
மோரோடு வந்தவளின் அழகைப் பார்! ஊரிலுள்ள எந்தவொரு பெண்ணோடும்
ஒப்புமை கூற இயலாத வனப்பையுடையவள்;
தன் வீட்டார் செய்துகொடுத்து, தலையின் ஒருபக்கத்தில் சூடிய
பூச்சரத்தையும் தாங்க முடியாத, வளைந்து உயர்ந்து அகன்ற அல்குலையுடையவள்,
காம உணர்வற்றவர் நெஞ்சத்தையும் புண்ணாக்கிவிடும் பார்வையைக் கொண்ட இவளின் உடம்பு முழுதும்
கண்ணை உடையவளோ இந்த ஆயர்மகள்?
இவள்தான், திருத்தமாகச் செய்யப்படாத சும்மாட்டினை உடையவள், மறுதோளை வீசிக்கொண்டு
ஒரு தோளின் கீழ் பல நிறமுடைய நெல்மணிகளைக் கொண்ட கூடையை இடுக்கிக்கொண்டு, அழகிய குழைகள்
காதில் ஆடுகின்ற அழகி, தலைச்சுமையைத் தாங்கும் கழுத்தைக் காட்டிலும் உறுதியானது, மார்பைத் தாங்கும்
இந்த நுண்ணியதாகக் காட்சியளிக்கும் இவளின் இடை;
இடையே வேறுபாடு தெரியாத அளவுக்குப் பேரழகிகளான ஊர்வசி, திலோத்தமை ஆகிய இருவரும் தத்தம்முடைய
அழகையெல்லாம் இவளுக்குக் கொடுத்துவிட்டனரோ?
தன் கையிலுள்ள மன்மத வில்லைக் கீழே போட்டுவிடுவான் பாருங்கள் காமன், தனக்குப் பலியுணவாகப்
பாலோடு அவனுடைய கோவிலுக்குள் இவள் புகுந்தால்;
இவள்தான் பார்ப்பவர் வருந்த அவருக்குத் துன்பத்தைச் செய்து போவாளன்றி யாருக்கும் மருந்தாகமாட்டாள்,
ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் என்று ஊர்ப்பெண்கள்
மோர் வேண்டாம், புளிப்புக்கு மாங்காய் ஊறுகாயை வைத்துக்கொள்வோம், இந்தப் பக்கமே வரவேண்டாம்,
உன் சொந்தபந்தங்களோடு ஊரைவிட்டுப் போய்விடு என்று அவரவருடைய
கணவன்மாரை வெளியில் போகவிடாமல் காத்துக்கொண்டு நாள்முழுவதும்
வாசலையும் அடைத்துக்கொண்டு இருக்கவேண்டி வரும்.
 
மேல்



# 110
"காவல் மிக்க இந்தப் பெரிய காப்பு வளையத்துக்குள் இருக்கும் ஆட்டிடையர்களின்
வீடுதோறும் உள்ள மகளிரை விரும்புகின்றாய்! ஏடா!
கொட்டிய தேளுக்கு உடனே மருந்து போடுவது போன்றதோ உன் வேட்கைக்குத் தீனி போடுவது? என் மேனியைத் தொட
உன் கிட்டே வந்து உனக்கு இடங்கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, நீ உடனே என்னைத்
துய்ப்பதற்கு எளியவளாய்க் கருதிவிட்டாய்! சிறிது மோர் வேண்டினார்க்கு மோர் அளித்தவள்
வெண்ணெய் கேட்டாலும் தருவாள் என்று எடுத்துக்கொண்டாய்!"; "ஒளிரும் நெற்றியை உடையவளே!
அப்படி நீ கூறினால், அப்படியே ஆகுக, நீ போகலாம்!
உன் மீதுள்ள அச்சத்தால் உன்னை விட்டு என்னிடம் வந்து, இங்கும் இருக்கமாட்டாத வருத்தத்தால் உன்னிடம் சென்று,
இவ்வாறாக நித்தமும் தடுமாறுகின்றது, மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!
தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;
விடிந்த பிறகும் வீட்டைவிட்டு மேயப் போகாமல்
வேலிசூழ்ந்த தொழுவினுள் கட்டப்பட்டிருக்கும் கன்றினையே நினைத்துக்கொண்டிருக்கும்
முதற் கன்று ஈன்ற இளம் பசு போல உன்னைக் கண்டு ஒவ்வொரு நாளும்
மேனியை நடுக்கும் துன்பத்தில் ஆழ்கின்றது என் நெஞ்சு;
எப்பொழுதுமே என்னிடத்தில், நான் உன்மீது கொண்ட காதல்நோய் அதிகமாக,
நெய்யைக் கடைந்து எடுத்துவிட்ட பாலைப் போலப் பயனொன்றும் இல்லையாகி,
உன்னைத் தொட்டது மட்டுமேயன்றி, வேறு ஒரு செயலையும்
அறியாது இந்த இரங்கத்தக்க எனது உயிர்";
"நீ அப்படிப்பட்டவனா? பொது இடத்தில் பார்த்து அங்கே நல்லவரின் மகளிரிடம்
'நீ இல்லாமல் வாழமாட்டேன்' என்று இதற்குமேலும் சொல்லிக்கொண்டு
நிற்கிறாய்! நீ இப்போது சென்றுவிடு! எம் வீட்டார் பார்த்துவிடுவர், நாளையும்
கன்றுடன் வருவேன் இந்த இடத்துக்கு".
 
மேல்



# 111
இனிய பாலைக்கறந்த பாத்திரங்களை எடுத்துவைத்துவிட்டு, எல்லாக் கன்றுகளையும்
கயிற்றால் கட்டி வீட்டில் நிறுத்திவிட்டு, தாய் தந்த
பூவேலைப்பாடும், கரையும் உடைய நீல ஆடையைப் பக்கத்தில் தாழக் கட்டி, ஆட்டம் போட்டவாறு, பாங்கரும்
முல்லையும் பரவிக்கிடக்கும் பூந்தோட்டத்தில், தோழி!, நம்முடைய
ஆட்டினத்தைச் சேர்ந்த ஆயர்மகளிரோடு, எல்லாரையும்
கூட்டிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியே வந்த
குருந்தம்பூச் சரத்தைத் தலையில் சூடிக்கொண்டிருந்த இடையன், என்னிடம்,
"உடம்பு முழுக்க அணிகலன்களை அணிந்த, அழகிய இளம் மங்கையே! நீ கட்டி விளையாடுகின்ற
மணல் வீட்டை நானும் வந்து கொஞ்சம் கட்டிக்கொடுக்கிறேனே!" என்றான், ஏடா! நீ
'எனக்குப் போதும்' என்று பிறர் செய்த வீட்டில் இருப்பவனே!
உலக நடப்பைக் கற்கவில்லையோ? முதலில் அதைக் கற்கப்பார் என்றேன், "முழுமையான அணிகளை அணிந்தவளே!
பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் கூந்தல் மேலும் அழகுபெறும்படியாக, தொடுத்த
மாலையை அணிந்துவிடவா உனக்கு" என்றான், ஏடா! நீ
யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய், மிக மிகப்
பெரிய பேதையாய் இருக்கிறாயே! என்றேன், "மாதே!
வியக்கத்தக்க வகையில் பரந்து கிடக்கும் அழகுத்தேமல் புள்ளிகளை அழகாக உடைய மென்மையான முலைகளின் மேல்
தொய்யில் குழம்பால் கோலம் வரையவோ?" என்றான், நான் அதற்கு அயலார்
எனக்குக் கோலமிடுவதை நான் பார்த்துக்கொண்டிருப்பேனோ? நீ மிகவும்
மையல் கொண்டுள்ளாய், என்னை விட்டுவிடு என்றேன், பெண்ணே!
அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், மறுத்து மறுத்து நான் பதில்சொல்ல,
மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான், அவனிடம் நீ
ஆயர் மகளிரின் இயல்பினை எடுத்துரைத்து, என் தந்தையும்
தாயும் தெரிந்துகொள்ளும்படி அவருக்கு இவனைப்பற்றித் தெரிவித்தால், நான் கொண்ட
இந்தக் காதல்நோயைக் களைந்துபோடுவேன்.
 
மேல்



# 112
"யார் இவன்? என்னை வழிமறிக்கிறான்! நீரில் ஆடுகின்ற
பூவாகிய தாமரையின் மொட்டினை எனக்கு முன்னொருநாள் தந்த, பல மலர்கள் கலந்த மாலையினையுடைய
அறிவில்லாத இடையனே! நீ விலகி நில்! உன்னோடு
பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என் வீட்டார்";
"ஏடி! ஆசையைத் தூண்டும் கண்ணால் மனத்தைக் கலக்கும் காமநோயை உண்டாக்கும்
நடாத கரும்பாகிய ஓவியக் கரும்பு வரையப்பட்ட தோள்களையுடையவரைக் கண்டால்
அவளை விடாமல் பற்றிக்கொள் என்று என் வீட்டார் சொல்லியிருக்கிறார்களே!"
"அவ்வாறு கூறினவர்கள், நல்ல பெண்களைக் கண்டால் தடுத்து நிறுத்தி, ஆசையுடன் அவர்
மலரைப் போன்ற மைதீட்டிய கண்களையும், தோள்களையும் புகழ்ந்து பாட
நன்றாகவே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள், உன் வீட்டார் மிகவும்
கெட்டிக்காரர்கள் என் வீட்டாரிடம் வந்து மணம்பேச";
"ஓ! நடமாட்டமில்லாத நேரத்தில் நீ கன்றுகளை மேய்ப்பதைப் போல்
நடமாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அதை எனக்குச் சொல்லாமல்போனால் அது என்னை
அவர்கள் கேலிசெய்வதுபோல் அன்றோ இருக்கும்?"
"இருக்கும்! எனக்குத் தெரியும்! ஏடா! என்னைப் போகவிடு!"
"விடமாட்டேன் நான்! என்ன சொல்லவருகிறாய் நீ? கரிய கூந்தலையுடையவளே!
உன்னை என் முன்னால் நின்று
பேசவேண்டாம் என்றுதான் சொன்னார்களேயன்றி, அவனை நீ
அணைத்துக்கொள்ளவேண்டாம் என்று சொன்னார்களோ? மெல்ல
என்னைத் தழுவிக்கொள்வாய்! உன் முள் போன்ற பற்களுக்கிடையே ஊறும் அமுதத்தை உண்பேன்"; "என்ன இது?
இந்த மாய்மால இடையன் சொன்ன சொல் எல்லாம்
உண்மையாக வாய்த்தால் இவனோடு சேர்ந்து வாழலாம், பொய்யாகிப்போனால்,
இனிய மென்மையான மார்பில் கமழ்கின்ற மாலையைக் குழையசெய்த உன்
அழகிய மலரிதழ் போன்ற மைதீட்டிய கண்களில் பசலை ஊர, பெரிய மென்மையான தோள்கள்
மெலிவடைந்து போனாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கும்".
 
மேல்



# 113
"அழகு மிகவும் பெருகிய, ஆசைகொள்ளத்தக்க பெரிய மென்மையான தோள்களும்,
மருளுகின்ற செழிப்பான மைதீட்டிய கண்களும் உடைய அழகிய நல்லவளே! நீ உண்டாக்கின
துன்புற்று வருந்தச் செய்யும் நோயிடமிருந்து விடுதலைபெற ஒரு வழியைச் சொல்லிவிட்டுப் போ!"
"பெரிதும் பித்தம்பிடித்தவன் போல எனக்கு முன்னே நின்று என்னைத் தடுக்கிறவனே!
யாரடா நீ! உன்னை எனக்குத் தெரியவே தெரியாதே!"
"தளர்ந்த நடையினையுடையவளே! என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால், பகைக்கு அஞ்சாத
ஆட்டிடையர் இனத்து ஆயர்மகன் நான்!"
"சரிதான் போ!
ஆட்டிடையர் குலத்து ஆயன் நீ எனில் குடம் பால் தருகின்ற
மாட்டிடையர் குலத்து ஆயர் எம் வீட்டார்";
"ஏடி!
உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் பிழையேதும் இல்லை அன்றோ?"
"பிழையொன்றும் இல்லை, நாளை வருகிறேன் விடு!"
"விடமாட்டேன்!
அப்போதைக்குச் சரியென்று சொல்லிவிட்டுச் செல்வாரின் சொல், மறந்துபோய்
பின்னர் நிலையற்றதாய் ஆகிவிடுவதை அறிந்திருந்தாலும், மென்மையான இயல்பினையுடையவளே!
உன்னுடைய சொல்லை நம்பி நான் உன்னைப் போகவிடுகிறேன், ஆனால் என் சொல்லைக்கேட்டு
என் நெஞ்சம் நான் சொன்னபடி செய்தால்";
"என் நெஞ்சு நான் சொன்னபடி செய்யாது என்று சொல்கிற உனக்கு, உன்னையும் மீறி நிற்கும்
காதல் கொண்ட காமம் உன் அறிவைக் கலக்க, மற்றவர்கள் கூறுகின்ற
பொய்யுரைகளை உண்மையில்லை என்று எவ்வாறு உணரமுடியும்?"
"தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீ 'வருகிறேன்] என்றதன் பொருள் இப்பொழுது விளங்குகிறது."
"பலமுறை நாங்கள் காட்டாற்றின் பளிச்சென்ற மணலில் உள்ள குளிர்ந்த சோலையில்
தங்கியும், அகன்ற பாறையில், தோழியருடன் விளையாடியும்,
முல்லைப்பூவும், குருந்தம்பூவும், தலையில் சூடிக்கொண்டும் இருந்திருக்கிறோம், இப்போது பகல் கழிந்து
இரவு வந்து தோன்றியது, இன்னமும் இங்கே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறாய்!" "பாம்பால் கடிபட்டு
இடியைப் போன்று அதிர்கின்ற குரல் போல் முழங்கி, போர்க்குணத்தோடு வீறுகொண்ட
நல்ல காளைகள், இளைய பசுக்களுடன் காத்து நிற்கின்றன
பல பசுக்களைக் கொண்ட கூட்டத்தில், நாம் உடன் வருவதற்காக".
 
மேல்



# 114
"விரல்களால் கோதப்பட்டு, அலையலையாக, பெரிய முதுகுப்பக்கம் விழுந்துகிடக்கிற
நீண்ட தலைமுடியை உடைய ஆண்மகன் அழுதுகொண்டிருந்தான் என்கிறார்களோ,
புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி,
திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? 'அறிவு கெட்ட
கோழையே' என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ
தோழி! அவனிடம் போய்";
"போக எனக்குத் தெரியும்! அவனிடம் என்ன சொல்லவேண்டும் என்று சொல்";
"தன்னுடைய விருப்பத்தைப் பற்றி ஒரு சொல்லும் சொல்லாத பேதையிடம், இளம்பெண்ணே! 'ஏடா!
இந்தத் திருமணம் உனக்கில்லாமல் உன் கையைவிட்டுப்போகும், அதற்கும் நெடுநாள் இல்லை,
அந்த மணம் உனக்கே வரவேண்டுமென்று உறுதியாய் எண்ணுவாய்', என்று இவ்வாறாக
நீ சொல்லிய சொல்லும் அவன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்;
புதிதாய்த் தருவிக்கப்பட்ட மணலைக் கீழே பரப்பி,  வீட்டுக்குச் செம்மண் பூசி,
எருமைமாட்டுக் கொம்பை நட்டு எமது சுற்றத்தார் இங்குக் கொண்டாடும்
பெரிய திருமணமெல்லாம் அவனில்லாமல் நிகழ,
வரிவரியாய் மணல் கிடக்கும் துறையின் முன் மணல்வீடு கட்டி விளையாடிய
அழகிய நெற்றியையுடைய தோழியர் தாமாகச் சேர்த்துவைத்த
ஒரு திருமணத்தை என் நெஞ்சு அறியும் என்றால், சிறிதளவேனும்
மனக்கலக்கத்தை கைவிட்டு இருக்கவோ? பரந்து
விரிந்த கடலை ஆடையாகக் கொண்ட உலகத்தையே பெற்றாலும்
சிறந்த நெறியையே உடைய ஆயர் மகளிர்க்கு
இரண்டு திருமணங்கள் நடப்பது நம் குடும்பத்தின் இயல்பு அல்லவே!"
 
மேல்



# 115
"தோழியே! நாம் பிறர் காணாமல் உண்ட கள்ளின் களிப்பு நம் மேனியில் தோன்றி
வெட்கமில்லாமல் சென்று பிறர் நடுங்கும்படியாக அவருக்கு வெளிப்படுத்துவதைப் போல,
நாம் மறைத்துவைத்த காதல் ஒழுக்கத்தில் கையோடே பிடிப்பட்டேன், பார்! நம்முடைய
ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு
முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே!
என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே! என் செவிலித்தாய்
என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட
என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக,
என் தாயின் முன் விழுந்தது அந்தப் பூ;
அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,
நெருப்பைக் கையால் தொட்டவர் போல பதைபதைத்துப்போய்
வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள், நானும் என்
மயிர்ச்சந்தனம் பூசி உலர்த்திய கூந்தலை முடித்துக்கொண்டு, நிலம் வரை தாழ்ந்து கிடந்த
பூ வேலைப்பாடுடைய கரையினையுடைய நீல ஆடையைக் கையில் தூக்கிக்கொண்டு தளர்வாக நடந்து
பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன்", "அதற்கு, தோழியே!
இங்கே எதற்காகப் பயப்படுகிறாய்?
பயப்படவேண்டாம்! அவனுடைய தலைமாலையை நீ சூடிக்கொண்டாயென்றால், நம் வீட்டாரும்
அவனுக்கே உன்னைக் கொடுப்பதற்கு எண்ணியுள்ளனர், அகன்ற இடத்தையுடைய
முற்றத்தில் புது மணலைப் பரப்பி, திரையிட்டு
திருமணமும் இங்கே நடத்துவர், அதுதானே நீயும் நானும்
இரவும் பகலும் எண்ணிக்கொண்டிருந்த காரியம்."
 
மேல்



# 116
"பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது எம்
தாம்புக்கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டவனாய், இங்கு எம்மை
முன்னால் நின்று தடுத்து நிற்பவனே! நீ
என்ன பித்துப்பிடித்தவனா? என்னைப் போகவிடு";
"விடமாட்டேன், தொடுவதற்காகக் கிட்டே செல்வாரை விலக்கி உக்கிரமாக எதிர்த்து நிற்கும்
மிகுந்த வலிமை கொண்ட இளம் பசுவினைப் போல என்னப் பார்த்து, தொழுவின் வாசலிலிருந்து
நீங்கிச் சென்று என்னைச் சீறுகின்றாயே!"
"நீ விலகிச் செல், கன்றினைப் பிடித்தவரிடம் கோபமுள்ள, கன்றினை ஈன்ற பசு பாய்வதைப் போல
கடுமையான மனம் படைத்த என் தாய் வருவாள், உன்னைக் காத்துக்கொள்";
"உன் தாய் வந்துவிட்டுப்போகட்டும், அவள் மட்டுமென்ன, வேறு எவரும் வந்துவிட்டுப்போகட்டும், உன்னுடைய
அரசனே வந்தாலும் இங்கே வரட்டும், நான் கலங்கமாட்டேன்,
நீ என்மேல் இரக்கம் காட்டுவாயானால்";
"உன்னை நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேனென்கிறாய், என்னையே நினைத்துக்கொண்டு,
கொட்டும் மழையில் தலைசாய்த்துச் செல்லும் காளையைப் போல், நான் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும்
எதிர்ச்சொல் கூறிக்கொண்டே என்னை மயக்கிவிட்டாய்,
கறவைச் செம்புடன் நான் செல்கின்ற இடத்தை நாடி, மாடுமேய்க்கும் இடத்திற்கும்
நீ வருவாயாக, நாணமில்லாதவனே!"
 
மேல்



# 117
"நன்றாக உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்துப்
பார்த்துத் துடைத்துவிட்டதைப் போன்ற கரிய நிறமுடையவளே! கோங்கின்
முதிராத இளம் மொட்டினைப் போன்று எதிர்ந்துநிற்கும்
தொய்யில் கோலம் வரைந்த அழகிய முலைகளைக் கொண்டவளே! உன்
கையில் இருப்பது என்ன என்று கூறு";
"கையில் இருப்பதுவா? இடையர்சேரியின் பெரியவர் மகள் நான், மேலும் இது ஒரு
அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை"; "கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
காட்சிக்கு இனியவளே! என்னிடம் காட்டிப்பார்";
"இப்போது பார், பூவிதழ்கள் நிறைந்த கூந்தலையுடைய என் தோழிமாருடன்
காட்டுப்பக்கம் கொய்த சிறுமுல்லை";  இவையோ
முல்லைப் பூக்கள்,, முடித்த கூந்தலையுடையவளே!
இரவாகிவிட்டது பொழுதும், இவ்விடத்தில் தனிமையில் உன்னைக் கண்டேன்,
போ என்று உன்னை நான் போகவிடுவேன், ஆனால் என்னுடைய
மென்மையான அறிவு அப்படி நினைக்கவில்லை.

மேல்