பிற கட்டுரைகள் - 24. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)    23.என்னே தமிழின் இளமை - கட்டுரைத் தொகுப்பு

   1. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 1
   2. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 2
   3. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 3

   4. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 4
   5. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 5
   6. சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - 6

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
 1 - நிறை பறை, மென் பறை


பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்தில் வந்து குவியும் பல்வேறு பறவைகளைப் பார்த்து இரசிக்க பார்வையாளர் 
கூட்டம் வந்து நிறைகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதர்கள் இயற்கையை இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் 
என்ற செய்தி நல்லதுதானே! இயற்கையை இரசிக்கும்போது மனிதனின் மனம் இலேசாகிறது. எனவே அவனது 
சிந்தனைகள் தெளிவடைகின்றன. உலகமே இனிமையாக மாறுகிறது. இன்றைய பரபரப்பு உலகத்தில் இயற்கையை 
இரசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. கிடைக்கிற சிறிதளவு நேரத்தில் இயற்கையை மனிதர்கள் எப்படியெல்லாம் 
இரசித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதுவும் நேரடி இரசிப்புக்கு ஒரு நல்ல மாற்றுத்தான். சரணாலயம் 
சென்றுவந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். ‘அடடா, என்ன அழகு, வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது' என்று 
சொல்லிவிட்டுப் போவார்கள். இதையே சங்கப் புலவர்களைக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் வருணிக்கும் திறத்தைக் 
கேட்டு அப்படியே சொக்கிப்போவீர்கள். இதோ அவர்கள் வரைந்து காட்டும் சொல்லோவியங்கள்!

1. நிரை பறை

வானத்தில் பறவைக்கூட்டம் பறந்து செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பட்டனத்துவாசிகளுக்கு அது எட்டாக்கனி. 
ஊர்ப்புறங்களில் வாழ்பவர்கள் அக் காட்சியைப் பலமுறை பார்த்திருப்பார்கள். கூட்டமாகச் செல்லும் பறவைகள் 
பெரும்பாலும் ஓர் ஒழுங்கு வரிசையில்தான் செல்லும். குடியரசுநாள் விழாவன்று தொலைக்காட்சியில் விமான 
அணிவகுப்பைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு அந்த விமானிகள் பலமுறை பயிற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் பயிற்சிகள் 
இன்றி, வெறும் உள்ளுணர்வு மட்டும் கொண்டு பறவைகளும் அதுபோல அணிவகுத்துச்செல்லும் காட்சி 
வியப்பிற்குரியது. சங்கப் புலவர் ஒருவர் அப்படி ஒரு காட்சியைப் பார்த்து வியந்து கூறுவதைக் கேளுங்கள்.

நெடுவேள் மார்பின் ஆரம் போல
செவ் வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப – அகம் 120 : 1 - 3

நக்கீரனார் எழுதிய அகநானூற்றுப் பாடல் இது. 

‘முருக்கடவுள் மார்பினிடத்து முத்தாரம் போல, 
செவ்வானத்திடம் பொருந்தி, மீனை அருந்தும் 
பசிய காலையுடைய கொக்கினது இனம் வரிசையாகப் பறத்தல் உயர்ந்திட' 

என்பது இதன் பொருள். நிரை என்பது பொதுவாகக் ‘கூட்டம்' என்ற பொருளில் வந்தாலும், அதற்கு ஒழுங்குமுறை 
அமைப்பு என்ற பொருளே சரியானதாகும். பறை என்பது பறவை, சிறகு, பறத்தல் என்ற பொருள்தரும். இங்கு அது 
பறத்தல் என்ற பொருள் தருகிறது. 

மாலை நேரத்தில் சிலவேளைகளில் அந்திவானம் செக்கச் செவேர் என்று சிவந்து காட்சி அளிக்கும். செக்கர் வானம் 
என்று அதை அழைப்பர். ஏதோ ஓரிடத்தில் மீன் அருந்திய ஒரு பறவைக்கூட்டம் நெடுந்தொலைவில் இருக்கும் தனது 
இருப்பிடத்தை நோக்கித் திரும்பிச் செல்கிறது. அவ்வாறு செல்லும் பறவைகள் பெரும்பாலும் U அல்லது V வடிவத்தில் 
அணிவகுத்துச் செல்லும். அது முருகனின் மார்பில் தவழும் முத்து மாலை போல் இருக்கிறதாம் புலவருக்கு! பறப்பது 
வெள்ளைக் கொக்கு அல்லவா! அந்த வெண்கொக்குகளின் நிரை பறை முத்துமாலை போல் தோன்றுவது என்ன 
நயமான கற்பனை. வடிவத்திலும் நிறத்திலும் ஒத்து வரும் அற்புதமான கற்பனை அல்லவா! வெறும் மாலை 
என்னாமல் முத்துமாலை என்கிறார். வெறும் முத்துமாலை என்னாமல் முருகனது கழுத்தில் இருக்கும் மாலை 
என்கிறார் புலவர். செக்கர் வானத்துக்கு, பவளத்தன்ன மேனியான் ஆன சேவற் கொடியோனின் செக்கச் சிவந்த மேனி 
என்ன பொருத்தமான உவமை.

		

மேலேயுள்ள படங்கள் புலவர் கூற்றைப் படம்பிடித்துக் காட்டுவது போல் இல்லையா? அல்லது, புலவர் கூற்று 
இக்காட்சியை அப்படியே சொற்களால் ஓவியம் போலக் காட்டுவது போல் இருக்கிறதா? இதைத்தான் சொல்லோவியம் 
என்கிறோம். சங்கப் பாடல்களில் இப்படிப்பட்ட சொல்லோவியங்கள் நிறையப் புதைந்து கிடக்கின்றன.

உயரே வானத்தில் பறக்கும் நிரை பறைப் பறவைகளின் அழகிய காட்சியைப் பார்த்தோம். இப்போது நீர்மட்டத்தில் 
பறக்கும் மற்றொரு நிரை பறைப் பறவைகளின் காட்சியைப் பார்ப்போம். இது ஒரு அகநானூற்றுப்பாடல். 

கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி
புல் உளை கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்
வல் விரைந்து ஊர்மதி - அகம் 234 : 1-9

மிக வேகமாகச் செல்லும் ஒரு தேர் - அதனை விரைவாக இழுத்துச் செல்லும் குதிரைகள் - ஓடும் குதிரைகளின் 
ஒழுங்கமைப்பு, புலவருக்குப் பறக்கும் அன்னங்களின் நிரை அமைப்பை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தேரில் 
பூட்டிய குதிரைகள் ஒன்றுக்கொன்று ஒழுங்கான இடம்விட்டு, ஒன்றையொன்று உரசாமல், ஒன்றின் வேகத்துக்கு 
மற்றொன்று ஈடுகொடுத்து, காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும். ஆனால் அக் குதிரைகள் ஒரு வலவனின் 
கட்டுப்பாட்டில் இயங்குவன; வார்களின் சேர்ப்புப் பிடியில் இணைக்கப்பட்டிருப்பன. நீண்ட பயிற்சியைப் பெற்றிருப்பன. 
அவை ஓர் ஒழுங்கான அமைப்பில் ஓடுவது வியப்புக்குரியதல்லவே! இவை ஒன்றுமே இல்லாமல் அதே ஒழுங்குடன் 
பறக்கும் பறவைகளின் நிரை பறையுடன் குதிரைகளின் ஓட்டத்தை ஒப்பிடலாமா? ஒன்றனுக்குரிய உவமையைக் 
கூறும்போது அதனைக்காட்டிலும் உயர்ந்த ஒன்றனுடன்தான் ஒப்பிடுவது வழக்கம். அந்த அளவில், விரை பரிக் 
கலிமாக்களைக் காட்டிலும் நிரை பறை அன்னங்கள் மேலானவை என்று புலவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்! 
கீழே உள்ள படங்களைப் பாருங்கள். புலவரின் உவமை எந்த அளவுக்குச் சிறப்பான ஒப்புமை என்பதை உணர்வீர்கள்.

		

இதே உவமையைக் கொண்டு, இதே காட்சியைக் காட்டும் இன்னொரு அகப்பாடல் இது.

வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி
கொடுஞ்சி நெடுந்தேர் கடும்பரி  ---------  - அகம் 334:10-12


2. மென்பறை

ஒரு கொக்குக் கூட்டம் ஓர் ஆற்றில் மேய்ந்துகொண்டிருக்கின்றது. ஆடுகள் புல் மேய்வதைப் போல, கொக்குகள் மீனை
மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆடுகள் எப்படிப் புல் மேயும்? ஒரே இடத்தில் நின்றுகொண்டா? இல்லையே! 
அங்குமிங்கும் பரபரப்பாகத் திரிந்துகொண்டு, ஓரிடத்தில் புல் தீர்ந்துபோனால் அருகிலுள்ள வேறு புல்லுள்ள 
இடங்களை நோக்கி, விரைந்து ஓடாமல், ஒரு நடையோட்டம் போட்டு அலைந்துகொண்டே இருக்கும் அல்லவா? 
அதைப்போலத்தான் கொக்குகளும் சிறிது தொலைவுகளுக்கு அங்குமிங்கும் மென் பறப்புப் பறந்துகொண்டு இருக்கும் 
அல்லவா! அதுதான் மென்பறை.

உடற்பயிற்சிக்காக, இளைஞர்கள் ஓடுவார்கள். வயதானவர்கள், வயதைப் பொருத்து மெதுவாகவோ அல்லது 
வேகமாகவோ நடப்பார்கள். நடுவயதுள்ளோர், நடையுமில்லாமல், ஓட்டமுமில்லாமல், ‘லொங்கு, லொங்கு’ 
என்று ஒரு ஓட்டம் ஓடுவார்களே – அது jogging – மெல்லோட்டம் எனப்படுகிறது. என்ன அருமையான 
சொல்லாக்கம் எனத் தோன்றியது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் சங்கப் புலவர்கள் இந்தச் சொல்லைப் 
பறவைகளுக்காக ஆக்கியிருக்கிறார்கள் – மென்பறை. இந்த நெடுநல்வாடைக் காட்சியைப் பாருங்கள்:

	பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி
	இருங்கழி பரந்த ஈர வெண்மணல்
	செவ்வரி நாரையோடு எவ்வாயும் கவர – நெடு: 15-17

பசியகாலையுடைய கொக்கினது மெல்லிய சிறகரையுடைய திரள்
கரிய வண்டலிட்ட சேறுபரந்த ஈரத்தினையுடைய வெள்ளிய மணலாகிய,
சிவந்த வரியினையுடைய நாரைகளோடே, எவ்விடங்களிலுமிருந்து அக்கயலைத் தின்ன

என்று இதற்கு உரை காணுகிறார் நச்சினார்க்கினியர். 

அவர் மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகு எனப் பொருள்கொள்கிறார். பறை என்பதற்கு சிறகு என்ற பொருளும் 
உண்டு. இருப்பினும், மென்பறைக்கு மெதுவான பறத்தல் என்ற பொருள் இதற்கு மேலும் சிறப்பான பொருளைத் 
தருகிறது எனலாம். எப்படி? அதைத்தான் இப் பகுதியின் முன்னுரையில் கூறியிருக்கிறேன். இந்த அடிகளை மீண்டும் 
படித்துப்பாருங்கள். பசிய கால்களைக் கொண்ட கொக்கு – கரிய வண்டல் உள்ள கழி – வெண்மையான மணல் – 
சிவந்த வரிகளையுடைய நாரைகள் – இவ்வாறாக, பசுமை, கருப்பு, வெள்ளை, சிவப்பு என ஒரு வண்ணக் கலவை 
கொண்ட ஒரு சொல்லோவியமாகப் புலவர் இதனைத் தீட்டியிருக்கும் அழகைப் பாருங்கள்! சும்மா, கொக்குகளும் 
நாரைகளும் இரை மேய்ந்துகொண்டிருந்தன என்று கூறிவிட்டுச் செல்லாமல், ஒரு வண்ணப்படத்தையே நம் கண்முன்
காட்டுகிறார் புலவர். இங்கு மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகு எனப் பொருள் கொள்ளாமல், ‘மெதுவாக 
அங்குமிங்கும் பறந்துகொண்டு’ என்ற பொருளையும் கொடுத்தால், இக்காட்சி வெறும் ஓவியமாக மட்டும் இல்லாமல், 
உயிரோட்டமுள்ள ஒரு குறும்படமாகவும் ஆகவில்லையா? இதற்கு வேறு ஏதேனும் சாட்சிகள் உண்டா என்று 
தேடியபொழுது, 

கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர – அகம் 40:1-4 

என்ற அகநானூற்று அடிகள் கிடைத்தன. இதற்குப் பொருள்கூறும் நாட்டார்,

கடற்கரைச் சோலையை அடுத்த கழியில் வரிசையாகவுள்ள பூக்கள் குவியவும்,
நீல நிறத்தையுடைய பெரிய கடல் ஒலி மிக்கு ஒலிக்கவும், 
மீனை யுண்ணும மெல்லிய சிறகினையுடைய பறவைக் கூட்டம், 
திரட்சி பொருந்திய பெரிய புன்னைமரத்திலுள்ள கூடுகளிற் சேரவும்,

என எழுதுகிறார். மீண்டும் மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகு என்ற பொருளே கிடைத்தது. ஆனால் இங்கும் 
மீன்களை உண்ணும் குருகுகள் என்பதால் மென்பறை என்பதற்கு மென்மையாகப் பறந்துதிரிதல் என்ற பொருள் 
சிறப்பானதாகப் பட்டது. தொடர்ந்து தேடியதில், 

அஞ்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
முல்லை நறுமலர்த் தாதுநயந் தூத – அகம்: 243-12

என்ற அடிகளுக்கு அதே நாட்டார் உரை எழுதுகையில்,

அழகிய சிறையினையுடைய வண்டின் மெல்லிய பறத்தலையுடைய கூட்டம்
நறிய முல்லை மலரில் உள்ள பூம்பொடியினை விரும்பி ஊத

என்று எழுதுகிறார். இங்கே சிறை என்பது சிறகு. அழகிய சிறகுள்ள வண்டு என்று சொன்னதன் பின்னர், பறை 
என்பதற்கு பறத்தல் என்ற பொருள்கொள்ளவேண்டிய அவசியம் ஆகிறது. ஓர் அழகிய நந்தவனம் – நிறையப் பூக்கள்
 – ஒரு வண்டுக்கூட்டம் அதனுள் நுழைகிறது. ஒரே பூவில் ஒரு வண்டுக்குத் தேவையான தேன் கிடைத்துவிடுமா? 
எனவே, பூக்களை மாற்றி மாற்றிப் பறந்துகொண்டு தேனெடுக்கும் அந்த வண்டுகளின் பறப்பு எப்படி இருக்கும்? 
அதுதான் மென்பறை. அதுபோலைத் தானே இடங்களை மாற்றி மாற்றிப் பறந்து கொண்டு இரை மேயும் கொக்குகள் 
பறப்பதுவும் மென்பறைதானே. இதைத் தன் மனக்கண்ணால் கண்டு ரசித்த நக்கீரர் நெடுநல்வாடையில் 
கூறியிருப்பதுவும் இந்தப் பொருளில்தான் என்பது உறுதியாகிறது. ஒரு புகைப்படக்காரர், ஒரு காட்சியைத் தான் 
பார்க்கும்போது தனக்கு ஏற்படும் உணர்வுகளைத் தன் புகைப்படத்தில் கொண்டுவந்து, பின்னர் அதைப் பார்ப்பவரும் 
அதே உணர்ச்சிகளைப் பெறும் வண்ணம் அந்தப் புகைப்படம் அமைந்தால், அதுவே மிகச் சிறந்த புகைப்படம் என்று
‘what is a good photograph?’ என்பதற்கான வரையறை கூறுகிறது. இதையெல்லாம் நாம் அறிந்துகொள்வதற்கு 
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் புலவர்கள் தூரிகை இல்லாமல் – Camera இல்லாமல் – சொல்லாலேயே 
ஒளிப்படங்கள் மட்டும் என்ன, ஓடும்படங்களையும் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மென்பறை என்பது 
என்னவென்று நீங்களும் பாருங்கள்.