பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்
   2.இருகோல் குறிநிலை
   3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்
   4.மதுரைக்காஞ்சியில் வைகை
   5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து


   6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை
   7.சிறு புன் மாலை
   8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்
 
பத்துப்பாட்டு - சிறப்புக்காட்சிகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              இந்திர கோபம்

	இந்திரகோபம் என்பது ஒரு மிகச் சிறிய பூச்சி. சிவப்பு நிறம் உடையது. இதனைத் தம்பலப்பூச்சி என்றும் கூறுவர். 
இதனைக் கோபம் அல்லது கோவம் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) 
இதனை cochineal என்று மொழிபெயர்க்கிறது. 
பத்துப்பாட்டில், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய பாடல்கள் இப் பூச்சியைப் பற்றிப் பேசுகின்றன. 

கோபத் தன்ன தோயாப் பூந்துகில் - திரு 15

	இந்திர கோபத்தையொத்த நிறம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகிலினையும் என்பது இதற்கு 
நச்சினார்க்கினியர் கூறியிருக்கும் உரை. எனவே, இந்த அடியில் கூறப்படாவிட்டாலும், இந்திரகோபம் என்பது ஒரு சிவப்பான பூச்சி 
என்பது தெரிகிறது. துகில் என்பது பொதுவாகப் பட்டாடையைக் குறிக்கும். பொதுவாகச் செம்பட்டுக்குச் சிவப்பு நிறச்சாயம் தோய்க்கப்படும். 
இங்கு புலவர் குறிப்பிடுவது தேவர்கள் உடுத்தியிருக்கும் சிவந்த ஆடை என்பதால், அது இயல்பாகவே சிவப்பு நிறத்தைப் பெற்றது 
என்பதைக் குறிக்கவே தோயாப் பூந்துகில் என்று கூறப்படுகிறது.
	இந்த அடிக்கு உரை எழுதியிருக்கும் பெருமழைப்புலவர் தன் அகலவுரையில் இந்திரகோபம் என்பதனை விரிவாக விளக்குகிறார். 
அந்த உரையில், ‘கோபம்-இந்திர கோபப்புழு. இது துகிலின் நிறத்திற்குவமை. இந்திரகோபம் சிவப்புநிறமுடையது ஆதல் காண்க.' 
என்று கூறுகிறார். எனவே, அவர் இதனை ஒரு புழு எனக் கொள்கிறார் என அறிகிறோம்.
	அடுத்து, சிறுபாணாற்றுப்படையில் கடம்பமரப் பூந்தாதைக் ‘கோவத்தன்ன' என்று கூறுகிறார் அதன் ஆசிரியர்.

	துறுநீர்க் கடம்பின் துணையார் கோதை
	---------- ---------- -------------- -----------
	கோவத் தன்ன கொங்குசேர்(பு) உறைத்தலின் - சிறு 69-71



	செறிந்த நீர்மையை உடைய கடம்ப மரத்தின் மாலை போன்ற பூக்கள் --- இந்திரகோபத்தை ஒத்த தாதை உதிர்த்தலாலே 
என்று நச். உரை எழுதுகிறார். இங்கு கடம்ப மரம் எனப்படுவது செங்கடம்பு (Barringtonia acutangula) என்பர். 
அதன் பூ சிவப்பாக இருப்பதைக் காணலாம். இந்தப் பூக்களின் தாதுவும் சிவப்பாகத்தானே இருக்கும். 

	மூன்றாவதாக, சிறுபாணாற்றுப்படையிலேயே இந்திரகோபம் மீண்டும் பேசப்படுகிறது.

	கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் - சிறு 168

	கொல்லையிடத்து நெடிய வழிகளிலே இந்திரகோபம் ஊராநிற்கவும் என்பது நச். உரை. 
இங்கும், கோபம் என்பதனை இந்திரகோபப்புழு என்றே பெருமழைப்புலவர் குறிப்பிடுகிறார்.

	கோபம் என்பது எட்டுத்தொகை நூல்கள் எதனிலும் காணப்படவில்லை. 
ஆனால் கோவம் என்பது அகநானூற்றில் ஒரு பாடலில் வந்துள்ளது.

	ஓவத் தன்ன கோவச் செந்நிலம் - அகம் 54/4

	பல பதிப்புகளில் இது ‘கோபச் செந்நிலம்' என்றே குறிப்பிடப்படுகிறது. 
ஓவியம் போன்ற இந்திரகோபப் பூச்சிகளைக் கொண்ட செந்நிலத்தில் என்று இதற்குப் பொருள் கூறப்படுகிறது.

	அடுத்து, இந்திரகோபம் என்பது வடமொழி நூல்களிலும் ஒரு மிகச் சிறிய உயிரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 
	கீழ்க்கண்ட மேற்கோள்கள் அதனைக் கூறும்.

	Śrī Caitanya Caritāmrņta  Madhya 15.170

	"'Let me offer my respectful obeisances unto the original Personality of Godhead, Govinda, 
who regulates the sufferings and enjoyments due to fruitive activity. He does this for everyone - from the heavenly King Indra 
down to the smallest insect [indra -gopa]. 
	That very Personality of Godhead destroys the karmic reactions of one engaged in devotional service.' 
	 -- Srimad-Bhagavatam SB Canto 10.1 to 10.13

	Everyone, beginning from the small insect known as indra-gopa up to Indra, the King of the heavenly planets, 
is obliged to undergo the results of his fruitive activities. 

	எனவே, இந்திரகோபம் என்பது மிகச் சிறிய ஓர் உயிரினம் என்று தெரிகிறது.

	கோபம் என்பதற்கு தமிழ்ப் பேரகராதி தம்பலப்பூச்சி என்ற பொருள் தருகிறது என்று கண்டோம். 
	அதற்குரிய ஆங்கிலப் பொருளாக cochineal, coccus cacti என்ற சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

	கோபம் 2 kopam, n. indra-gopa.
	1. Cochineal Coccus cacti; தம்பலப்பூச்சி. 
	கொல்லை நெடுவழிக் கோப மூரவும் (சிறுபாண். 168). 

	2. A kind of cloth; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)
	கோவம் என்ற சொல்லுக்கும் அதே பொருள்தான் அங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
	
	கோவம் 2 kōvam, n. indra-gōpa. 
	Cochineal. See தம்பலப்பூச்சி. 

	கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் (சிறுபாண். 71).

	இதே பேரகராதியில் தம்பலப்பூச்சி என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இரு பொருள்களில் ஒன்று இந்திரகோபம் ஆகும். 

	தம்பலப்பூச்சி tampala-p-pūcci, n. <தம்பலம்+. 

	1. Scarlet moth, Mutilla occidentalis ; பூச்சிவகை. 

	2. Cochineal, Coccus cacti; இந்திர கோபம்.

	முதலில் கொடுக்கப்பட்டுள்ள பூச்சிவகை (scarlet moth) ஒரு பறக்கும் வகைப் பட்டாம்பூச்சி ஆகும். 
அடுத்துள்ள இலத்தீன் பெயருக்குள்ளது (Mutilla occidentalis) ஒருவகை வண்டினம் ஆகும். இதன் பெண்ணினம் பறக்கக்கூடியது; 
மேலும் இது மிகவும் வலிக்கக்கூடிய வகையில் கொட்டக்கூடியது. எனவே பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊருகின்ற தம்பலப்பூச்சி 
என்னும் இந்திரகோபம் இதுவாக இருக்கமுடியாது.

	எனவே, தம்பலப்பூச்சி எனப்படும் இந்திரகோபம் என்பதற்குரிய ஆங்கிலச்சொல் cochineal எனப்படும் coccus cacti என்றாகிறது. 
இது ஒருவகைப் புழு ஆகும். வறண்ட நிலங்களில் வளரும் கள்ளி வகைகளில் பிறந்து வளரும் ஒருவகை ஒட்டுண்ணி ஆகும் (parasite). 
குறிப்பாகச் சப்பாத்துக்கள்ளிகளில் இருக்கும் இது சுமார் 5 மி.மீ அளவே உள்ள மிகச் சிறிய புழுவகை ஆகும். ஆனால் மிகுந்த 
சிவப்பு நிறமுடையது. இவற்றைச் சேகரித்துக் காயப்போட்டு, பொடித்து, துணிகளுக்குச் சிவப்புச் சாயம் ஏற்றுவதற்குப் பயன்படுத்துவர்.



	இந்தச் சப்பாத்துக்கள்ளிப் பூச்சிகளினின்றும் சாயப்பொடி தயாரிக்கும் முறை தென் அமெரிக்க நாட்டு மக்களுக்குத் தெரிந்திருந்தது; 
கி.பி. 16-ஆம் நூற்றாண்டுவாக்கில் அங்கு சென்ற ஸ்பெயின் நாட்டவர் அம்முறையைத் தெரிந்துகொண்டு, 
அந்தப் பூச்சிகளை மறைவாகத் தமது நாட்டுக்குக் கொண்டுவந்தனர்; அதன் பின்னரே அம்முறை மேலைநாடுகளுக்கும், 
அவர்கள் மூலமாகக் கிழக்காசிய நாட்டினருக்கும் தெரியவந்தது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 
எனவே, சங்கத் தமிழருக்கு இம்முறை தெரிந்திருந்ததாகக் கூறமுடியவில்லை. ஆனால் அதற்குப் பன்னெடுங்-காலத்துக்கு முன்னரேயே 
பெரும்புகழ் பெற்றிருந்த சீனத்துச் சிவப்புப் பட்டுக்குச் செடிகொடிகளின் வேர், பூ (madder root and safflower) ஆகியவற்றினின்றும் 
பெறப்பட்ட இயற்கை வண்ணமே ஏற்றப்பட்டது.

	சங்க காலத்தில் தமிழகத்திலும் துணிக்குச் சாயம் தோய்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது எனத் திருமுருகாற்றுப்படை மூலம் 
அறிகிறோம். இவ்வாறு சிவப்புச் சாயம் ஏற்றப்பட்ட துணியை அவர்கள் கோவம் என்றே அழைத்திருக்கிறார்கள் என்று 
சிலப்பதிகார உரை கூறுகிறது. கோபம் என்பதற்குரிய இரண்டாவது பேரகராதிப் பொருள் இதை ஒரு வகைத் துகில் என்று கூறுகிறது. 
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தில்,

	அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் - ஊர்காண்காதை - 108 

	என்ற அடிக்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார், துகில் என்பதற்கு விளக்கமாக 
கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம் என முப்பது வகைத் துணிகளைப் பற்றிக் கூறுகிறார். 
இவற்றில் பன்னிரண்டாவதாகக் கோபம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே, கோபம் என்பது ஒருவகைத் துணியைக் குறிக்கும் 
என்று உணரலாம். 
	மேலும், இலக்கிய வழக்குப்படி, இத் துகில் சிவப்பு நிறத்ததாய் இருந்திருக்கும் என்றும் யூகிக்கலாம். 

	கோபத்தன்ன தோயாப் பூந்துகில் 

	என்ற திருமுகாற்றுப்படை அடிக்கே, ‘(சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட) கோபம் என்ற துகிலைப் போன்ற சிவந்த பூந்துகில், 
ஆனால், (தேவர்களின் ஆடையாதலால், இயற்கையாகவே சிவப்பு நிறம் அமைந்ததால்) சாயம் தோய்க்கப்படாத பூந்துகில்' 
என்று பொருள் கொள்ளலாம். 
	எனினும், சங்க இலக்கியங்கள் கூறும் கோபம் என்பது சப்பாத்துக்கள்ளிப் பூச்சியாக (cochineal) இருக்கமுடியாது எனக் கண்டோம். 
	ஆனால், மரங்களில் வசிக்கும் ஒரு வகைப் பூச்சிகளிலிருந்து சிவப்புநிறச் சாயம் தயாரிக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்தது 
என மேநாட்டு வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். கி.மு நான்காம் நூற்றாண்டில் பெர்சிய மன்னரின் அரசவையில் இருந்த 
கிரேக்க வரலாற்றாசிரியரான டேசியஸ் (Ctesias) என்பார் இந்தியர்கள் மரத்தில் வசிக்கும் ஒரு சிறிய பூச்சியைப் பிடித்து நசுக்கி, 
அதிலிருந்து மிகவும் சிவப்பான ஒருவகைச் சாயத்தைப் பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

	("Among the Indians are found certain insects about the size of beetles and of a color so red that at first sight 
one might mistake them for cinnabar. Their legs are of extraordinary length and soft to the touch. They grow upon trees 
which produce amber, and subsist upon their fruit. The Indians collect them for the sake of the purple dye, 
which they yield when crushed. This dye is used for tinting with purple not only their outer and under-garments, 
but also any other substance where a purple hue is required. Robes tinted with this purple are sent to the Persian King, 
for Indian purple is thought by the Persians be marvelously beautiful and far superior to their own." 
	- Ancient India as described by Ktesias the Knidian – John Watson McCrindle
	- Trubner, 1882 - Oxford University - Digitized, 14 Jun 2007)

	Ancient India as described by Ktesias the Knidian - John Watson McCrindle   

	எனவே, சிவப்புநிறப் பூச்சிகளிலிருந்து சாயம் தயாரிக்கும் முறை இந்தியருக்குத் தெரிந்திருக்கிறது. 
அது தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் பூச்சிகள் மரங்களில் வசிக்கும் என்றும் நீண்ட கால்களை உடையன 
என்றும் தொடுவதற்கு மென்மையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை விளைவிக்கிறது. 
இந்தவிடத்தில் சிறுபாணாற்றுப்படையின் மற்றோர் அடியை நினைவுகூருங்கள். 

	கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் - சிறு 168

	இந்திரகோபம் என்னப்படும் சப்பாத்துக்கள்ளிப் புழுக்கள் தரையில் ஊர்ந்து திரிவன அல்ல. 
மேலும் அவை கடுமையான பாலைநிலத்தில் வளரும் கள்ளிச்செடிகளில்தான் காணப்படும் 
- (பாடலின் முந்தைய அடிகளின்படி) அவரையும், காயாவும், முசுண்டையும், காந்தளும் பூத்துக் குலுங்கும் முல்லைநிலக் கொல்லைகளில் அல்ல. 
	எனவே, இங்கே கோபம் எனப்படுவது (cochineal - coccus cacti) எனப்படும் சப்பாத்துக்கள்ளிப் புழு அல்ல என்பது பெறப்படும். 

	அப்படியென்றால் இந்தக் கோபம் என்பது என்ன?

	எட்டுத்தொகை நூல்கள் சிலவற்றில் மூதாய் அல்லது ஈயன்மூதாய் என்று அழைக்கப்படும் ஒருவகைப் பூச்சியைப் பற்றிய 
செய்திகள் காணப்படுகின்றன. இதற்குப் பொருள்காணும் வகையில் பேரகராதியைப் பார்த்தால் வியப்பு காத்திருக்கிறது.

	மூதாய் 2 mūtāy n. <ஈயன்மூதாய். 
	Cochineal insect.. See இந்திரகோபம். (திவா.)

	மூதா 2 mūtā n. cf. மூதாய்2. See இந்திர கோபம். (சூடா.)
	ஈயன்மூதாய் īyaṉ-mūtāy n. 
	1. கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் - நற் 362/5
	2. பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் - கலி 85/10
	3. ஈயல் மூதாய் வரிப்ப பவளமொடு - அகம் 14/3
	4. குருதி உருவின் ஒண் செம் மூதாய் - அகம் 74/4
	5. செம் புற மூதாய் பரத்தலின் நன் பல - அகம் 134/4
	6. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் - அகம் 139/13
	7. வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப - அகம் 283/15
	8. ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப - அகம் 304/15
	9. குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி - அகம் 374/12

	இது செம் மூதாய்(1), குருதி உருவின் ஒண்செம் மூதாய்(4), செம்புற மூதாய்(5), அரக்குநிற உருவின் மூதாய்(6) 
என்று கூறப்பட்டுள்ளதாலும், இது பவளத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளதாலும்(3), இப்பூச்சி சிவப்பு நிறத்தது என்பது தெளிவாகின்றது.  
இதன் பண்புகளைப் பற்றி அறிய, இந்த அடிகளுக்கு அடுத்த, முந்தைய அடிகளையும், அவற்றின் உரைகளையும் பார்க்கலாம்.

1. கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் - நற் 362/5

	வினையமை பாவையின் இயலி நுந்தை
	மனைவரை இறந்து வந்தனை யாயின்
	தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
	அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
	கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
	நீவிளை யாடுக சிறிதே -------   நற்றிணை 362:1-6

	வேலைப்பாடு நன்கு அமைந்த பாவை போல இயங்கி, நின் தந்தையின்
	மனையெல்லையைக் கடந்து (என்னுடன்) வந்திருக்கிறாய், அதனால்
	முதல் மழையைப் பெய்யத் தொடங்கிய குளிர்ந்த மழையையுடைய மேகம்
	அழகு மிக்க காட்டில் அகன்ற இடமெல்லாம் பரந்த
	விரைந்து ஓடும் சிவந்த ஈயலின் மூதாயைப் பார்த்தும் பிடித்தும்
	நீ விளையாடுக சிறிது பொழுதே -- 

	என்பது இதன் பொருள்.

	தலைவனோடு உடன்போகும் தலைவிக்கு, இடைச்சுரத்தின்கண்ணே தலைவன் கூறிய கூற்று இது. 
விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும், அவற்றைப் பிடித்தும் சிறிதுபொழுது நீ விளையாடுவாயாக 
என்று உரை கூறும் பின்னத்தூரார், பின்னர், செம்மூதாய் - தம்பலப்பூச்சியுமாம் என்கிறார். 
	எனவே இவர் ஈயலின் மூதாய் என்று எதனைக் குறிக்கிறார் என்று தெரியவில்லை. ஈயல் என்பது இன்றைக்கு ஈசல் எனப்படுகிறது. 
இங்கு நாம் உற்றுநோக்கவேண்டியது, தலைவனும் தலைவியும் நடந்துசெல்லும் பாலை வழியில், முதல்மழை பெய்கிறது. 
உடனே, இந்த ஈயன்மூதாய் அணிமிகு கானத்து அகன்ற மேற்பரப்பில் பரவி, அங்குமிங்கும் விரைவாகச் செல்கின்றன என்று பார்க்கிறோம். 
நாம் அறிந்த சாதாரண ஈசல் என்றால் அது புற்றுக்குள்ளிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு பறந்து, பின்னர் தரையில் பரவி, வேகமாக 
அங்குமிங்கும் செல்லும்; ஆனால் அது சிவப்பாக இருக்காதே! எனவே இது ஈசல் வகையைச் சேர்ந்த வேறொரு பூச்சியாக இருக்கவேண்டும்.
	இது தம்பலப்பூச்சியாக இருப்பின், நிச்சயம் cochineal- ஆக இருக்கமுடியாது - காரணம் இந்தப் பூச்சி/புழு மழை பெய்தவுடன் 
தரையில் பறப்பன அல்ல - வேகமாகச் செல்லக்கூடியனவும் அல்ல. இந்தப் பூச்சியைப் பிடித்து விளையாடலாம் என்று இங்கே காண்கிறோம். 
எனவே இது பிடித்தால் கொட்டக்கூடியது அல்ல என்றும் தெரிகிறோம்.

	இதற்கு உரை எழுதிய ஔவை துரைசாமியார், கடும்செம் மூதாய் என்பதற்கு மிகச் சிவந்த தம்பலப்பூச்சிகள் என்று 
‘கடும்' என்பதனை நிறத்திற்கு ஏற்றிக் கூறுகிறார். 
	‘செம்மூதாய் தம்பலப்பூச்சி; இதனைக் கோபம் என்பதும் வழக்கு; இந்திரகோபம் என்பதுமுண்டு' என்ற கூற்றுக்களால் 
இது இந்திரகோபமே என உறுதி செய்கிறார். ‘இப்பூச்சிகளின் செம்மைநிறமும் மென்மைத்தன்மையும் காண்பார்க்கு இன்பம் நல்கலின், 
இளையர் அவற்றை எடுத்துத் தம்முடைய ஆடைமேல் இட்டு மேயவிடுவர்' என்றும் அவர் கூறுகிறார்.

	2. பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் - கலி 85/10

	பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
	மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண் - கலி 85:10,11
	
	மழை பெய்த புலத்து ஈயன்மூதாயின் புகர்நிறமுள்ள பவளத்தாற் செய்த
	அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்

	இங்கே துகிர் என்பது பவளம். புகர்நிறம் என்பது கருஞ்சிவப்பு நிறம் (tawny colour) அல்லது கபில நிறம் ஆகும். 
பெய்புல மூதாய் என்பதால் மழை பெய்தபின் முல்லைநிலக்காடுகளில் காணப்படும் என்பது பெறப்படுகிறது. 
எனவே, இது முற்கண்ட நற்றிணை அடிகளின் பொருளை மெய்ப்பிக்கிறது எனலாம்.

	3. ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு - அகம் 14/3

	அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
	காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
	ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
	மணிமிடைந் தன்ன குன்றம் ----- - அகநானூறு 14:1-4

	செவ்வரக்கினை யொத்த சிவந்த நிலத்திற் செல்லும் பெருநெறியில்
	காயாவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒருங்கே
	தம்பலப்பூச்சிகள் வரிவரியாக ஊர்ந்து செல்ல (அவை) பவளத்தொடு
	நீலமணி நெருங்கி யிருந்தா லொக்கும் குன்றம்

	என்று வேங்கடசாமிநாட்டார் உரை கூறுகிறது. இங்கே வரி என்ற வினைச்சொல்லுக்கு அழகுசெய் (adorn, decorate) 
அல்லது ஓடு (run, flow) என்ற பொருள் கொள்ளலாம். இங்கும் நாம் ஏற்கனவே கண்ட செய்திகள் உறுதிப்படுகின்றன எனக் காண்கிறோம்.

	4. குருதி உருவின் ஒண் செம் மூதாய் - அகம் 74/4

	தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக்
	குருதி யுருவின் ஒண்செம் மூதாய்
	பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப - அகநானூறு 74:3-5

	குளிர்ந்த மழை பொழிந்ததாற் பசுமையுற்ற காலத்தே,
	குருதியைப் போலும் சிவந்த நிறத்தையுடைய ஒள்ளிய தம்பலப்பூச்சி
	பெரிய வழிகடோறும் பல சிறிய வரிகளாகப் பரக்க

	என்று இதற்கு நாம் முன்னர் கண்ட வகையிலேயே பொருள் அமைந்துள்ளது.

	5. செம்புற மூதாய் பரத்தலின் நன்பல - அகம் 134/4

	வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
	கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
	மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
	செம்புற மூதாய் பரத்தலின் ----------  - அகநானூறு 134:1-4

	மழை தப்பாது பெய்தலால் காடு அழகுபெற்று,
	நிறைந்த சூலுடைய கரிய மேகங்கள் கார் காலத்தினைத் தந்து தங்கிற்றாக,
	நீலமணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
	சிவந்த புறத்தினையுடைய இந்திரகோபப் பூச்சி பரத்தலோடு

	என்ற பொருளும் நாம் அறிந்த செய்திகளை உறுதிசெய்கிறது.

	6. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் - அகம் 139/13

	அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
	பரப்பி யவைபோல் பாஅய்ப் பலவுடன்
	நீர்வார் மருங்கின் ஈரணி திகழ - அகம் 139/13-15

	செவ்வரக்கு அனைய நிறத்தையும் அழகினையுமுடைய தம்பலப்பூச்சிகள்
	பரப்பிவைத்தாற் போலப் பலவும் ஒருங்கே பரந்து
	நீர் ஒழுகிய ஈரமுடைய இடத்தில் அழகுடன் விளங்க

	என்பது இதன் பொருள். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும் என்பது 
இதிலிருந்து பெறப்படுகிறது. கார்காலத்தின் கடைநாள் காட்சியாகப் பாடல் இதைக் கூறுகிறது. 
எனவே, கார்காலத்தில் பிறந்து ஓடியாடித் திரிந்த இவை, கார்கால இறுதியில் அங்கங்கே திட்டுதிட்டாய்ப் படுத்துக்கிடக்கும் என்பது தெரிகிறது.

	7. வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப - அகம் 283/15

	-----------  ----------  ---------  கரிமரம்
	கண்அகை இளம்குழை கால்முதல் கவினி
	விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
	பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்
	புல்நுகும்(பு) எடுத்த நல்நெடுங் கானத்(து)
	ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன
	வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப --- அகநானூறு - 283:9-15

	கரிந்த மரங்கள்
	தம்மிடத்தே கிளைக்கப்பெறும் இளந்தளிர்கள் அடி முதல் கிளைத்து அழகுபெறவும்,
	வானில் ஒருங்கே இருட்சியுற்று, வெம்மை நீங்கவும், 
	பசுமையைத் தன்பால் கொண்ட மேகம் பரந்த துளியினைச் சொரிந்ததாக,
	புற்கள் குருத்தினைவிட்ட நல்ல நீண்ட காட்டில்
	செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிதிர் பரவியது போன்ற
	செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த

	என உரை கூறப்படும் இந்த அழகிய அடிகளில், கார்காலத் தொடக்கம் அழகுற வருணிக்கப்பட்டுள்ளது. 
எனவே, கார்காலத் தொடக்கத்தில் இப்பூச்சிகள் தென்பட ஆரம்பிக்கின்றன என்பது மீண்டும் உறுதிசெய்யப்படுவதோடு, 
அதன் மேனி பிய்த்தெறிந்த பஞ்சுச் சிதறல்கள் போல் இருக்கும் என்பதுவும் தெளிவாகிறது. இவற்றின் இயக்கத்தை விளக்கும் 
வரிப்ப என்ற சொல் இங்கும் காணப்படுகிறது. ஆனால் அதற்கு அழகுறுத்து என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 

	8. ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப - அகம் 304/15

	---------  ------------  ---------  வரிமணல்
	மணிமிடை பவளம் போல அணிமிகக்
	காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
	ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
	புலனணி கொண்ட காரெதிர் காலை - அகநானூறு - 12-16

	வரிப்பட்ட மணலில்
	நீல மணியுடன் கலந்த செம்பவளம் போல அழகு மிக
	காயாவின் வாடல்பூ பலவும் சேரப் பரந்து அவற்றுடன்
	தம்பலப்பூச்சியும் நிலத்தில் ஈரம்பட்ட இடத்தை அழகுசெய்ய,
	காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில்

	என்பது இதன் பொருள். இப்பூச்சியின் முன்னற்கண்ட பண்புகளை இங்கு மீண்டும் காண்கிறோம். 

	9. குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி - அகம் 374/12

	இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
	வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன
	இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
	பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச்
	செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
	குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
	மணிமண்டு பவழம் போலக் காயா
	அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய - அகநானூறு 374:7-14

	இடித்தலும் குமுறுதலும் இன்றி, பாணர்
	வடித்தலுற்ற நல்ல யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற
	இனிய குரலுடன் மிக்க துளியைப் பொருந்தி, நன்றாகிய பல
	மழைகளைப் பெய்து கழிந்த, பூக்கள் மணக்கும் விடியற்காலத்தில்,
	செறிந்த மணல் மேடுபட்டுக் களர்மண்ணும் தோன்றும் நெறியில்
	சிறு வயிற்றினையுடைய தம்பலப்பூசி குறுகுறுவென்று ஓடி
	நீலமணியுடன் கூடிய பவழம் போலக் காயாவின்
	அழகுமிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய -- 

	என்பது இதன் பொருள்.

	மின்னாமல் முழங்காமல் விடிய விடியப் பொழிந்த விடியற்காலையில், செறிந்த மணல் மேடுபட அதன்மேல் 
களர்மண் படிந்திருக்கும் பாதையில், சிறிய வயிற்றினை உடைய தம்பலப்பூச்சி குறுகுறுவென ஓடி, நீலமணியுடன் கூடிய பவழம் போல 
காயாவின் அழகு மிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய என்று கூறும் இப்பகுதி தம்பலப்பூச்சியைப் பற்றி மேலும் 
இரு செய்திகளைக் கூறுகிறது. இப் பூச்சியின் வயிறு குறுகியதாக இருக்கும் (குறு மோடு). அது குறுகுறுவென ஓடி ஒளிந்துகொள்ளும். 
எனவே, ஆளரவம் கேட்டு அதற்கேற்ப இயங்கக் கூடியது அது. 

எனவே, இதுவரை கண்டவற்றால் இப் பூச்சியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது:-

	1. கார்காலத் தொடக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. இது காணப்படுவதைக் கார்காலத் தொடக்கத்தின் 
அறிகுறியாக மக்கள் கொண்டனர்.

	2. கார்கால முடிவில் இவை பலுகிப் பெருகி அங்கங்கே பரவலாக படர்ந்திருக்கும்.

	3. ஒரு நாளின் தொடக்கமான வைகறைப் பொழுதில் இது தன் அன்றைய வாழ்க்கையைத்  தொடங்குகிறது.

	4. ஈரமான பகுதிகளில் விரும்பி உறையக்கூடியது.

	5. தாம் தங்கியிருக்கும் இடத்தை அழகுசெய்வது.

	6. பவளம் போல் சிவப்பு நிறத்தது.

	7. மரத்தடிகளில் ஊர்ந்து திரியக்கூடியது. காயா மரத்தடிகளில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.

	8. பாதை ஓரங்களில் திரியக்கூடியது.

	9. ஆள் அரவம் கேட்டு ஓடி ஒளிந்துகொள்ளக்கூடியது.

	10. இதன் வயிற்றுப்பகுதி சிறியதாக இருக்கும்.

	11. பஞ்சுப்பிசிர் போன்று மென்மையான உடலைக் கொண்டது.

	12. சிறுவர்கள் பிடித்து விளையாடும் அளவுக்குச் சாதுவானது (harmless).

	இத்தனை பண்புகளிலும் சிவப்பு நிறம் என்ற ஒன்றைத் தவிர ஏனையவை cochineal என அழைக்கப்படும் 
தம்பலப்பூச்சிக்கு இல்லை. எனவே, இதிலிருந்து நாம் இருவித முடிவுகளுக்கு வரலாம்.

	1. Cochineal என்றழைக்கப்படும் இந்திரகோபப்பூச்சி வேறு - மூதாய் என்றழைக்கப்படும் தம்பலப்பூச்சி வேறு. 

	2. இந்திரகோபம், தம்பலப்பூச்சி, மூதாய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பூச்சி ஒன்றே 
- ஆனால் அது cochineal என்றழைக்கப்படும் coccus cacti என்ற சப்பாத்துக்கள்ளிப் புழு அல்ல.

	இதில் முதலாவது முடிவுக்குக் காரணம் - மூதாய் என்பது பத்துப்பாட்டில் இல்லை - எட்டுத்தொகை நூல்களில் 
மட்டுமே உண்டு. கோபம் என்பது பத்துப்பாட்டிலும், எட்டுத்தொகையில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே வருகிறது. 
அதுவும் கோவச் செந்நிலம் என்ற அகநானூற்று அடிக்கு கோவம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்ட நிலம் 
எனப் பொருள் கொள்ளலாம். இது சப்பாத்துக்கள்ளியில் இருக்கும் இந்திரகோபப் புழு. 
ஆனால், இந்தக் கோபம் கொல்லை நெடுவழியில் ஊர்ந்து திரியும் என்ற சிறுபாணாற்றுப்படை அடி 
இந்த முடிவுக்கு எதிராக அமைந்துள்ளது. எனவே பத்துப்பாட்டிலும், அகம் 54-இலும் வரும் கோபம் cochineal எனப்படும் 
சப்பாத்துக்கள்ளிப் புழு அல்ல என்பது பெறப்படும். எனவே, இது நம்மை இரண்டாம் முடிவுக்கு அழைத்துச் செல்கிறது. 

	அப்படியென்றால் இது என்ன? 

	இப் பூச்சியின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தபோது இது நமது கிராமங்களில் வெகுவாக அறியப்பட்ட 
வெல்வெட் பூச்சியாக இருக்கலாம் எனத் தோன்றியது. இந்தத் தலைப்பில் வலைத்தளங்களில் தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன. 
	இது ஆங்கிலத்திலும் the red velvet mite எனப்படுகிறது. இது Trombidium grandissimum என்ற வகையைச் சேர்ந்தது. 
இதைப்பற்றிக் கிடைத்த பல தகவல்களில் கீழ்க்கண்டவை நம் மூதாய்க்குப் பொருந்திவந்தன.

	It is a red mite about half an inch long and from a quarter to three-eighths of an inch in its widest part. 
It is covered with a scarlet, velvety down, and appears on the ground at the beginning of the rainy season. 
It is only to be found for a few weeks in the year.
	The mites are visible in large numbers early in the Monsoon season and so are also called rain mites 
in the subcontinent.
	 



	எனவே, தமிழ் இலக்கியங்களில் கோபம், கோவம், மூதாய், ஈயன் மூதாய் என்று அழைக்கப்படும் இந்திரகோபம் எனப்படும் 
தம்பலப்பூச்சி என்பது வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum எனப்படும் பூச்சியே என்பது தெளிவாகும்.
	இந்திரகோபம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. எனவே அதற்குரிய உண்மைப் பொருள் அறிய வடமொழி அகராதியைத் 
(A Sanskrit-English Dictionary - Sir Monier Monier-Williams- Oxford-1899) தேடியபொழுது அதற்குக் கிடைத்த பொருள் இதுதான்:

	Indragopa - Vedic. Having Indra as one's protector, RV VIII 46,32, the insect cochineal of various kinds; 
a fire fly (in this sense also indragopaka)



	RV என்பது ரிக் வேதத்தைக் குறிக்கும். அந்த ஸ்லோகம் இதுதான்:

 - Rig Veda 8.46.32  

	Rig Veda 8.46.32, "A hundred has the sage received, Dāsa Balbūtha's and Tarukṣa's gifts. 
These are thy people, Vāyu, who rejoice with Indra for their guard, rejoice with Gods for guards." 

	Ref:INdiaDivine.org - Forum for Spiritual Discussions > Indragopa.

	Here, the compound word ‘indragopa'  is employed as : “Those men having Indra as (their) protector”.

	இந்திரகோபம்  என்பதற்கு இந்திரனால் காக்கப்படுபவர் என்ற பொருள் வடமொழியில் உண்டு எனத் தெரிகிறது. 
ஆனால், இந்திரகோபம் என்று தமிழில் சொல்லப்படுவது, இந்திரனைப் பற்றியது அல்ல. எனவே, அது இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் 
இரண்டாவது பொருளைக் (the insect cochineal of various kinds; a fire fly) கொள்ளும். இதற்குரிய விளக்கத்தை 
விக்கிபீடியா இவ்வாறு கூறுகிறது.

	From Wikipedia, the free encyclopedia:

	Cochineal - dactylopius coccus. native to tropical and subtropical South America and Mexico, this insect lives on cacti 
from the genus Opuntia, feeding on plant moisture and nutrients.

	Adult males can be distinguished from females in that males have wings, and are much smaller in size than females.
	The body of the insect and its nymphs produces the red pigment, which makes the insides of the insect look dark purple.

	இது தென்னமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள கள்ளிகளில் வசிக்கும்.  ஆண்பூச்சிகள் இறக்கைகளுடனும், 
சிறியனவாகவும் இருக்கும். இவற்றின் உடல்சிவப்பு நிறமிகளை உற்பத்தி செய்யும்.
	இது நமது உரைகாரர்கள் கூறும் இந்திரகோபப்புழு ஆகும். ஆனால், இலக்கியங்கள் கூறும் கோபம்/கோவம் என்பது இது அல்ல 
என்று முன்பே கண்டோம்.
	சங்ககாலத்தில் தமிழகத்திலும், வடநாட்டிலும் புழங்கிய மொழிகளில் முக்கியமானவைகளில் பாலி மொழியும் ஒன்றாகும். 
இது பௌத்தர்களின் சமய மொழியாகவும் இருந்தது. வடக்கிலிருந்து வந்த சமண, பௌத்தத் துறவிகள் சங்கத் தமிழகத்தில் 
நிலையாக இருந்து தமது சமயத்தை வளர்த்தனர் என்பதை மதுரைக்காஞ்சி போன்ற பல சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். 
எனவே, இந்தச் சொல்லுக்கான பொருளை, பாலி மொழி அகராதியில்
	 (PALI TEXT SOCIETY : PALI-ENGLISH DICTIONARY - RHYS DAVIDS ) 
தேடியபொழுது இந்திரகோபக என்ற சொல் கிடைத்தது. அதன் பொருள் :
	Indagopaka [inda + gopaka, cp. Vedic indragopā having Indra as protector], a sort of insect 
("cochineal, a red beetle", Böhtlingk ), observed to come out of the ground after rain - 
	Th 1, 13; Vin III.42; J IV.258; V.168; DhA I.20; Brethren p. 18, n.

	இங்கு குறிப்பிடப்படும் Böhtlingk என்பவர் ஜெர்மனி நாட்டவர். இந்தியாவைப் பற்றி ஆய்ந்தவர். 
வடமொழி நிபுணர். ஒரு வடமொழி அகராதியை உருவாக்கியிருக்கிறார். இவர் இந்திரகோபத்தை cochineal என்றே அழைத்தாலும், 
அதன் உண்மைப் பண்புகளை அறிந்திருக்கிறார். எனவே அவர் இந்தப் பூச்சியின் பெயரை மொழிபெயர்ப்பதில் தவறு செய்திருப்பினும், 
இது மழைக்காலப்பூச்சி என்று சரியாகவே குறித்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

	அடுத்ததாக Th 1, 13 என்று குறிப்பிடப்பட்டிருப்பது Theragatha , Verses of the Elder Monks என்ற பௌத்த நூலாகும். 
ஒரு பாடல் வடிவில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிடப்படும் 1,13 என்ற பாடலின் மொழிபெயர்ப்பு இதுதான்:
	
	Vanavaccha (Thag 1.13) {Thag 13}
	
	

	The color of blue-dark clouds,Glistening
	cooled with the waters
	of clear-flowing streams
	covered with ladybugs:
	those rocky crags refresh me.

	இங்கே, இந்திரகோபம் என்பது ladybugs என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  
cochineal என்பது ஒரு சிறிய சிவந்த பூச்சிக்கான இலத்தீன் பெயராகும். இதையே ஆங்கிலத்தில் இந்திரகோபத்திற்கான சொல்லாகக் 
கொண்டு, சாயம் தயாரிக்கப் பயன்படும் புழுவாக ஆக்கிவிட்டனர். இந்த ஆங்கிலச் சொல்லைப் பிரெஞ்சு மொழியில் எழுதினால் 
அது coccinelle என்றாகிறது. இதற்கு அந்த மொழியில் ladybug என்ற பொருள் உண்டு.   

	இதே பாடலின் இன்னொரு மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.

	Those rocky heights with hue of dark blue clouds
	Where lies embossed many a shining lake
	Of crystal-clear, cool waters, and whose slopes
	The 'herds of Indra' cover and bedeck:
	Those are the hills wherein my soul delights.
	
	Ref:The Buddhist Attitude Towards Nature by Lily de Silva
	()

	இந்த மொழிபெயர்ப்பு, இந்திரகோபத்தை இந்திரனோடு தொடர்புபடுத்தியிருப்பதைக் காணலாம். 
இந்திரகோபம் என்பதை இந்திர+கோபம் எனக்கொண்டு, கோபம் என்பதைக் கூட்டம், திரள் எனக்கொண்டிருக்கிறது. 
வடமொழியில் go என்பது பசுவையும் gopa என்பது பசுக்கூட்டத்தையும் குறிக்கும். எனவே, gopa என்பதே மந்தை என்ற 
பொதுச்சொல்லாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. சொல்லுக்குச் சொல் நேரான இந்த மொழிபெயர்ப்பு தவறானதே. 
இவ்வாறு தவறான மொழிபெயர்ப்புகளே நம் இந்தியநாட்டுத் தம்பலப்பூச்சி எனப்படும் velvet பூச்சியை பலவாறாகன சித்தரிப்புகளுக்குக் காரணமாயின. 
	இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் சூழலை உற்றுப் பாருங்கள். ஓடைகள் உள்ள ஈரநிலத்தில் பாறைகளில் 
மொய்த்துக்கொண்டிருக்கும் பூச்சிகள் என்று கூறியிருப்பது நமது ஈயன்மூதாயை நினைவுக்குக் கொண்டுவரவில்லையா?

	இதுதான் இந்திரகோபம் என்பதற்கு இன்னொரு சான்றையும் காணலாம்.

	Bhaktivedanta VedaBase: Śrīmad Bhāgavatam 10.20.11

	haritā haribhiḥ śaṣpair
	indragopaiś ca lohitā
	ucchilīndhra-kṛta-cchāyā
	nṛṇāḿ śrīr iva bhūr abhūt

	SYNONYMS
	haritāḥ- greenish; haribhiḥ - which is green; śaṣpaiḥ - because of the newly grown grass;
	indragopaiḥ - because of the indragopa insects; ca - and; lohitā -  reddish;
	ucchilīndhra - by the mushrooms; kṛta - afforded; chāyā - shelter;
	nṛṇām -  of men; śrīḥ - the opulence; iva - just as; bhūḥ - the earth; abhūt - became.
	
	Ref: 
\	TRANSLATION

	The newly grown grass made the earth emerald green,
	The indragopa insects added a reddish hue, 
	White mushrooms added further color and circles of shade.
	Thus the earth suddenly appeared like a rich person.

	PURPORT
	Śrīla Śrīdhara Svāmī comments that the word nṛṇām indicates men of the royal order. 
Thus the colorful display of dark green fields decorated with bright red insects and white mushroom umbrellas 
can be compared to a royal parade displaying the military strength of a king.

	Ref: 

	வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப  என்ற நமது அகநானூற்று அடிகளையும் அதன் சூழலையும் 
இந்தப் பாடலின் கருத்துக்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்!

	அடுத்து வால்மீகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் ஓர் இயற்கை வருணனையைப் பாருங்கள்>

	Flying quickly to meet their longed-for cloud, a jubilant row of herons looks like a long garland of white lotus 
flowers adorning the sky. With its new grass sprinkled with new-born red indragopa insects, the earth looks charming like a 
woman with a green blanket speckled with red conchineal wrapped tightly around her waist.

	-Valmiki Ramayana, Kishkindha-Kanda, chapter 1
	(Sugriva Detects the Presence of Rama) 

	இந்திரகோபம் என்பது மிகச் சிறிய ஒரு பூச்சி என்பதை மறுத்துரைக்க இந்தக் குறிப்பு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

	According to sage Valmiki, here in the Ramayana, the indragopa is a red bug that is big enough to be seen 
on the green grass that grows after monsoon rains began."cochineal" (the latin name for a small red insect used in dies)
and "coccinelle" (the french name for common ladybugs, not used in dyes).
	இதுவரை நாம் கண்டவற்றால், கோபம்/கோவம் என்று நம் இலக்கியங்கள் கூறுவதுவும், தம்பலப்பூச்சி என உரைகாரர்கள் 
கூறுவதுவும், இக்காலத்தில் வெல்வெட் பூச்சி என்று நாம் அழைக்கும் Trombidium grandissimum என்ற பூச்சியே. 
இதனை cochineal என அழைக்கும் அகராதிகளின் மொழிபெயர்ப்பு தவறானவை. 
	இந்தப் பூச்சியைப் பற்றிய மேலும் விரிவான விளக்கம் இதோ:
	
	Trombidium grandissimum

	The species Trombidium grandissimum is endemic to the northern parts of the Indian subcontinent. 
Alternate names for it include Bir Bahuti, Birbaboti, Scarlet Fly, Lady Fly, Velvet Buchi (Telugu term commonly 
used in Hyderabad, India), 'Aarudra Purugu' (another Telugu word from around Hyderabad, India because one sees them 
only in the season 'Aarudra'), 'Sadhaba Bohu', Oriya term meaning 'Bride of the Seafarer' owing to the red velvet coat 
and beautiful looks) and Rani Keeda (Hindi/Urdu: Queen Mite).[4] The mites are visible in large numbers early in the 
Monsoon season and so are also called rain mites in the subcontinent. In Gujarat, the term for velvet mite is "Gokal Gaay" 
or "Mama Ni Gaay". Bir Bahuti is used as an ingredient in traditional Indian medicine.
	The oil from red velvet mite "Trombidium grandissimum" is useful for paralysis. 
	It folds its legs when it comes in contact with a predator. 
The act is to protect the legs but also to place them infront of main interal organs. 
It can be clearly observed when picked up. It will unfold its legs and start moving once it feels that it's out of danger; 
and can be observed walking again after some minutes if left untouched.
	.



Also see:
www.indologica.com/volumes/vol06/vol06_art14_Lienhard.pdf
Siegfried : ON THE MEANING AND USE OF THE WORD INDRAGOPA