பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி

							இருகோட்டு அறுவையர்


	பத்துப்பாட்டு நூல்களுள் ஏழாவதாக அமைந்திருப்பது நெடுநல்வாடை என்னும் இப்பாடல். போர் மேல் சென்றிருக்கும் ஓர் அரசன் போர்க்களப் 
பாசறையில் நள்ளிரவிலும் கடமையாற்றும் நிலையினையும், அவனைப் பிரிந்துவாடும் அரசி அரண்மனை அந்தப்புரத்தில் துயரத்துடன் நள்ளிரவிலும் 
துயில்கொள்ளாமல் வாடியிருக்கும் நிலையினையும் பாடுவதாக அமைகின்றது இப் பாடல். எனவே இது அகத்திணையின்பாற்படும். ஆனால் அந்த 
அரசனின் துணையாள் ஒருவன் தன் வேலில் வேப்பம்பூவைச் சூடியிருந்தான் என்ற குறிப்பு பாடலில் காணப்படுகிறது. வேப்பம்பூ பாண்டிய மன்னனுக்கு 
உரியது. எனவே அம் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனே என்று, இப் பாடலைப் பாடிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பதாலும், அவர் 
காலத்துப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் என்பதாலும் முடிவு செய்து, இது ஒரு புறத்திணைப்பாட்டு என்று கூறுவர். சிலர் இதனை அகப்புறம் 
என்றும் கூறுவர்.
	ஒருநாள் நள்ளிரவில் பருவகாலத்து முதல்மழை பெருமழையாய்ப் பெய்கிறது. குளிர் காற்று வீசி, பல்வேறு உயிரினங்களை நடுங்க 
வைக்கிறது. மதுரை அருகே உள்ள ஒரு மலைத்தொடரில் மாட்டுக்கிடை போட்டிருக்கும் கோவலர்கள் விடியற்காலக் குளிரில் தீமூட்டிக் குளிர்காயும் 
காட்சியில் பாடல் தொடங்குகிறது, பின்னர், அங்கிருக்கும் விலங்குகள், பறவைகள், நெல்வயல்கள், கமுகுத்தோப்புகள் ஆகியவை அந்தக் குளிரை 
எவ்வாறு எதிர்கொள்கின்றன என்று தொடர்ச்சியாக விவரித்து ஆற்றங்கரை வழியே நம்மை அழைத்துவரும் புலவர் நக்கீரர், ஓரிடத்தில் கரையேறி, 
மாடம் ஓங்கிய மல்லல் மூதூரான மதுரை நகர்நோக்கிச் செல்லும் ஓர் அகன்ற தெருவில் சில விந்தை மனிதர்களைக் காட்டுகிறார். 
அவர்கள்,

	மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
	ஆறு கிடந்தன்ன அகல் நெடும் தெருவில்
	படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணிதோள்
	முடலை யாக்கை முழுவலி மாக்கள் - நெடு.31-32

	இவர்கள் பச்சிலை போன்ற இலை, தழைகளினால் செய்யப்பட்ட ஒரு மாலையைத் தலையில் அணிந்திருக்கிறார்கள். (படலைக் கண்ணி).
பருத்த, அழகிய, வலிமையான, ‘கிண்'-ணென்ற தோள்களை உடையவர்கள் (பரேர் எறுழ் திணி தோள்). முறுக்கேறிய உடலை உடையவர்கள் 
(முடலை யாக்கை). உடம்பு முழுக்க வலிமை குடிகொண்டிருப்பது போன்ற மாந்தர் (முழு வலி மாக்கள்).
	இவர்கள் இன்னார் என்ற குறிப்புகள் நூலில் இல்லை. ஆனால் இதே அடிகள் பெரும்பாணாற்றுப்படையிலும் காணப்படுகின்றன. அங்குக் 
குறிப்பிடப்படும் மாந்தர், நீண்ட தனிவழியே உப்பை எடுத்துச் செல்லும் உப்பு வணிகரான உமணரின் உப்பு வண்டிகளுக்குக் காவலாக, வண்டித் 
தொடரின் இரு பக்கங்களிலும் காவல் காத்துச் செல்பவராகக் குறிப்பிடப்படுகிறார்கள்.

	கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
	படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணிதோள்
	முடலை யாக்கை முழுவலி மாக்கள்
	சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
	பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப -  பெரும். 59 - 63.

	இதன் பொருள்:

	கிளைகளில் பூங்கொத்துகளையுடைய வேம்பின் மேன்மையையுடைய இலையை இடையிடையே கட்டிய
	தழை கலந்த மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்
	முறுக்குண்ட உடம்பினையும், நிரம்பிய மெய்வலிமையினையும் உடைய மக்கள்
	சிறிய துளையினையுடைய வளைந்த நுகத்தின்கண் (எருதுகள்)ஒருவழிப்படுமாறு வரிசையாகக் கட்டின
	பெரிய கயிற்றையுடையனவாகிய மாட்டுவண்டி வரிசையைப் இரண்டு பக்கங்களிலும் பாதுகாத்துச்செல்ல,

	நெடுநல்வாடையில் காணப்படும் மக்களைப் பற்றிய அதே வருணனை இங்கும் வருவதைக் கவனியுங்கள். ஆனால் இங்கு அவர்கள் உப்பு 
வண்டிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வீரர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
	அடுத்து, முல்லைப்பாட்டு என்னும் பத்துப்பாட்டு நூலில், போர்மேற் சென்றிருக்கும் மன்னனின் பாசறையில் உள்ள மன்னனின் அறையை 
உருவாக்கி, அதனைக் காக்கும் வீரர்களாக யவனர் இருந்திருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

	மத்திகை வ¨ளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
	மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து 
	வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - முல். 59 - 62

	இதன் பொருள்:

	கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
	சட்டை அணிந்த அச்சம் வரும் தோற்றத்தையும்,				
	வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

	இந்த யவனர்கள் வலி புணர் யாக்கை வன்கண் யவனர் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றனர்.

	இந்த மூன்று குறிப்புகளையும் ஒப்புநோக்கிப் பார்த்தால் நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் முழுவலி மாக்கள் யவனர்களாக இருக்கலாம் 
என்று யூகிக்க இடமுண்டு. 

	அறிஞர்.மா.இராசமாணிக்கனார் தாம் எழுதியுள்ள ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்ற அரியதொரு நூலில் நெடுநல்வாடையில் 31,35-ஆகிய 
அடிகளில் யவனர் குறிப்பிடப்படுகின்றனர் எனக் கூறுகிறார்.
	அடுத்து, மதுரையில் இன்று புகைவண்டி நிலையம் இருக்குமிடத்திற்கு வடக்கே, ஹார்வி ஆலை (Harvey Mills) என்ற ஒரு பஞ்சாலை 
உண்டு. அது பின்னர், மதுரா ஆலை(Madura Mills) என்ற பெயர்மாற்றம் பெற்று, இன்றைக்கு மதுரா கோட்ஸ் (Madura coats) என்று 
அழைக்கப்படுகிறது. இந்த ஆலை கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கத் தோண்டியபோது அங்கு ரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. எனவே, 
அந்த இடம் அந்நாளில் ரோமர் குடியிருப்பாக இருந்திருக்கலாம். அது அரசரடியிலிருந்து செல்லும் இரு சாலைகளுக்கும் நடுவே நகர் எல்லைக்கு 
அருகில் இருக்கிறது. அந்த இரு சாலைகளுமே ஆறு கிடந்தன்ன அகல்பெரும் தெருக்கள் என்று சொல்லப் பொருத்தமானவை. எனவே நக்கீரர் 
நகருக்குள் நுழையும் பாதையில் காட்டுபவர் இந்த யவனர்களே எனத் துணியலாம்.

	அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

	வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
	துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து
	இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர - நெடு. 33-35

	இந்த யவனர்கள் தங்கள் விருப்பப்படி, அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்-டிருக்கிறார்கள் (வேண்டு வயின் திரிதர). எனவே அவர்கள் 
தங்கள் வசம் இல்லை - மதுவுண்ட களிப்பில் மனம்போனபடி திரிந்துகொண்டிருக்கிறார்கள் (வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து) எனத் தெரிகிறது.
அவர்கள் கையில் வைத்திருக்கும் மதுக் குவளைகளில் தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன (வண்டு மூசு தேறல்). அவர்கள் தம் நாட்டிலிருந்து 
கொணர்ந்த பழரச மதுபான வகைகளில் ஒன்றாக அது இருந்திருக்கலாம். 

	யவனர் தந்த வினை மாண் நன் கலம் - அகம் 149/9
	யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் - புறம் 56/18

என்ற அடிகள் இதற்குச் சான்று. இந்தப் புறப்பாடல், இதே நக்கீரர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடிய பாடல் ஆகும். 
எனவே நெடுநல்வாடை முழுவலி மாக்கள் யவனரே என்பதற்கு இது இன்னுமொரு சான்று. 

	இவைமட்டுமல்ல இன்னும் வேறு சான்றுகளையும் பார்ப்போம்.

	இந்த யவனர்கள் தங்கள் தலைகளில் படலைக் கண்ணியைச் சூடியிருக்கிறார்கள். படலை என்பது பச்சிலை போன்ற இலை தழைகள். 
கண்ணி என்பது ஆண்கள் தலையில் அணியும் மாலை. சங்க இலக்கியங்கள் எத்தனையோ விதமான கண்ணிகளைப் பற்றிக் கூறுகின்றன. ஆனால், 
படலைக் கண்ணி, பெரும்பாணாற்றுப்படையிலும், நெடுநல்வாடையிலும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாட்டு இடையர்கள் பூக்கள் கலந்த 
படலைக் கண்ணி அணிந்திருந்தனர் என்று பெரும்பாணாற்றுப்படை வேறோர் இடத்தில் (அடி 174) குறிப்பிடுகிறது. 

	பல் பூ மிடைந்த படலைக் கண்ணி - பெரும் 174. 

	ஆனால், பூக்கள் கலவாத படலைக் கண்ணியைப் பெரும்பாணாற்றுப்படையின் உப்பு வணிகர் வண்டிகளின் காவலாளிகளும், நெடுநல்வாடை
முழுவலி மாக்களும்தான் அணிந்திருந்ததாக அறிகிறோம். அக் காலத்து உரோம நாட்டினர் பூக்கள், இலைகளால் ஆன பலவிதமான தலைமாலைகளை 
(Head wreath) அணிந்திருந்ததாக அறிகிறோம். உரோமப் பேரரசர்கள் ஒலிவ இலைகளால் ஆன தலைமாலையையே தம் முடியாக (கிரீடமாக) 
அணிந்திருந்தனர். இயேசுவைப் பிடித்த உரோம வீரர்கள், அவர் தன்னை யூதர்களின் அரசர் என்று சொல்லிக்கொண்டதால், அவரை ஏளனம் செய்ய, 
அவருக்கு முட்செடியால் ஆன முடியைத் தலையில் அணிந்ததாக விவிலியம் கூறுகிறது. அரசர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் விழாக் காலங்களில் 
தலைமாலை அணிந்துகொண்டனர். இந்தத் தலைமாலை corona எனப்பட்டது. இதில் பலவகை உண்டு.

	The Roman Crowns and Wreaths worn by Emperors were called Corona Radiata. Corona Convivialis were Roman crowns and 
wreaths worn in private parties celebrating Roman Festivals and made of various flowers or shrubs, such as roses, violets, myrtle, ivy and 
even parsley. (http://www.roman-colosseum.info/roman-clothing/roman-crowns-and-wreaths.htm)

	இங்கு   Parsley  என்பது aromatic leaves - அதாவது மணம் மிக்க இலைகள் - நமது பச்சிலை போல. புலவர் குறிப்பிடும் நாள் அந்த 
யவனர்களுக்கு ஏதோ ஒரு விழாநாள் போலும். எனவே, அதைக் கொண்டாடும் வகையில் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டுத் தலைமாலையுடன் 
தள்ளாட்டம் போடுகின்றனர்.

	

	இவர்களுக்குச் சாரல் மழை ஒரு பொருட்டல்ல (துவலைத் தண்துளி பேணார்). குளிர்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நம்மூர் மழையும் குளிரும் 
ஒரு பொருட்டா? களிப்பு மிகுதியால் (மகிழ்சிறந்து) தன்னிலை மறக்கிறார்கள். இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர என்கிறார் புலவர். 
இதற்கு, முன்னும் பின்னும் தொங்கலாக நால விட்ட துகிலினை உடையராய் என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். ஏனையோரும் இவரை 
ஒட்டியே பொருள் கூறுகின்றனர். இதற்கு என்ன பொருள்? பொதுவாக முன்னும் பின்னும் தொங்கவிடுவது துண்டு. அது அறுவை எனப்படாது. 
அறுவை என்பது நீளமானது. வேட்டி எனலாம். எனவே, வேட்டி போன்ற ஒரு வெண்மையான நீளமான துணியைத் தோளில் போட்டுக்கொண்டனர் 
எனலாம். துண்டையோ அல்லது ஒரு நீளமான துணியையோ தோளில் போடும்போது மிகப்பெரும்பாலும் தோளுக்கு முன்னும் பின்னுமாகத் தான் 
தொங்க விடுவது வழக்கம். பின்னர் எதற்காக இருகோட்டு அறுவையர் என்று சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்? எனவே, இருகோட்டு அறுவை 
என்பதில் ஒரு அழுத்தமும் சிறப்புப்பொருளும் இருப்பதாகத் தோன்றுகிறது.
	உரோமர்களின் அன்றைய உடுப்பு வகைகளைப் பார்க்கும்போது, சாதாரண நிலையில் அவர்கள் Tunic, Toga என்ற இருவகை 
மேலாடைகளை உடுத்தியிருக்கின்றனர் என அறிகிறோம். இதில் Tunic என்பது தொடைவரை அணியும் அங்கியாகும். இதனை நம் இலக்கியங்கள் 
மெய்ப்பை என்னும். இதற்கு மேலே நீளமான ஒரு துணியை அவர்கள் உடம்பைச் சுற்றி அணிவர். அது Toga ஆகும். Tunic இல்லாமலேயே Toga 
அணிந்துகொள்ளலாம். டோகா பற்றி விக்கிப்பீடியா கூறுவது: (http://en.wikipedia.org/wiki/Ancient_Rome)

	The toga, a distinctive garment of Ancient Rome, was a cloth of perhaps 20 ft (6 m) in length which was wrapped around the 
	body and was generally worn over a tunic (http://en.wikipedia.org/wiki/Tunic)

	After the 2nd century BC, the toga was a garment worn exclusively by men, and only Roman citizens were allowed to wear the 
	toga. .. it was considered the only decent attire out-of-doors. (http://en.wikipedia.org/wiki/Roman_citizenship)

	As early as the 2nd century BC, and probably even before, the toga (along with the calceus was looked upon as the characteristic 
	badge of Roman citizenship. Because the toga was not worn by soldiers, it was regarded as a sign of peace.
	(http://en.wikipedia.org/w/index.php?title=Calceus&action=edit&redlink=1)

	A toga is made by holding a piece of cloth under the right arm, half behind, half in front. The back part is folded over the left 
	shoulder, and the front part is then folded over the left shoulder too. (http://en.wikipedia.org/wiki/Toga)

	There were many kinds of togae, each used differently.
	Toga virilis (toga alba or toga pura): A plain white toga worn on formal occasions by most Roman men of legal age, generally 
	about 14 to 18 years, but it could be any stage in their teens. The first wearing of the toga virilis was part of the celebrations 
	on reaching maturity.

	Toga - வை எப்படி அணிவது என்பதைப் படித்தீர்களா?. நீண்ட துணியின் (அறுவை) நடுப்பகுதியை வலது அக்குளில் இடுக்கிக்கொண்டு, 
பின்பாதியை முதுகுப்பக்கம் இழுத்து, இடதுபக்கத் தோளின் மேல் முன் பக்கமாய்த் தொங்கப்போடவேண்டும். முன்பாதியை, மார்புக்குக் குறுக்காகக் 
கொண்டுவந்து அதனையும் இடது பக்கத் தோளினில் பின் பக்கமாய்த் தொங்கப்போடவேண்டும். இதுவே இருகோட்டு அறுவை!! எனவே, இத்தகைய 
அகக்குறிப்புகளாலும், புறக்குறிப்புகளாலும், நெடுநல்வாடை குறிப்பிடும் முழுவலி மாக்கள் யவனர் என்றே துணியலாம். மேலும் இருகோட்டு அறுவை 
என்பது யவனர்கள் அணியும் டோகா என்ற துணியமைப்பு. துவலைத் தண்துளி பேணாராய் வேண்டுவயின் திரிதரும் இந்த யவனர்கள் மேனாட்டினர். 
நம் ஊர் வாடையையும் தூறலையும் மகிழ்வுடன் எதிர்கொள்கிறார்கள்