பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்                                       6.திசை திரியும் வயங்கு வெண்மீன்
   2.இருகோல் குறிநிலை                     7.புலித்தொடர்விட்ட புனைமாண் நல் இல்
   3.இருகோட்டு அறுவையர்                8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   4.மதுரைக்காஞ்சியில் வைகை    9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   5.நிலவைக் கவ்விய பாம்பு            10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              7.புலித்தொடர்விட்ட புனைமாண் நல் இல்

	

	முல்லைப்பாட்டு என்பது சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டு என்ற தொகுதியில் ஐந்தாவது பாடலாகும். 
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்ற புலவரால் பாடப்பட்டது. 103 அடிகளைக்கொண்டு ஆசிரியப்பா என்ற 
பாவகையைச் சேர்ந்தது இப்பாடல். பத்துப்பாட்டிலுள்ள பத்துப்பாடல்களிலும் இது மிகச் சிறியதாகும். எனினும், கற்பார்க்கு மேலும் மேலும் 
விழைவுள்ளம் தோற்றுவிக்கும் நுணுக்கம் நிறைந்தது இப்பாடல் என மறைமலை அடிகளார் இந்நூலை வியந்து போற்றுவார். கார்காலத்துத் 
திரும்பிவருவேன் என்று கூறிவிட்டுப் போர்மேற் சென்றிருக்கும் அரசனுக்காகக் காத்திருக்கும் அரசி, கார்காலம் வந்தும் மன்னன் 
வரவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் நிலையை இனிமையுடன் எடுத்துரைக்கும் இப் பாடல். இப் பாடலில், போர்மேற் சென்றிருக்கும் 
தலைவன் தன் படைக்குப் பாசறை அமைக்கும் முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

	மன்னனின் போர்ப்பாசறையில் ஒரு பகுதியாக, மன்னனுக்குரிய இருப்பிடமே புனை மாண் நல் இல் எனப்படுகிறது. 
இதனை யவனர்கள் அமைத்துக் கொடுப்பதாகப் புலவர் குறிப்பிடுகிறார். 

	மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
	மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
	வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
	புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல். 59 - 62 

	என்ற அடிகளில் வரும் புலித்தொடர் விட்ட என்ற தொடரே இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

	மேலே கொடுக்கப்பட்டுள்ள அடிகளுக்குரிய அடிநேர் உரை இதுதான்:

	கசை சுற்றிய, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
	சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,					
	வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
	புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில்,

	(மத்திகை=சவுக்கு,சாட்டை; மறி=கீழ்மேலாகு; மெய்ப்பை=சட்டை; வெருவரும்= அச்சம்தரும்; வன்கண்=கடுமை; 
	யவனர்= உரோமர், கிரேக்கர்; தொடர்=சங்கிலி; புனை=செய்தல்;)

	பாசறையில் மற்றப் பகுதிகளையெல்லாம் மன்னனின் படைவீரர் அமைக்க, மன்னன் தங்குமிடத்தை மட்டும் யவனர் கட்டினர் என்று 
புலவர் கூறுகிறார். யவனர் என்போர் இன்ன நாட்டினர் என்று திட்டமாகக் கூறமுடியவில்லை. அயோனியர் (Ionians) எனப்படும் கிரேக்கராகவோ 
அல்லது உரோமையராகவோ (Romans) இருக்கலாம். கிரேக்கர்கள் கி.மு 3-ஆம் நூற்றாண்டு அளவில் கீழைநாடுகளோடு கடல்வணிகத் 
தொடர்பு கொண்டிருந்தனர் என்றும், அதன் பின்னர் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை உரோமையர் நம் நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் 
என்றும் வரலாற்றறிஞர்கள் கூறுவர். மூன்று அடிகளில் யவனர்களைப் பற்றிய ஒரு முழுத்தோற்றத்தைப் புலவர் விவரித்துள்ளார். 
	
	மறிந்து வீங்கு செறிவு உடை என்று யவனரின் உடை கூறப்படுகிறது. மறி என்பதற்குத் தலைகீழாகு என்று பொருள். 
எரி மறிந்து அன்ன நாவின் (சிறு. 196) என்பதில் ‘தீச்சுடர் தலைகீழாக இருப்பதைப் போன்ற நா' என்று பொருள் கொள்ளப்படுகிறது. 
எனவே தலைகீழாகத் தொங்கிப் புடைத்துக்கொண்ட உடையை அவர்கள் உடுத்தியிருந்தனர். அதன் மேல் இடுப்பைச் சுற்றிக் கயிற்றை 
இறுகக் கட்டியுள்ளனர். அக் கயிறு மத்திகை எனப்படுகிறது. இதற்குக் குதிரையை விரட்டும் சாட்டை அல்லது கசை (whip) என்று பொருள். 
கசை போன்ற இடுப்புவார் (belt) அணிந்திருந்தனர் எனக் கொள்ளலாம்.



	மேலேயுள்ள மாதிரிப் படங்களில், முதற்படத்தில் காணப்படுவது அன்றைய கிரேக்க வீரர்கள். அடுத்த இரு படங்களிலும் இருப்பவர்கள் 
உரோம வீரர்கள். இன்றைக்குப் பெண்சிறுமிகள் அணியும் அங்கி (frock) போன்ற ஒரு உடையை அவர்கள் அணிந்திருப்பதைக் காணலாம். 
குழந்தைகளுக்கு அங்கி போடும்போது, கைகளை உயர்த்தித் தலை வழியாகக் கீழிறக்கிப் போடுவது, அல்லது கால்கள் வழியாக மேலே 
இழுத்துப் போடுவது என இரண்டு விதமாகப் போடலாம். ஒருவேளை வீரர்கள் என்பதால், கண்களை எப்போதும் மூடாத வண்ணம், 
கால்வழியாக அங்கியை அவர்கள் அணிந்திருக்கலாம். அல்லது, அங்கியின் பெரிய திறப்புக் கீழேயும், தலைக்கான சிறிய திறப்பு மேலேயும் 
இருந்ததினால், அங்கி தலைகீழாய்த் தொங்குவது போல் தோன்றியிருக்கிறது அன்றைய தமிழர்களுக்கு! 
	இந்த அங்கியின் மேல் இடுப்பைச் சுற்றி இறுகக் கயிறு கட்டியிருப்பர். வீரர்களாதலால், இந்த அங்கியின் மேல் அவர்கள் இறுக்கமான 
பாதுகாப்புக் கவசம் அணிந்திருப்பர். அதுவே இங்கு மெய்ப்பை எனப்படுகிறது. அன்றைய தமிழர்கள் சட்டை அணியும் பழக்கம் இல்லாதவர்கள். 
துணிகளை வெட்டிக் கையினால் தைக்கும் பழக்கம் நம்மிடம் இருந்ததில்லை. ஆண்களுக்கு, இடுப்பில் ஒரு வேட்டி, மேலே ஒரு துண்டு, 
இடையில் ஒரு கோவணம், அவ்வளவுதான். மன்னர்கள் மூடாத மார்பில் அணிகலன்கள் அணிந்திருப்பர். பெண்களுக்குச் சேலை, மார்க்கச்சு 
அவ்வளவுதான். ஏழைப் பெண்களுக்குச் சேலை மட்டும்தான். இன்றைக்கும் கிராமங்களில் சட்டையில்லாமல் வெறும் சேலை மட்டும் அணிந்த 
பாட்டிமார்களைக் காணலாம். எனவே, வெட்டித் தைத்த ஆடைகள் அணிந்த மேல்நாட்டினரை நமது ஆட்கள் வியப்போடு பார்த்திருக்கின்றனர். 
அவர்களின் ஆடை இலக்கியங்களின் இடம்பெறும் அளவுக்குப் புதுமையாக இருந்திருக்கிறது. யவனர்கள் இயற்கையிலேயே 
நல்ல உயரம் கொண்டவர்கள், வலிமை மிக்க உடம்பைப் பெற்றவர்கள். ஒழுங்கான உடற்பயிற்சி மூலம் தசைகளை இறுக்கிக் கொண்டவர்கள். 
இதையேதான் புலவர் வலிபுணர் யாக்கை என்கிறார். பொதுவாக இந்தியர்களும், குறிப்பாகத் தமிழர்களும் இயற்கையில் இரக்க குணம் மிகுந்தவர்கள். 
இளகிய மனம் படைத்தவர்கள். யாரிடமும் மிகக் கடுமையாக நடந்துகொள்ளமாட்டார்கள். ஒருசில விதிவிலக்குகள் எதற்கும் உண்டு. 
ஆனால் இன்றைக்கும் மேல்நாட்டினர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். உடன்பிறப்பே என்றாலும், அவர்கள் வீட்டிற்குச் சென்றால், 
முன்னரே அறிவித்து, அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும். பெற்றவர்கள் கூடப் பிள்ளைகளிடம் காசுகொடுத்துச் சாப்பிடும் கதைகள் அங்கு உண்டு. 
எந்த விதியையும் யாருக்காகவும் விட்டுத்தரவோ, தளர்த்தவோ மாட்டார்கள். இது அன்றைக்கும் மேல்நாட்டார் குணமாக இருந்திருக்கிறது. 
இத்தகைய கண்டிப்புடன் கூடிய கடுமையைத் தான் வன்கண் என்று புலவர் குறிப்பிடுகிறார்.
	யவனர்கள் கலைத் தொழிலில் வல்லவர்கள். மிகவும் திருத்தமான முழுமை (perfection) கொண்ட சிலைகளை வடிப்பதில் 
கைதேர்ந்தவர்கள். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் அவர்கள் வடித்த ஒப்பற்ற சிலைகள் இன்றைக்கும் காக்கப்படுகின்றன. சிலைகள் மட்டுமல்ல, 
கட்டடக் கலையிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்திருந்தனர். எந்தப் பொருளையும் கலை உணர்வோடு மிக நேர்த்தியாகவும் செம்மையாகவும் 
செய்யவதில் வல்லவர்கள். 

	யவனர், ஓதிம விளக்கின் - பெரும் 316,317
	யவனர் இயற்றிய வினை மாண் பாவை - நெடு 101

	என்று பிற இடங்களிலும் காணலாம். குறிப்பாக, கயிறுகளால் குடில்கள் (tent) அமைப்பதில் அவர்கள் சூரர்கள். 
அவர்களைக் கொண்டு மன்னனுக்கு அழகான ஒரு குடில் அமைக்கப்படுகிறது. இதனையே புனை மாண் நல் இல் எனப் புலவர் கூறுகிறார். 
யவன வீரர்களின் போர்ப்பாசறைக் குடில், அவர்களின் தலைவனுக்கான அலங்கரிக்கப்பட்ட குடில் ஆகியவற்றின் மாதிரிப்படங்கள் 
இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நல்ல இல்லம் தான் அன்றைய தமிழ் மன்னனுக்கும் உருவாக்கப்பட்டது போலும்.



	இவற்றோடு கூட புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில் என்றும் புலவர் கூறுகிறார். 
புலிச்சங்கிலி விடப்பட்ட என்று எல்லா உரையாசிரியர்களும் இதற்குப் பொருள் கூறியிருக்கிறார்கள். ஆனால் விளக்கங்கள் இல்லை. 
திரு. இரகுநாதன் மட்டும் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘This is nowhere explained; probably the chain was made of linked parts 
in the likeness of tiger' என்று கூறுகிறார். 

	புலிக்கண் கல் (tiger eye gem) என்ற ஆபரணக்கல்லான ஒரு விலையுயர்ந்த கல் ஒன்றைப்பற்றிய குறிப்பில் இந்தக் கல்லால் 
செய்யப்பட்ட அணிகலன்களை உரோமப் போர்வீரர்கள் அணிந்-திருந்தனர் என்று அறியமுடிகிறது. 
ஆபரணக்கல் பற்றிய களஞ்சியம் (encyclopaedia of gems) ஒன்றில் ‘Tiger Eye is used for focusing the mind. It is said that 
Tiger Eye offers protection during travel, strengthens convictions and confidence. Roman soldiers wore tiger's-eye for protection in battle.' 
என்ற குறிப்பு காணப்படுகிறது. எனவே, யவனர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் குடிலின் வாசலில், அவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றபடி, 
ஒரு புலிக்கண்சங்கிலியைத் தொங்கவிட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அது, முழுவதும் புலிக்கண் கல்லால் ஆன சங்கிலியாகவோ 
அல்லது ஒன்றிரண்டு புலிக்கண்கற்களைப் பதித்த தங்கச் சங்கிலியாகவோ இருந்திருக்கலாம். (கீழே உள்ள படத்தில் காண்க)



	எனவே, இந்த மாதிரியான சங்கிலியைத் தான் புலவர் புலித்தொடர் என்று கூறியிருப்பார் எனக் கொள்ளலாம்.